நிலவின் வெட்கம்…

நிலவின் வெட்கம்…

அவளின் வரிகளில்…

காதலிப்பது
வேண்டுதல்..
காதலிக்கப்படுவது
வரம்…

நீ என்னுடன் இருக்கும்
நேரம் சொர்க்கம்..
நான் தனித்து இருக்கும்
நேரம் நரகம்..

உலகமே அழகானது
உன் தோளில் நான் சாய…

இமைகள் மூடினாலும்
விழித்திருக்கிறது
என்னவனின் காதல்
பார்வை…

அவனின் வரிகளில்…

உன் முகப்பொலிவில்
நிலவு வெட்கம் கொண்டு
மறைந்து கொண்டது
அமாவாசையாக…

உனக்காகக் காத்திருக்கும்
நொடிகளில் கடிகாரம்
ஓடுவதில்லை..

உன் செய்திக்காக
ஏங்குகிறது
என் அலைபேசி…

நீ தலைகோதி
விளையாடவே
முடிகளை வளர்க்கிறேன்…

உன் கன்னக் குழியில்
வீழ்ந்து எழுந்தேன்
பல்லாயிரம் முறை உயிர்ப்புடன்..

~பிரியமுடன் பிரியா 💕

என்னுள் இறங்கிய மழை…

சில்லெனக் காற்று
சிக்கென உடலைத் தழுவிச்
சிலிர்ப்புடன் நடுங்கச்
சட்டென உணர்ந்துவிட்டேன் உயிர்த் துடிப்பை…

தூவலான தூறல்
துள்ளலெனக் கன்னத்தில் முத்தமிட்டுத்
துடிப்புடன் நடைபோட
நொக்கென விட்டுவிட்டேன் நாணத்தை…

பட்டென மின்னல்
பளிச்சென வானத்தில் மின்ன
பாங்குடன் சதிப்போட்டு
தெற்றெனப் பயின்றுவிட்டேன் நடனத்தை…

முத்தான சாரல்
முத்தாய்ப்பாய் முகத்திலடிக்க
பிரதான சாலையில் ஆடிப்பாடி
ஒய்யென ஒன்றிவிட்டேன்
மழையுடன்…!

நொக்கென, தெற்றென,
ஒய்யென – விரைவாக

~பிரியமுடன் பிரியா 💕

அர்பணிப்’பூ’

அர்பணிப்’பூ’

சிலமலர்கள் பூவையரின் கருங்கூந்தலுக்குச் சூடும் அழகான அணிகலனாகும்

சிலமலர்கள் தேனில் கலந்து
மக்களுக்கு உபாதை போக்கும்
அருமருந்தாகும்

சிலமலர்கள் பிரசவித்த செடிகளில் மலர்ந்து மணம் பரப்பி புன்னகைக்கும்

சிலமலர்கள் மனதை மயக்கும் உடலில் தெளிக்கும் வாசனைத் திரவியமாகும்

சிலமலர்கள் சான்றோரின் சட்டைப் பைக்கு எழில் சேர்க்கும்

சிலமலர்கள் பல்லுயிருக்கு உணவளித்துக் காக்கும் அன்ன பூரணியாகும்

சிலமலர்கள் விடேச காலங்களில் நிலைப்படிக்குத் தோரணமாகும்

சிலமலர்கள் இருமனங்களால்
இணையும் இணையரை வாழ்த்தும் அட்சதையாகும்

சிலமலர்கள் தேவதையின் கால்பதித்து நடக்க வழித்தடமாகும்.

சிலமலர்கள் உயிர் பிறந்த முதல் பிரிந்த வரையிருக்கும் உடலுக்குத் துணையாகும்

சிலமலர்கள் இறைவன் இணைகழலடைந்து மோட்சத்தைத் தரிசிக்கும்

சிலமலர்கள் பூத்து காயாகிக் கனிந்து
விதையாகி விருட்சத்திற்கு வித்தாகும்

மலர்கள் சிரித்து மலர்ந்தாலும்
மலர்கள் மறைந்து சிரித்தாலும்
அதன் பயன் இருக்கும் நிலைத்து
மனிதர்கள் மலர்களிடம் கற்று
மகத்தான வாழ்வு வாழ்வோம்..!

~பிரியமுடன் பிரியா 💕

நினைவில் துடிக்குது இதயம்…

எந்தன் நொடிகளில்
உன் நினைவுகளால்
எந்தன் மனதினில் நீ
சுகமான சுமையானாய்…

மூர்ச்சையானேன்
உந்தன் சுவாசத்தைச்
சுவாசிக்க…

நீ சிந்திய சிரிப்பு
சேர்தழைத்து மலரச்
செய்தது என்னிதழை…

நலம் நலமறிய ஆவல்
உன் உள்ளத்தில் இருக்கும்
என்னைப்பற்றி…

உன் விழிகளில்
படம் பிடித்தாய்
என் விழிகளில்
நீ சித்திரமானதை…

விட்டுப்போன
நினைவுகளால்
விடுபடாமல்
தவிக்கிறது இதயம்…

~ பிரியமுடன் பிரியா 💕

மனதிற்கு இட்டேன் கடிவாளம்…

பிடித்த சிவப்பு பருத்தி புடவை கண்ணுக்கு அழகாக இருந்தது.
எடுக்க எத்தனிக்கையில்
வேண்டாம் என ஒதுக்கிய பச்சையை
வேறொரு யுவதி எடுக்க வர
அவசரமாய் சிவப்பு விடுத்து
பச்சைக்குத் தாவியது மனது.
மனதும் குதுகலம் அடைந்தது
எதையோ சாதித்த பெருமை.

இதுதான் மகிழ்ச்சியா?
மகிழ்ச்சியின் அளவுகோல்
எது என அலைந்து
தேடிக் கொண்டிருப்பதிலேயே
ஓடி விட்டது வாழ்க்கையின்
பாதி பயணம்.
மீதியிருக்கும் வாழ்க்கையைத்
தேடாமல் இருக்கலாம்
என முடிவெடுத்தது மனம்.
ஆராய்தலையும் தேடுதலையும்
நிறுத்தி விட்டது.

அப்போது தேடல் சுகமானது இல்லையா? விடையை
வெளியே தேடினால் எது
உண்மையான மகிழ்ச்சி என
தெரிவதில்லை.
தேடுவதை என்னிடம் இருந்து தொடங்கினால் தேடல் சுகமானது என்பது புரிய ஆரம்பித்தது.
இப்போதெல்லாம் சிவப்பை
விடுத்து வேறொன்றை எடுப்பதில்லை.
குதிரைக்கு இடும் லாடம் போல மனதிற்கு இட்டேன் கடிவாளம்.

~பிரியமுடன் பிரியா 💕

மனசுக்குள்ள உன்ன வச்சி…

மனசுக்குள்ள உன்ன வச்சி…

மனசுக்குள்ள உன்ன வச்சி சொன்ன சொல்ல மறந்து விட்டு
மனசவிட்டு போனதென்ன ஆசக்கிளியே
அடி தேனே தேனே உன்னதானே
பாத்து உருகி மருகி போனேனே
(மனசு)

விக்க தொண்ட விக்க தான வந்ததுனா
யாரோ நெனச்சாங்கன்னு பேச்சு
மானம் போகுமின்னு மரியாதை குறையுமின்னு
உப்பா நீரில் கரஞ்சு போச்சு
ஈசனின் பேரச்சொல்ல லேசான பாட்டு சத்தம்
மாமன் குரலை காத்தில் வீசுது
ஆறாத நேசம் வந்து தீராம சேந்து போச்சு
உயிர தினம் என்னை வாட்டுது

மச்சான் மச்சான் உன்னதானே
பாத்து உருகி மருகி போனேனே
மனசுக்குள்ள உன்ன வச்சி சொன்ன சொல்ல மறந்து விட்டு
மனசுக்குள்ள வந்ததிந்த ஆசக்கிளியே

மலர்சோலையும் மலர் மல்லி ஊஞ்சலும்
அடி தேனே உன்னை நிதம் தேடும்
பருத்தி வேட்டியும் மரிக் கொழுந்து வாசமும்
இந்த மச்சான் சுகம் நிதம் பேசும்
காஞ்சிபுர நெசவில நெஞ்ச பட்டில
மடிப்பு இன்னும் கலஞ்சி போகல
கருமாரி அம்மனுக்கு மஞ்சள் துணியில
வேண்டி முடிஞ்ச காசு தீரல
தேனே தேனே உன்னதானே
பாத்து உருகி மருகி போனேனே

மனசுக்குள்ள உன்ன வச்சி சொன்ன சொல்ல மறந்து விட்டு
மனசக்குள்ள வந்ததிந்த ஆசக்கிளியே
ஏ மச்சான் மச்சான் உன்னதானே
பாத்து உருகி மருகி போனேனே
அடி தேனே தேனே உன்னதானே
பாத்து உருகி மருகி போனேனே

மனசுக்குள்ள உன்ன வச்சி சொன்ன சொல்ல மறந்து விட்டு
மனசவிட்டு போனதென்ன ஆசக்கிளியே

~பிரியமுடன் பிரியா 💕

கூண்டுக்குள்ள உன்ன வச்சி பாட்டு மெட்டில் எழுதினது…

அவனின்றி நானில்லை…

உள்ளத்திலே உவகை புகுந்து
உணர்விலே ஒன்றி ஆராதித்து
ஆடிப்பாடியே மகிழ்ச்சியில் திளைத்து
அன்புடனே அனைத்தையும் பகிர்ந்து
இல்லாத கோபமும் வளர்த்து
இச்சையுடனே ஓடோடி வந்து
இன்முகத்துடனே உன்னிடம் நுழைந்து
வாடியே போனாலும் தஞ்சமடைந்து
கேள்விகளே கணைகளாகத் தொடுத்து
உயிர்மூச்சிலே உன்னுடன் கலந்து
உருகியே கடைக்கண்ணில் உறைந்து
நின்னையே உயிராக நினைத்து
நின்பதமே கதியெனச் சரணடைந்து
காதலிலே மருகி மடிச்சேர்ந்து
கரையவே முகம்நோக்கிப் பார்த்து
மௌனமே மறுமொழியாக நீஉரைத்து
மனதிலே அமைதிப் பெறச்செய்து
இன்னலே இல்லாமல் தொலைந்து
இன்பமே எதிலும் நிறைந்து
வளமுடனே வாழ்வு நிலைத்து
வாழ்வாங்கே வாழச் செய்திடுவானே..!

~பிரியமுடன் பிரியா 💕

மூட்டை நிறைய மகிழ்ச்சி…

எங்கேயும் தேட வேண்டாம்
நம்மிலே குவிந்து உள்ளன
சொர்கங்கள்….
எனச் சொல்லும்
கடவுள்கள்..!

மூட்டைக்கணம்
மூச்சை முட்ட
முகத்தில் வனப்பு
பொக்கிசமாய்
பூத்துக் குலுங்குகிறது
பார்க்கும் பிள்ளைகளின்
பாச முகத்தைக் காண…

நல்ல நேரத்தைப்
பையில் வைத்து
தலையில் சுமக்கும்
நாயகனுக்கு
எந்த நேரமும்
மிகச்சிறந்த நேரமே…

சுமைகூட சுகமாகும்
சுற்றிலும் இரத்தச்
சொந்தங்கள்
மகிழ்ச்சியைச்
சுமக்கையில்…

வண்ணத்துப் பூச்சியாய்
சிறகடித்துப் பறக்கச்
சிரிப்பில் மிதக்கத்
தன்னம்பிக்கை உயர
வானமும் வசப்படும்
வானவில்லும் கையில் வரும்…

கோடியில் புரண்டாலும்
வராத ஆனந்தம் தெருக்
கோடியில் வாழ்ந்தாலும்
வரும் பெற்றோர் வளர்ப்பில்…

காலடியில் பாதணி
இல்லையாயினும்
காதம் பல பயணம்
செய்த மொட்டுகளிடம்
கேட்கலாம் வழித்தடத்தின்
அனுபவங்களை…
கற்கலாம் முயன்றால்
முடியாதது உண்டோ?

இந்த நாள்
இந்த நிமிடம்
இந்த நொடி
இந்த வாழ்வு
இந்த கணம்
வாழ வழிசொல்லும்
கீதா உபதேசம்

எல்லைக் கல்லைக்
கேட்டால் கூறும்
சிந்திய வேர்வையின்
அளவை…

~ பிரியமுடன் பிரியா

அட்டன் பதம் போற்றி…

நட்டம் வரச் செய்த தொழிலில்
கட்டம் வந்து கடன் பட
முட்டம் தூற்றி பழிக்க
வட்டம் போட்டு கட்டம் உழல
எட்டம் சென்று வேலை செய்ய எத்தனிக்க
இட்டம் பட்டு
கட்டிகொண்ட கண்ணாட்டி
கட்டம் வந்த நேரம் கைகொடுத்தால்
கட்டிய கண்ணாளனுக்கு
ஒட்டம் உள்ளத்தில் எடுத்து
கட்டம் போக்க வாழ்வில்
பட்டம் வந்த நேரம்
குட்டம் ஏரியெல்லாம் நிறைந்திருக்கக்
கொட்டம் எருதனை
பூட்டி ஏர்தனில் ஏருழ
கிட்டம் இருந்து கட்டியவள்
புட்டம் சொருகி சேற்றிலிறங்கி
சட்டம் ஆகி முறத்திலிருந்து
அட்டம் திக்கில் அருகனை வேண்டி
ஆடிப்பட்டம் அழகாக விதைக்க
மட்டமாக நெற்கதிர்கள் செழிக்க
விட்டம் அரிவாளால் கதிரிருக்கப்
பட்ட கட்டம் எல்லாம் மாயமாகி
தட்டம் நிறைந்தது பசியாற பச்சரியால்
கம்பட்டம் நிறைந்தது நிறைந்த மகசூலால்
விட்டத்தில் உயிர் இருக்கும் வரை
இட்டம் கொண்டு
அட்டன் பதம் போற்றி
சட்டென சரணடைய இன்பம் நிலைக்குமே..!

முட்டம் – ஊர்
எட்டம் – தூரம், ஒட்டம் – சூள்மொழி
பட்டம் – பயிரிடுவதற்கான பருவம்
புட்டம் – சீலை
சட்டம் – ஆயத்தம்
கம்பட்டம் – காசு
விட்டம் – உத்திரம், உடல்
அட்டன் – ஈசன்

~பிரியமுடன் பிரியா 💕

மதிகெட்ட மாந்தர்…

இவ்வுலகில் இயற்கை
இருப்பதைச் சுயநலமாய் தனக்கென
இருத்திக் கொண்டால்
இம்மண்ணில் உயிர்க் கோடி வாழுமோ?

பிறந்த பொழுது கொண்டு வந்தது
பிரபஞ்சத்தில் ஏதுமில்லை
தனக்கு ஏதும் சொந்தமில்லை
தரணியில் என்பதை உணர்வானோ?

கோடியில் புரண்டாலும்
கோபுர உச்சியிலிருந்தாலும்
மாண்டால் ஆறடி நிலமும்
மடிந்தால் பிடிச் சாம்பலுமன்றோ?

இல்லோர்க்குக் கொடுக்கும்
இன்றியமையாமை உணர்த்துவாயாக
மதிகெட்ட மாந்தர்தாம்
மடமையைக் கொளுத்துவாயாக

நர்த்தனமாடும் நாதனே
நீயின்றி ஓரணுவும் அசையாது
நானிலத்தில் அமைதி நிலவிட
நடராசனே நற்கதி நல்கிடுவாய்

ஆக்குபவனும் நீ காப்பவனும் நீ
ஆள்பவனும் நீ அழிப்பவனும் நீ
அருகனும் நீ ஆதிபகவனும் நீ
ஆட்டுவிப்பவனும் நீ அண்டசராசரமும் நீ

ஆடல் நாயகனின் தாள் போற்றி
ஆடுகிறேன் உம்மைச் சரணடைகிறேன்
சிந்திக்கும் சக்திதனை எல்லோரின்
சிந்தைக்கும் அளித்திடுவாய் பராபரமே!

~பிரியமுடன் பிரியா