கண்டேன் விழுந்தேன் காதலில்…

கண்டேன் விழுந்தேன் காதலில்…

அந்தி சாயும் வேளையில்
அழகு மலர்ச் சோலையில்
தென்றல் சன்னமாக வீசுகையில்
அன்பன் புல்லாங்குழலில்
ஆனந்த இராகம் இசைக்கையில்
தாமரை தலையாட்டி இரசிக்கையில்
கமல மொட்டுகள் மலரத் துடிக்கையில்
கானப் பறவைகள் பாட மறக்கையில்
கிள்ளைகள் பேச்சிழந்து கேட்கையில்
கன்னியிவள் கண்விழி மயங்குகையில்
கரங்கள் தோளோடு இணைகையில்
சுவாசங்கள் பரிமாறப்படுகையில்
யாக்கை இறகாகப் பறக்கையில்
மயிலாக நர்த்தனமாடுகையில்
கொலுசுகள் தாளம் சேர்க்கையில்
வண்ணாடை குடையாக விரிகையில்
கார்கூந்தல் ஆடிடும் அழகினில்
இன்ப வெள்ளம் பெருகுகையில்
இட்டம் கொண்டு கண்ணசைவில்
இருமணம் இணைய இசைகையில்
கற்பனை கொண்டு வரைந்ததில்
கண்முன்னே காட்சியாய் விரிகையில்
காவியமான ஓவியம் உயிர்பெற்றதில்
கண்டேன் விழுந்தேன் காதலில்
மீண்டும் கண்ணன் இராதையில்…

~பிரியமுடன் பிரியா 💕

தாயிற் சிறந்த கோவிலுமில்லை…

கனவில் நிறைந்து
கருவில் சுமந்து
அகிலத்தைக் காண வைத்து
நெஞ்சத்தில் நிறைத்து
உதிரத்தை உணவாக அளித்து
இமையாய் காத்து

பொத்தி வளர்த்து
பொக்கிசமாய் பாதுகாத்து
கண்ணால் அளந்து
மூக்கில் சுவை நுகர்ந்து
வகையாய் சமைத்து
உண்ணத் தந்து

தன்னலம் மறந்து
தருவாய் நிழல் தந்து
ஆசை துறந்து
அமைதியாய் இருந்து
தியாகம் பல செய்து
பாரம்பரியம் காத்து

ஆசானாய் இருந்து
அன்புடன் கண்டித்து
புத்திமதி உரைத்து
வாழ்வியல் போதித்து
வளம்பெறச் செய்து
சந்ததி காத்து

சந்தோசம் பகிர்ந்து
பாசம் பொழிந்து
சிரிப்பு மலர்ந்து
உவகை உணர்ந்து
இதயத்தில் நிலைத்து
பந்தம் தொடர்ந்து

அடுத்த சென்மம் வந்து
நீயென் சேயாய் பிறந்து
நான் சேவகம் செய்து
உவகை பெருத்து
வாழ்வாங்கு நாம் வாழ்ந்து
நிமலன் பதம்பணிந்து…

தாயிற் சிறந்த
கோவிலுமில்லை
உலகில் இணையாய்
எவருமில்லை

அனைத்து அன்னையருக்கும்
இனிய அன்னையர்
தின நல்வாழ்த்துகள்💐💐💐

~பிரியமுடன் பிரியா 💕
5/10/2020

நிலவு சாட்சியாய்…

பௌர்ணமி நிலவு தங்கமாய் சொலித்திட
கண் பார்த்து கரம் கோர்த்திட
தடம் பார்க்கா உடன் வந்திட
காற்றில் வேணுகானம் இசைத்திட
தோளில் மெய் மறந்து சாய்ந்திட
காதலில் கனவு கண்டிட
கன்னியிவள் நாணம் மேலோங்கிட
கண்ணணிவன் இராதை மனமறிந்திட
மயில் பார்த்து இரசித்திட
மரங்கள் சாமரம் வீசிட
நிலவு சாட்சியாய் மணம் புரிந்திட
நாம் வணங்கி வாழ்த்திட…

~பிரியமுடன் பிரியா 💕

ஆற்றுக் கரையோரம்…

ஆகாய சூரியன் உச்சி தொடும் வேளைதனில்
ஆற்றுக் கரையோரம் ஆளில்லா சாலையோரம்
ஆட்டுக் கூட்டமொன்று மேய்ந்து களைத்துவிட்டு
ஓடும் நீரிலே தாகம் போக்க வரத்
தாகம் தீர்ந்துவிட்டு அங்குப்
புங்க மரமிருக்கப் பூங்காற்றும் வீசிவர
வெள்ளை ஆடுகள் வெயிலுக்கு ஓய்வெடுக்கச்
செம்மறி ஆடுகள் செருக்காய் நின்றிருக்கக்
கருப்பு ஆடுகள் சில களைத்துக் கண்ணுறங்க
மேய்த்துக் களைத்த கூட்டம்
மெல்ல அமர்ந்து கஞ்சிக் குடிக்கக்
குடிக்க ஆற்று நீர் தேனாய் இனிக்க
உழைத்த கூட்டம் ஓயாமல் கதைத்துச் சிரிக்க
ஆத்தா ஆறும் கேட்டு மகிழ்ந்து
அளவில்லா ஆனந்தமுடன் என்றென்றும்
வற்றாமல் நீரை வாரி வழங்க
அனைவரும் வளமுடன் வாழ்க வாழ்கவே..!

~ பிரியமுடன் பிரியா 🙏🏻

பிரியாத நிழல்…

விட்டுப் பிரிவதில்லை
விதியால் மறைவதில்லை
தொட்டால் துவளுவதில்லை
தொடாமல் இருந்ததில்லை

இடத்திற்குத் தகுந்தபடி
பச்சோந்தியாய் மாறுவதில்லை
நிறங்களைத் தீண்டாமலே
நிசத்தில் ஓவியமானவை

சிரித்தால் சிரித்து
அழுதால் அழுது
கூடவே இருந்து
உடன் வரும் உறவு

வெளிச்சத்தில் துணையாய்
இருட்டில் காவலனாய்
தொடர்ந்து வரும்
உன்னத நட்பு

விழுந்தாலும் தாங்கிப்பிடித்து
எழுந்தாலும் நிமிர்ந்து நின்று
தன்னம்பிக்கை ஊட்டி
தட்டிக்கொடுக்கும் ஆசான்

கணக்காக வாழ்ந்திடும்
காலத்தில் வாழும்வரை
கல்லறைச் செல்லும்முன்
கண்ணுறங்கும் எம்முன்னாள்..!

~பிரியமுடன் பிரியா 🙏🏻

பாவையின் நாணமழகு…

இதயத்தின் முகத்தழகு
வழியில் இடைமறிக்க
மருதாணி சிவப்பழகு
கன்னத்தில் இடம்மாற
கண்ணின் இமையழகு
இலைக்கு இடம்பெயர
பாவையின் நாணமழகு…

ஆலிலை மூடி மறைத்தாலும்
நாணம் மறையுமோ?

கானம் இசைத்த விழியின் மணி
பார்க்கும் முன் விழி தழைத்ததோ?

தழைத்த விழிக் கண்டு தலைவன்
உள்ளம் தஞ்சமனதோ?

~ பிரியமுடன் பிரியா 💕

அடைவோம் ஞானம்…

என்றும் பிறருக்குத் தீங்கு இழைக்காது
எந்த உயிரையும் கொல்லாது
எந்தச் சூழலிலும் பொய் சொல்லாது
எப்போதும் எங்கும் திருடாது
எந்நாளும் பிறரை மதித்து நடந்து
என்றென்றும் அடக்கம் பின்பற்றி
எங்கும் நடுநிலையில் நின்று
எல்லோருக்கும் பகிர்ந்து தந்து
என்றும் மாசிலானாய் வாழ்ந்து
என்றென்றும் கள் காமம் தவிர்த்து
எட்டு இரண்டு இயமத்தில் நின்று

அகப்புறத் தூய்மை செய்து
அருள் கொண்டு பல்லுயிர் போற்றி
அரை வயிறு உண்டு ஊண் சுருக்கி
அன்றாடம் பொறுமை கடைப்பிடித்து
என்றும் செவ்வை நெறி நின்று
எங்கிருந்தாலும் உண்மை உரைத்து
எதிலும் உறுதியுடைமை நிலைத்து
எக்கணமும் காமம் களவு கொலை
என அத்தனையும் விலக்கிச் சிந்தித்து
எட்டு இரண்டு நியமத்தில் நின்று

அவ்வழி இவ்வழி எவ்வழி
ஆராயாமல் நன்னெறி நின்று
அட்டாங்க யோகம் வழியில்
நாசி துளைக் காற்றில்
நல்லனவற்ற எண்ணத்தை
நிச்சயமாய் வெளியிட்டு
நல்ல எண்ணத்தை
நினைவில் விதையிட்டு
நன்றாக உள்ளிழுத்து
உடலைப் பணித்து உள்ளத்தில்
ஓம்நமசிவாய மந்திரத்தைச் சபித்து
முத்திரையை முறையாகக் கற்று
சர்வனை நினைத்து மெய் தொட்டு
நிறைவாய் பயிற்சி செய்யப்
பராசக்தி கண் முன்னே தோன்ற
ஆதிசக்தி துணைப்பெற்று
அருட்சோதியும் சோதியின் அக்னியும்
அர்த்தநாரீசுவரரே எனயறிந்து
அடைவோம் – ஞானம்..!

~பிரியமுடன் பிரியா 🧘‍♀️

ஏகாந்தமாய் வாழ…

ஏகந்தமாய் வாழ…

இயற்கை ஆசிர்வதிக்க
பசுஞ்சோலை சூழ
மலர் மலர்ந்து மணம் பரவ
கண் குளிரக் காட்சி காண
தென்றல் உரசி மேனி சிலிர்க்க
மாலை நேர மேகக் கருவிழி
மண் நோக்கி மழை பொழிய
மண் தொட்டு கானம் பாட
காற்று வீசி மரம் சதிபோட
சிறார் கண்டு ஆனந்த குரலிசைக்க
சர்வனருளால் பெற்றோர் அமைத்த
ஏகாந்தமாய் வாழ இனிய இல்லம்…

வாழ்க வளமுடன்..!

~பிரியமுடன் பிரியா 💕

கவிதைக்கு உயிர் கொடு…

நெஞ்சின் நேசத்தை
நெருங்கியவருக்கு காட்டிட
விழியின் மணியான
உறவுக்கு வித்திட

எழும் எண்ணங்களுக்கு
உருவம் கொடுத்திட
எதிர்கால எதிர்பார்ப்புக்கு
கனவு கண்டிட

கண்ட கனவுகளை
நனவாக உணர்ந்திட
எட்டாத உயரத்தை
எழுத்தில் பிடித்திட

மன இருட்டை அகற்றி
ஒளி ஏற்றிட
இரகசிய விடயத்தைப்
பொக்கிசமாய் காத்திட

புரியாத புதிருக்கு
விடை கண்டிட
தெரியாத கேள்விக்குப்
பதில் தேடிட

ஆறாத வடுக்களுக்கு
அருமருந்து ஆகிட
மனக்குமுறலை வெளியேற்றி
மனதிற்கு ஒத்தடமாகிட

தனிமையில் இனிமை
கண்டு சுவைத்திட
தன்னம்பிக்கை நிலைத்து
தரணியில் வாழ்ந்திட

தமிழோடு உறவாடி
தமிழன்னை மடிசாய்ந்திட
அருகன் அருள்வேண்டி
அவன் தாள் பணிந்திட

உள்மனத்தின் உணர்வு
உயிர்ப்புடன் வாழ்ந்திட
வாழ்க்கையை இரசிக்கக்
கவிதைக்கு உயிர்கொடுத்திட…

~பிரியமுடன் பிரியா 💕

விழுந்த எச்சமதில்…

பச்சை உடையழகு
பாங்காக உள்ளதம்மா
ஆரஞ்சு கழுத்தாரம்
அழகு சேர்க்குதம்மா

கருப்பு இறகழகு
கண்ணைக் கவருதம்மா
சிவப்பு பழுப்பு காலழகு
சீராய் இருக்குதம்மா

கூரிய அலகால் குட்டிகளை
கொஞ்சியே மகிழுதம்மா
கூடுவிட்டுப் பிரிந்தாலும்
கூட்டாக பறக்குதம்மா

பழங்களைக் கொத்தித் தின்று
பசியைத் தணிக்குதம்மா
விழுந்த எச்சமதில்
விருட்சம் எழும்மம்மா

விரிந்த கிளையிலமர்ந்து
விருப்பமுடன் கதைக்குதம்மா
ஈன்ற மழலையுடன்
இயற்கை இரசிக்குதம்மா

கக்கத்தில் குஞ்சுகளைக்
கருத்தோடு காக்குதம்மா
காலத்தின் கூத்துகளை
கற்றுத் தருதம்மா

வேரோடு நிழல்தரும் தருவை
வெட்டிச் சாய்பதேனம்மா
வீதியில் செல்லும் மாந்தரை
வியப்புடன் கேட்குதம்மா

வானத்துப் பறவைக்கும்
வாழ்வியல் இருக்குதம்மா
வரும் ஆபத்துக்களை
விழிப்போடு கவனிக்குதம்மா

சிக்கெனப் பறந்து
சிறகை விரிக்குதம்மா
இறையருளால் இனிதே
இன்னலை கடக்குதம்மா..!

~பிரியமுடன் பிரியா 🙏🏻