ஆறாத ஆறு…

இருகரை அகலத்திற்கும் நாய்கள் சண்டையிட்டு விளையாடின.
பறக்கும் பறவைகளின் எச்சம் விழுந்து காய்ந்து கரையாமல் கிடந்தன.
கரையோர நாணல்கள் பட்டுப்போய் முகாரி இராகம் இசைத்தன.
பணத்திற்கு பேராசைப்பட்ட முதலைகள் அள்ளி குவித்து கொள்ளை அடித்தன.
இரவில் அத்துமீறி நுழைந்தவனால் இட்டபடி மானபங்கம் படுத்தப்பட்டது.
கூட்டுக் கள்வர்களின் பசிக்குப் பரிதாபமாய் இரையானது.
ஏலம் எடுத்தவனால் ஏளனமாய் கொளுத்தும் வெயிலில் ஆடை இல்லாமல் நிர்வாணமாய் ஆக்கப்பட்டது.
யாருமற்ற வெறுமையோடு விழித்துக் காப்பாற்றக் காத்திருக்கிறது இரவின்
நிசப்பத்ததில் விடிவு வந்துவிடும் என்று.

~பிரியமுடன் பிரியா

இருந்தும் இல்லாமலும்…

கேட்டுச் செய்வதில்லை மனிதநேயம்
கேளாமல் பகிர்வதில்லை ஆலோசனை
கொடுத்துக் குறைவதில்லை அன்பு
கொடுக்காமல் பெறுவதில்லை தானம்

சொல்லித் தெரிவதில்லை காதல்
சொல்லாமல் புரிவதில்லை பிணக்கு
பிரிந்து செல்வதில்லை நட்பு
பிரிக்காமல் விடுவதில்லை பகைமை

அறிந்து செய்வதில்லை தவறு
அறியாமல் பெறுவதில்லை தெளிவு
கற்று வருவதில்லை அடக்கம்
கற்காமல் தெளிவதில்லை தியானம்

எழுத்தில் வடிப்பதில்லை புரிதல்
எழுதாமல் நிலைப்பதில்லை கவிதை
கண்டு காண்பதில்லை உணர்வு
காணாமல் நனவாகவில்லை கனவு

தோல்வியில் துவளுவதில்லை தன்னம்பிக்கை
தோல்வியாகாமல் கற்பதில்லை விடாமுயற்சி
உழைப்பில் அடைவதில்லை தோல்வி
உழைக்காமல் கிடைப்பதில்லை வெற்றி

நிலைத்து நிற்பதில்லை உயிர்
நிலைக்காமல் இருப்பதில்லை புகழ்
பணத்தில் வருவதில்லை பாசம்
பணமில்லாமல் நிலைப்பதில்லை மரியாதை

பட்டுத் திருந்தவில்லை மடமை
படாமல் புரிவதில்லை கட்டம்
சுத்தத்தில் வருவதில்லை நோய்
சுத்தமில்லாமல் அழிவதில்லை நுண்கிருமி

உணர்ச்சியில் எடுப்பதில்லை முடிவு
உணர்ச்சியில்லாமல் நிலைப்பதில்லை பிணைப்பு
மறக்கக் கூடியதில்லை நன்றி
மறக்காமல் கொடுப்பதில்லை மன்னிப்பு

சுதந்திரத்தில் அடைவதில்லை பெண்ணியம்
சுதந்திரமில்லாமல் வெளிப்படுவதில்லை கருத்து
மதிப்பில் இழப்பதில்லை சுயமரியாதை
மதியாமல் நிலைப்பதில்லை உறவு

~ பிரியமுடன் பிரியா 🙏🏻

மாடப்புறாவே…

மாடப்புறாவே…

அஞ்சி இங்கும் அங்கும் பார்த்திடக்
கண்கள் மின்னக் கருமை ஆடையும்
பேழை வயிறும் பூந்துகில் சிறகும்
வன்ன முகத்தில் வனப்பு மிளிருதே
செந்தூரக் காலும் செழித்த மேனியும்
சிக்கென விருக்கும் சிறிய மூக்கும்
சொப்பு வாயும் சொற்பமாய் விரியத்
தூது சொல்லத் தூரத்திலிருந்து வந்தாயோ
இப்பொழு தென்னை இன்புறச் செய்யவே
தயங் காது திருவாய் மலர்ந்து
சொல்லாய் நல்ல சேதிதனை சுருங்க
மெல்ல வந்தமர்ந்த மாடப் புறாவே..!

பேழை – கூடை
பூந்துகில் – பூவேலை செய்த ஆடை
வன்ன – அழகிய

~பிரியமுடன் பிரியா 💕

இந்தப் பாடல் நிலைமண்டில ஆசிரியப்பாவில் அமைந்த பாடல்.
விநாயகர் அகவல் சந்தத்தில் எழுதினது.

மனிதம் மறந்தால்…

பூக்கள் உதிர்வதால்
பூஞ்செடி பூக்காமல்
இருப்பதில்லை

தேனடை சிதைவதால்
தேனீ கட்டாமல்
விடுவதில்லை

மரங்கள் வெட்டுப்படுவதால்
நிழல் தராமல்
இருப்பதில்லை

இலைகள் விழுவதால்
மரம் துளிர்க்காமல்
இருப்பதில்லை

நிலவு குளிர்வதால்
பகல் வராமல்
போவதில்லை

நொடிகள் கழிவதால்
காலம் ஓடாமல்
நிற்பதில்லை

மழலை வளர்ந்தால்
தாயன்பு குறைந்து
போவதில்லை

கடவுளை மறந்தால்
நம்மை அவன்
கைவிடுவதில்லை

மனிதம் இறந்தால்
மனிதன் வாழ்வதற்கு
அர்த்தமில்லை

~பிரியமுடன் பிரியா

எல்லாம் அவன் செயல்…

சிந்தையைத் தெளிவாக்கி
சித்தம் நலம் பெற
மனம் போகும் போக்கின்
மடமையை அடக்கிடுவாய்

உதவும் கரங்கள் நல்கி
உபத்திரவம் செய்யாமல் காத்து
மாயை கன்மம் அகற்றி
மனத்தினை நிர்மலமாக்கிடுவாய்

அழுக்காறு நீக்கி
அன்புடன் அரவணைத்து
உன் நாமம் சொல்லிடவே
அமைதி அருளிடுவாய்

ஆணவம் அழித்து ஒழித்து
அகந்தையில் நல்லெண்ணம் விதைத்து
இல்லாது தோன்றாது உள்ளது அழியாது
இன்றும் என்றும் உணர்த்திடுவாய்

எழும் எண்ணங்கள்
எல்லாம் எனையாண்டு
தடம் மாறும் தருணங்களைத்
தடுப்பது நீயின்றி வேறெவரோ?

நின்னையே கதியென்று
நின்பதம் போற்றி சரணடைய
நினைவிலே எனை ஆட்கொண்டு
நிமலனே காத்தருளிடுவாய்..!

~பிரியமுடன் பிரியா🙏🏻

முதல் தோழி…

அம்மாவின் பார்வையில்…

கனவாக இருந்தது
நனவாகத் தோளில்…

உயிர்த்தெழச் செய்தாய்
அம்மா என்ற
ஒற்றைச் சொல்லில்…

வானத்து நிலவும் இறங்கி
வந்ததோ தோள் வளைவில்
உறங்கி ஓய்வெடுக்க…

சுமையும் சுகமாகும்
மழலையைச் சுமக்கையில்..

மழலையின் பார்வையில்…

எந்த மெத்தையும்
இந்த மெத்தைபோல்
சுகமில்லை…
தாயின் மடி..!

நிலவே, அம்மா
நித்தமும் நமக்கு கவிபாட
நிதமும் நான் உறங்க
நீ மட்டும் உறங்காமல்
விழித்திருப்பதேனோ..?

என் முதல் தோழி
நிலவு..!

கவித்துளிகள்…

அழுக்காறு இல்லாத
ஒரே மொழி
குதலை மொழி..!

இன்னிசையோடு அவதரிக்கும்
புதுராகம் – குழந்தை..!

ஒவ்வொரு நொடியும்
நீண்ட மணி நேரமாகும்
பிரசவ அறையில்..!

~பிரியமுடன் பிரியா 💕

Concrete பூக்கள்…

கொளுத்தும் வெயிலுக்கு
வீசும் தென்றலானது
செவ்வரளி செடி..!

அழகு இருக்கும் இடத்தில்
ஆபத்தும் நிறைந்திருக்கும்
அரளிவிதை போல..!

வானுயர்ந்த மரங்கள்
ஓடியாடும் விலங்குகள்
இரையானது concrete கட்டங்களுக்கு..!

காற்றும் வெளிச்சமும் தரும்
கம்பிச் சன்னல்கள்
காற்றுப் பதனாக்கிக்கு வீடானது..!

துணி உலர்த்தும்
மொட்டை மாடி
பூந்தோட்டமானது..!

கண்ணுக்கு எட்டின வரை
பசுமை இல்லை
காட்டை அழித்து வீட்டைக் கட்டியதால்..!

~பிரியமுடன் பிரியா 🌺 🌱

மொறயிட்டு கேட்குறன்…

மகமாயி மனசு வைக்க
மும்மாரி மழ பெய்ய
கொள்ளையில
வெதச்ச கடலையும்
வெளஞ்சு பூவா சிரிச்சியிருக்க
பச்ச செடிகள பந்தமா கூடி
புடுங்கி விக்க கனாக்காண

நுணுக்கமா வரும் நோவ தடுக்க
அரசாங்கம் ஊரடங்கு
உத்தரவு போட
சொந்த பந்தமெல்லா
உதவ முடியாம துடிதுடிக்க
பூமித்தாய் கொடுத்த
காயும் முத்திப் போவுமோ
பறிக்க முடியாம பரமேசா?

மழ வந்தா
வெதக்க தானியம் இல்ல
வெதச்சா மழ வரல
மழ வந்து விளஞ்சா
அறுவட செய்ய ஆளில்ல
ஆளிலிருந்தா வெல போகல
வெல போன நல்ல வெலைக்கு
வாங்க சந்தயில மண்டியில்ல
மண்டியிருந்தா காசு கிடைக்க
வாரமாகுமினு வாங்குறவன் சொல்ல

எங்காலம் எப்போது விடியும்முன்னு
எங்குலச்சாமி உங்கிட்டு
கேட்குதறது காதில விழுகுதா?
கையெடுத்து கும்பிட்டு
மொறயிட்டு கேட்குறன்
முக்காலம் தெரிஞ்ச
ஈசனே…மகசனே…

காலத்துல பதில சொல்லுவேனு
காலடி பணிஞ்சு காத்திருக்கேன்
காத்திடய்யா கயிலநாதா
அழித்திடய்யா அசுர சத்தியையா
அருளிடுவாய் நல்ல கதியைய்யா..!

~பிரியமுடன் பிரியா 💕

செவ்வரளி பூ சிரித்ததம்மா…

காளி அம்மனை தரிசிக்கக்
கோயிலுக்கு போயிருந்தேனம்மா
அம்மனுக்கு உகந்த செவந்த மாலை
அர்ச்சனைக்கு வாங்கினேனம்மா

அழகாகப் பூத்திருக்கும் பூஞ்செடி
அடைத்து வளர்ந்திருந்ததம்மா
காடாகச் செழித்திருக்கக் கோயில்
காவல்காரர் கிளைக் கழித்தாரம்மா

கையடி கிளை ஒன்றைக்
கருத்தாக கொணர்ந்தேனம்மா
புதுத் தொட்டியில் மண்ணிட்டு
புதுசாக நட்டு வைச்சேனம்மா

நிலமெனக்குச் சொந்தமில்லாமல்
நிலைப்படி மாடிமேல் வளர்த்தேனம்மா
நிதம் நிதம் நீர் ஊற்றி
நாளெல்லாம் காத்திருந்தேனம்மா

பாசத்தை உன் மேல் பொழிந்து
பலபேரிடம் வேண்டினேனம்மா
முருகனுக்கு ஏற்ற உன்னை
முதலாகப் படைப்பேனென சொன்னேனம்மா

சூடு மிதமாகக் கொடுக்கச் சொல்லி
சூரியனிடம் சொல்லி வைச்சேனம்மா
பனி மிதமாகப் பொழியச்சொல்லி
பிறை நிலவிடம் கேட்டேனம்மா

தென்றலாக வீசக் கேட்டு
காற்றுக்குத் தூது விட்டேனம்மா
மழைத் தூறலாகத் தூவ கேட்டு
மனசார சொல்லி விட்டேனம்மா

அரிசி தண்ணீரைக் கழுவி
அருமருந்தாக ஊற்றினேனம்மா
ஆசையாக உன்னிடத்தில்
அனுதினமும் பேசினேனம்மா

பார்த்துப் பார்த்து
பாவை கண்ணும் பூத்தம்மா
வருசம் ஒன்றும் ஆகிவிட்டது
வந்து நீயும் பாரம்மா

விடிந்த பொழுதினிலே
வாசல் திறக்கையிலே வரவேற்றதம்மா
ஏக்கமெல்லாம் தீர்ந்து போய்
எம்மனசும் நிறைந்தம்மா

கந்தனுக்குச் செவ்வாயும்
காளிக்கு எந்த நாளும் உகந்ததம்மா
துர்கைக்கு வெள்ளியன்று சூட்டத்
துன்பம் எல்லாம் பறந்திடுமம்மா

வேண்டுதல் கைகூடி
வேளையிலே பூத்ததம்மா
செக்க சேவலெனச் சிவந்த
வெவ்வரளி பூ சிரித்ததம்மா..!

~பிரியமுடன் பிரியா 🌺

பாவையிவள் பார்வையில்…

கார் கூந்தலழகில்
மயில் நர்த்தனம் மறக்க
மலர் சூடிய வாசத்தில்
மல்லிகை மணமிழக்க
அகன்ற நெற்றியழகில்
பிறை தேய்ந்து மறைய
வளைந்த புருவமழகில்
வில் நாணைத் தவறவிட
கூரிய மூக்கழகில்
பச்சைகிளி கூர் மழுங்க
சிவந்த உதட்டழகில்
கோவைப்பழம் நாண
துள்ளும் கண்ணழகில்
மீன் நீரில் துடிக்க
மெல்லிய கையழகில்
அல்லித்தண்டு எடை குறைக்க
கண்ணாடி வளைவி இசையில்
கானக்குயில் பாட மறக்க
கால் கொலுசு ஓசையில்
காலையில் கூவும் கோழி எழ
அசைந்தாடும் நடையழகில்
காற்று வீசா நிறுத்த
பச்சைப் பட்டுப்பாவாடையழகில்
தட்டாம்பூச்சி வண்ணம் இழக்க
பாவையிவள் பார்வையில்..!

~ பிரியமுடன் பிரியா 💕