உயிர் காக்கும் சிகரங்கள்…

மஞ்சள் வேப்பிலை
மணமான இஞ்சி
சீரகம் திப்பிலி மற்ற
சிறந்த மூலிகைகள் கொண்டு
இயற்கை உதவியுடன்
இன்னுயிர் காக்கும்
சித்த வைத்தியனே…

விதியை கடிந்து
வலியால் துடித்து
எறிந்து விழுந்து
கடிந்து கொள்ளும்
கடுப்பான பிணியாளனிடம்
கனிவாக நடக்கும் செவிலியரே…

மகவு தரித்த முதல்
மகவு ஈனும் வரை
மகளிருக்கும் மகவுக்கும்
மறுதாயாய் இருக்கும்
மகப்பேறு மருத்துவரே…

இரவு பகல் பாராது
தன்னலமற்று தன்னுயிர் ஈந்து
தன் நாட்டைக் காக்கும்
சிப்பாய் நலம்தனை கருதி
சேவை செய்யும்
சிறந்த தொண்டுள்ளமே…

இருமலோ காய்ச்சலோ
இருதய வலியோ
இன்னபிற அகராதியில்
இல்லாத வலிகளுக்கு
நம்பி நாடி வருபவருக்கு
நோய் போக்க வழிதனை
கண்டறியும் கனவானே…

கண்ணுக்குத் தெரியாத
கண்ட நுண்கிருமிகள்
கண்டத்தில் பரவிக்
காணும் மனிதர்களைத் தொற்ற
ஊண் உறக்கம் மறந்து
உடலை வருத்தி
உயிர்காக்கப் போராடி
தரங்கெட்ட கிருமிக்குப்
தன்னுயிரையும்
பலிகொடுத்த சிகரமே…

மக்கள் சேவையே
மகேசன் சேவையாய்
சிரமம் பாராமல்
செய்யும் உமக்கு
சிரம் தாழ்த்தி வணங்கி
நீ வளமுடன் வாழ
நிமலன் பொற்பதம்
போற்றி பணிகிறேன்..!

~பிரியமுடன் பிரியா 💕

நெஞ்சடையோனே நீ

பிஞ்சு மனதிலே
மிஞ்சி துயரங்கள்
விஞ்சி மேலெழவே
நெஞ்சு கணத்திட
மஞ்சு மங்கையிவள்
சஞ்சிலே கட்டி
கொஞ்சி பாட்டிசைத்துக்
கெஞ்சி உனையே
தஞ்சமென இணைகழல்
செஞ்சு பணிந்திடவே
வஞ்சிதனை நாடிடும்
நஞ்சுகள் காற்றிலே
பஞ்சாகப் பறந்திடவே
இஞ்சிதனை புகுத்தி
அஞ்சாமல் அனுதினமும்
துஞ்சு கொள்ளச் செய்வாயாக..!

செஞ்சடையோன் – ஈசன்
செஞ்சு – முழுதும்
இஞ்சி – வீரம்
சஞ்சி – பை
துஞ்சு – துயில்

~ பிரியமுடன் பிரியா 💕

திரும்ப கிடைக்குமா..?

கைகளில் சோறு உருட்டிப் போட்டு
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சமென
ஊட்டிவிட்டது திரும்பக் கிடைக்குமா?

முற்றத்தில் பாய் விரித்து
மடியில் படுக்க வைத்து
முடி கோதி முத்தமிட்டுக்
கொஞ்சும் மொழி திரும்பக் கிடைக்குமா?

நிலவு ஒளியில் நித்திரை கொள்ளக்
கதைகள் பல சொல்லிக்
கண்ணுறங்க வைக்கும் பாக்கியம்
திரும்பக் கிடைக்குமா?

பாவாடை தாவணியில்
பாங்காக உடை உடுத்திப்
பல வண்ண மலர்களைத் தலையில் சூடி
பார்ப்பவர்கள் கண்படாமலிருக்கத்
திருட்டி கழித்த தருணம் திரும்ப வருமா?

தன்னம்பிக்கையைத் தாலாட்டில்
பாசத்தை பணியாரத்தில்
நிதர்சனத்தை நித்தம் சொல்லும் பழமொழிகளில்
வணங்கி போற்றாதற்குரியதைப் பஞ்சமந்திரத்தில்
கற்றுத் தந்த காலங்கள் திரும்ப வருமா?

உனக்கென்ன வேண்டும் பாட்டி எனக்கேட்டால்
உங்கள் நலம் தான் வேண்டும் எனகூறி
வாரியணைத்து உச்சிமோறும்
நாட்கள் திரும்ப வருமா?

~பிரியமுடன் பிரியா 💕

செம்புல சிரிப்பழகி…

துளிப்பாக்கள்…

மின்னுவது எல்லாம்
பொன்னாகும் எந்நாளும்
மங்கையின் புன்சிரிப்பு..!

வர்ணம் அணிந்தாள்
வேடம் போட்டாள்
நாற்று நட..!

எல்லா நாளும்
வண்ண ரங்கோலி
உழவர் மகளுக்கு..!

சலசல சத்தம்
சலங்கையில்லா ஒலி
வயல்வெளி நடனம்..!

செவிக்கு உணவு ஈந்து
வயிற்றுக்கும் உணவு ஈந்தாள்
கழனியில் குலவிச்சத்தம்..!

மகன் மகிழுந்தில் கால் வைத்தான்
மகள் கணிப்பொறியில் கை வைத்தாள்
மங்கை சேற்றில் கைகால் வைத்ததால்..!

~பிரியமுடன் பிரியா 💕

மூக்குத்தி அழகால…

காடு கழனி எல்லாம் மழ பெஞ்சு
கெணத்துல தண்ணீ வந்திருக்க
நஞ்ச நெலத்துல
ஆச மச்சான் வெதச்ச நெல்லு
அமோகமா மொளச்சிருக்க
கனவெல்லாம் நனவாக
பாத்தியில கால வைச்சு
பாங்கா வளந்த நாத்த
பதமா பறபறனு பிரித்தெடுத்து
பொறந்த இடத்திலிருந்து
புகுந்த இடத்துக்கு
வளமாக வாழ வைக்க அனுப்ப
சலக்சலகென எழுப்பும்
சத்தத்தில ஏபுள்ள காதில விழ
சேத்தில நனஞ்ச சேலையில
நிமிந்து பாக்க வரப்புல
பச்சரிசி சிரிப்பால
மூக்குத்தி அழகால
முகம்பூர பூவா மலந்து
ஆசையோடு பாக்க
மச்சான சாய்ச்சிப்புட்டாளே..!

~பிரியமுடன் பிரியா 💕

கொள்ளையழகு…

கள்ளமில்லாச் சிரிப்பழகு
மின்னும் மூக்குத்தியழகு
நெற்றிப் பொட்டழகு
பச்சை புடவையழகு
நிற்கும் விதமழகு
நாற்று நடும் நேர்த்தியழகு
உழைப்பின் மகிமையழகு
உணவளிக்கும் குணமழகு
சேற்றில் மலர்ந்த செந்தாமரையழகு
மொத்தத்தில் நீ கொள்ளையழகு..!

~பிரியமுடன் பிரியா 💕

அரசியல் துளிபாக்கள் 3

அரசியல் துளிபாக்கள்…

தன்னையே மறக்கவைக்கும்
தடுமாறி விழவைக்கும்
புகழ்..!

உயிர் உங்களுக்கு
உடல் மண்ணுக்கு
வாக்கு சேகரிப்பு..!

மாலை மரியாதை
எதிர்க்கட்சி தலைவனுக்கு
இறுதி ஊர்வலத்தில்..!

தமிழ் என் பேச்சு
இந்தி என் மூச்சு
தமிழக அரசியல்வாதி..!

எதுவும் நிரந்தரமில்லை
எம்மதமும் சம்மதம்
தேர்தல் கூட்டணி..!

நாலொரு வண்ணம்
பொழுதொரு மேனி
அரசாங்க இலவசத் திட்டம்..!

~பிரியமுடன் பிரியா 💕

பரிசல் பூவே…

================

பரிசல் பூவே…

நீந்தி அழகாய் நதியிலே வந்தாயே;
ஏந்தினேன் உன்னை இலயனே – ஈந்திட;
பேர்போற்ற பட்டங்கள் பெற்று; புகழுடன்
ஊர்மெச்ச வாழ்கவே நீ…

இலயன் – ஈசன்

~பிரியமுடன் பிரியா 💕

வாசிக்கா கவிதை…

================

வாசிக்கா கவிதை…

ஆடையில் சுற்றி அழகாய் மிதந்தபடி
வாடையின் காற்றிலே வந்தது – ஓடையில்
யாசித்துக் கொண்டே; யவரும் விருப்பமுடன்
வாசிக்கா பிஞ்சுகவி தை…

~பிரியமுடன் பிரியா 💕

கண்ணா உனை தேடுகிறேன்…

கேசவா மாதவா
கருமை நிறக் கண்ணா…
எங்கே சென்றாயோ
வந்து விட்டாய் எனைச்சேர..

மங்கையிவள் காத்திருக்க
மாயமாய் எங்கோ
மறைந்ததேனோ
மதுசூதனா… மணிவண்ணா..

கோபியருடன் மலரச்சோலையில்
கானமயிலெனக்
கைகோர்த்தாடிப் போனாயோ
கிருட்டிணா… மணிவண்ணா..

கேசவா மாதவா
கருமை நிறக் கண்ணா…

ஆவின் கூட்டத்தை
ஆயர்பாடியில் ஆலாபனை
கானம் பாடி உறங்கச் செய்தாயோ
கோபாலா… மணிவண்ணா…

காற்றைக் கணநேரத்தில்
குழலில் அடங்கி
மூச்சினை சுரமிசைக்கச் சென்றாயோ
முரளி மனோகரா… மணிவண்ணா…

கேசவா மாதவா
கருமை நிறக் கண்ணா…

கோவர்த்தன மலையைக்
காலூன்றிக் கையிலெடுத்து
ஆயர்களைக் காப்பாற்ற ஓடினாயோ
அச்சுதா… மணிவண்ணா…

அகிலத்தை வாயில் அடக்கி
அன்னைக்குக் காட்டிட
மீண்டும் குழந்தை ஆனாயோ
மதனா… மணிவண்ணா…

கேசவா மாதவா
கருமை நிறக் கண்ணா…

பிருந்தாவனத்தில் காத்திருக்கப்
பார்வை உனைத்தேட அதனை
மனம் எடுத்துரைத்ததோ
மயூரா… மணிவண்ணா…

எங்கிருந்தாலும் எனை நாடி
எழில்மிகுந்த காதலுடன் கரம்பிடித்துக்
மணந்து கொண்டாயே
மன்மோகனா… மணிவண்ணா…

கேசவா மாதவா
கருமை நிறக் கண்ணா…

~பிரியமுடன் பிரியா 💕