பேரமைதி…

கொதிக்கும் உலைக்களமாய்
எண்ணங்கள் ஆட்கொள்ள
அவ்வெண்ணங்களின் பிடியில்
நான்

அப்பிடியைத் தளர்த்தி
விடுபட முயன்று
வெளியேறத் துடிக்கிறேன்

உடும்பு பிடியாய் உள்ளது

கோபம் கொண்டு
எட்டி உதைத்துத்
தப்பிக்கப் பார்க்கிறேன்
அயற்சி ஏற்பட்டு
வலுவிழக்கும் வேளையில்
முயற்சியை விடுத்து
சும்மா இருந்தேன்

கண்மூடி நீண்ட
சுவாசத்தை இழுத்துவிட்டு
கண் திறக்கும்முன்
மனதில் எப்பொழுதும்
இல்லாத பேரமைதி

~பிரியமுடன் பிரியா 🙏🏻

தராசு…

தராசின் ஒருபக்கம் தினக்கூலி மறுபக்கம் சுரண்டல் வர்க்கம்…
மேலே போகிறது தினக்கூலி பக்கம் …
மறுபக்கத்தில் அவர்களின் உழைப்பைச் சுரண்டி எடை கல்லாய் வைக்க…
உடன்பாடில்லா உடன்பாடாக
வறுமைக்கோட்டின் தலையில்…
பகல் கொள்ளை பகிரங்கமாக அரங்கேறியது.

~பிரியமுடன் பிரியா 🙏🏻

அம்மா காக்கை…

கருமை நிறம் கொண்டவரைக் கண்டாலே தொட்டால் எடுத்துப் பொட்டு வைத்துக் கொள்ளும் கருமை வண்ணமென முகம் சுளித்தவரும்
உப்புமா அடிப்பிடித்தாலே காந்தல் கருப்பாக இருக்கிறதெனச் சாப்பிடாமல் தவிர்த்தவரும்
மாநிறம் கூட மருமகளாக வரத் தகுதியில்லையென நினைத்தவரும்
கொண்ட பக்கத்துவீட்டு செவத்த மாமியின் திதியன்று அதே குணம்கொண்ட அவர் மகன் அன்னம் வைத்து உணவூட்டலுக்கு
கா காவென அழைக்க வந்ததோ ஓர் அண்டம் காக்கை.
அண்டம் காக்கை உருவில் அம்மாவைக் கண்ட மகனின் மனதில் படிந்த கருமைக்குப் பலத்த அடி.

~பிரியமுடன் பிரியா 🙏🏻

கனவிடம் ஒரு விண்ணப்பம்…

இரைச்சல் இல்லா பேரமைதி கொண்ட நாளொன்றில் மக்கள் செவ்வெனே கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
மனதிற்கு நெருக்கமானவர்கள் இன்பத்தை மட்டுமே அளித்து எதிர்பார்ப்புகளை விருப்பமுடன் பூர்த்திச் செய்கின்றனர்.
அரசியல் என்ற வார்த்தை அகராதியில் இல்லாமல் அழிந்து போக வண்ணாத்திப் பூச்சி போல மனம் ஆனந்தத்தில் பறக்கிறது.
தீடிரென பக்கவாட்டிலிருந்து எழுப்பொலி சத்தம் காதைப் பிளக்க அடித்துப் பிடித்து எழ கண்டது கனவு என்று தெரிந்தது.
நினைவில் இருக்கையில் கனவிடம் விண்ணப்பம் வைத்தேன் ஏமாற்றம் இல்லாத கனவுகள் வேண்டுமென எங்கே கனவில் விண்ணப்பம் வைத்தால் கனவாகி விடுமோ என்று.

~பிரியமுடன் பிரியா 💕

கல்லூரி ஐக்கூ…

நல்ல விலைக்கு
ஆண்டுதோறும் விற்பனை
கல்லூரி சீட்டு..!

கடைகளில் விற்கிறார்கள்
கல்லூரியில் விற்கிறார்கள்
பட்டங்கள்..!

கடன் வாங்கி கொடுத்தான்
வசூல் செய்கிறான்
மருத்துவர் கட்டணம்..!

ஆராய்ச்சி செய்யவில்லை
ஆனாலும் பெற்றான்
நூலில் பட்டம்..!

காற்று அடிக்க
வானில் சிறகில்லாமல் பறந்தது
நூலில் பட்டம்..!

~பிரியமுடன் பிரியா 🙏🏻

ஒப்புரவு ஒழுகு…

கடமை அறிந்து
காலத்தில் பணியாற்று
நேர்மை வழி நடந்து
நல்லனவற்றைச் செய்
மெய்வழியில் நடந்து
பொய்மை தவிர்
கற்ற நெறியில் நடந்து
அறத்தில் நில்
ஒற்றுமை கடைப்பிடித்து
ஊரோடு வாழ்
பல்லுயிர் மதித்து
ஒப்புரவு ஒழுகு..!

~பிரியமுடன் பிரியா

பனித்துளி போத்தி இருக்கும்…

மழ மும்மாரி பெஞ்சதிலே
மாரியாத்தா மனசு வெச்சதில
முத்து முத்தா நெல்லு வெதச்சதிலே
பொழுது விடிஞ்ச வேளையில

உழுதவன் கணக்கு பாத்தா
ஒன்னும் மிஞ்சல சொல்லித்
திரிஞ்ச காலம் போகனுமுன்னு
தாயி உம்மகிட்ட வேண்டிகிட்டு
பொறந்த பொண்ண பொக்கிசமா
புகுந்த வூட்டுக்கு அனுப்பும் நேக்கில
பொத்தி பொத்தி வளத்த நாத்த
நல்ல நாளா பாத்து பாத்தியில காலவெச்சு
பனித்துளி போத்தி இருக்கும்
பச்ச இளங்குருத்தப் பக்குவமா பிரிச்செடுத்து
கட்டா கட்டிக் கொண்டு போறேனாத்தா

தலமேல சுமக்கும் பாரங்கூட வருங்கால நல்ல சேதி சொல்லுதாத்தா
சலசலத்து ஓடும் வாய்க்கால்கூட குலவிச் சத்தம் போடுதாத்தா
மச்சானின் மண்வெட்டி ஓசைகூட எசப்பாட்டுப் பாடுதாத்தா
பறக்கும் தும்பிகூட வாசத்தில சொக்கி
மயங்குதாத்தா
படபடக்கும் பட்டாம்பூச்சிகூட அசஞ்சு நிக்குதாத்தா
சேத்துவயல் தவளக்கூட வாயார வாழ்த்து பாடுதாத்தா
விருந்தாளி கொக்குகூட சேதி சொல்லி
விட்டதாத்தா
அந்திசாயும் வேளையில வந்துகூட ஆட்டம் ஆடுமென ஆத்தா

அத்தனையும் கூடி நிக்க
ஆத்தா மகமாயி உன்ன கையெடுத்துக் கும்பிட்டு நாத்து நட்டேனாத்தா
பொன்னாகப் பூமி வெளஞ்சு கண்ணு நெறயச் சந்தோசம் பொங்குமாத்தா
குறை ஒன்னும் வைக்காம காலத்தில பொங்கல் வைப்பேனாத்தா
உங்குழந்த எனக்காக்க உனக்கு தெரியும்மாத்தா..!

~பிரியமுடன் பிரியா 💕

இன்னார்க்கு இன்னாரென…

கானகத்தில் பசிக்குப்
பழுத்த கனியுண்டம்மா
தாகம் தீர்க்க
அருவி நீருண்டம்மா
தாவி விளையாட
கிளை மரமுண்டம்மா

குடும்பத்துடன் குதூகலமாய்
கூடி வாழ்ந்தேனம்மா
சிரித்து மகிழ்ந்து
குட்டிகளுடன் ஆடித்
திரிந்தேனம்மா

ஆறறிவு மனிதன்
ஆறாமறிவு இழந்தானம்மா
அழித்தான் வனத்தை
இழந்தேன் குடுபத்தையம்மா
நாதியற்று ஊருக்குள்
நுழைந்தேனம்மா…

வசிக்க ஓரிடம் தேடி
வீதியில் அலைந்தேனம்மா
வந்த வழியில்
உனை கண்டேனம்மா
வெயிலில் உன்முகம்
வாடிக்கிடந்ததம்மா

பார்த்த உடனே
கண்டு கொண்டேனம்மா
நீயும் யாருமில்லாமல்
வாழும் என்னினமென
அறிந்து கொண்டேனம்மா

காசு பணமில்லைனாலும்
கருணை உள்ளமம்மா
காரமிளகாய் வாசம்
கண்ணு எரியுமென
சொன்னாய்யம்மா

எங்கிட்ட பழம்
ஏதுமில்ல கொடுக்கவென
வெசனப்பட்டாயம்மா
வருத்தப்படாதே பசியில்ல
என சொன்னேனம்மா

உறவிழந்த நாம
விதிவசத்தால் சேர்ந்தோமம்மா
இன்னார்க்கு இன்னாரென
இறைவன் வகுத்த கணக்கு
இருக்குதம்மா

மனிதம் மறந்த
மாந்தரை விடப்
பாசம் மிகுந்தவனம்மா
கலங்காதே எங்காலம் வரை
காவலாக நானிருப்பேனம்மா..!

~பிரியமுடன் பிரியா 💕

அன்பின் பிறப்பிடம்…

அணைத்து
ஆறுதல் சொல்லும்
ஆதிமனிதன்
அன்பின் பிறப்பிடம்..

நலம் நலமறிய ஆவல்
மூதாட்டியிடம் விசாரிக்கும்
மூதாதையர்..

பச்சை மிளகாய் தவிரப்
பழம் இல்லையே சாமி..

ஆடு இராமா ஆடு இராமா
ஆட்டுவிக்கும் கோலில்லாமலே
ஆடியது அன்பான கிழவி கண்டு…

முகம் சுருங்கி
முடி வெளுத்து
கண் சுருங்கிக்
காணும் நீ
என் இனத்தவளோ…

விளைந்த காய்கறி
விலை போகவில்லை
வாங்க ஆளில்லை
விரைவில் வருமோ
நல்ல காலம்
ஆஞ்சநேயா…

வயோதிகத்தின்
விஞ்சிய உறவு
வீதியில் உருவான
வானர உறவு…

கிளைக்குக் கிளை
தாவினாலும்
மனிதன் கற்க வேண்டியது
மாறாமல் இருக்கும்
அன்பு உன்னிடம்…

நினைவு பெட்டகத்தில்
நிலைத்து நிற்கும்
நீக்காத சித்திரமானது…

~பிரியமுடன் பிரியா 💕

யார் இவள்..?

வானத்துத் தேவதையோ
வழிதவறி வந்ததோ
விழித்திருந்து கனவு கண்டதோ?

பௌர்ணமி முழுநிலவோ
சுடர்விட்டு மின்னுதோ
வாசலுக்கு வந்ததோ?

கம்பன் எழுதியோ கவியோ
காவியத்தின் ஓவியமோ
கண்டதும் மனம் துள்ளுதோ?

சிற்பி செதுக்கிய சிலையோ
சிமிட்டாமல் பார்ப்பதேனோ
சிந்தை மயங்குவதேனோ?

எந்தக்குல இளவரசியோ
எழில்மிகு உடையழகியோ
இளவரசனுக்குக் காத்திருந்தாளோ?

புவனத் தாரகையோ
பதியின் பதுமையோ
மனம் கவர்ந்த கள்ளியோ?

~பிரியமுடன் பிரியா 💕