
மஞ்சள் வேப்பிலை
மணமான இஞ்சி
சீரகம் திப்பிலி மற்ற
சிறந்த மூலிகைகள் கொண்டு
இயற்கை உதவியுடன்
இன்னுயிர் காக்கும்
சித்த வைத்தியனே…
விதியை கடிந்து
வலியால் துடித்து
எறிந்து விழுந்து
கடிந்து கொள்ளும்
கடுப்பான பிணியாளனிடம்
கனிவாக நடக்கும் செவிலியரே…
மகவு தரித்த முதல்
மகவு ஈனும் வரை
மகளிருக்கும் மகவுக்கும்
மறுதாயாய் இருக்கும்
மகப்பேறு மருத்துவரே…
இரவு பகல் பாராது
தன்னலமற்று தன்னுயிர் ஈந்து
தன் நாட்டைக் காக்கும்
சிப்பாய் நலம்தனை கருதி
சேவை செய்யும்
சிறந்த தொண்டுள்ளமே…
இருமலோ காய்ச்சலோ
இருதய வலியோ
இன்னபிற அகராதியில்
இல்லாத வலிகளுக்கு
நம்பி நாடி வருபவருக்கு
நோய் போக்க வழிதனை
கண்டறியும் கனவானே…
கண்ணுக்குத் தெரியாத
கண்ட நுண்கிருமிகள்
கண்டத்தில் பரவிக்
காணும் மனிதர்களைத் தொற்ற
ஊண் உறக்கம் மறந்து
உடலை வருத்தி
உயிர்காக்கப் போராடி
தரங்கெட்ட கிருமிக்குப்
தன்னுயிரையும்
பலிகொடுத்த சிகரமே…
மக்கள் சேவையே
மகேசன் சேவையாய்
சிரமம் பாராமல்
செய்யும் உமக்கு
சிரம் தாழ்த்தி வணங்கி
நீ வளமுடன் வாழ
நிமலன் பொற்பதம்
போற்றி பணிகிறேன்..!
~பிரியமுடன் பிரியா 💕









