கசிந்துருகி…

ஓர் நீர்த் துளி ஒட்டிக்கொண்டு

ஊஞ்சல் ஆடுகிறது

உன் உதட்டில்

விழவா வேண்டாமா என..

விழப்பார்த்ததை

வெட்கம் விட்டுத்

தொடப்பார்த்தால்

வெப்பமாய் இருக்க

உருகும் பனிக்கட்டியாய் அவன்..

பாவம் விட்டுவிடு

பட்டுத் தெரித்து

பூர்வ சென்ம

புண்ணியம் அடையட்டும்

பூமியில் வீ(வா)ழ்ந்து…

துளியும் அவனும் …

~பிரியமுடன் பிரியா 💕

எண் எழுத்து இகழேல்…

கணிதம் சரியாகக் கற்று பிறகு

வணிகம் நடத்தி வரவு -தணிக்கையைக்

கண்ணாக எண்ணி கருத்துடன் வாழ்விலே

எண்ணை இகழாமல் போற்று…

கற்கால மானிடன் சைகையில் பேசினான்

தற்கால மானிடன் சொற்களில்; – கற்ற

எழுத்தால் பழுவமும் ஈட்டியது பண்பாடு

எழுத்தை இகழாமல் போற்று…

பிறந்த குழந்தையைச் சான்றோனாய் ஆக்க

சிறந்த படிப்பைத் தகுந்த – அறநூலைக்

கொண்டு புகட்டிட வாழ்க்கை சிறந்திட

எண்ணும் எழுத்துமிக ழேல்…

தணிக்கை – கணக்குவழக்குகள்

பழுவம் – காட்டு வாழ்க்கை

பண்பாடு – நாகரிகம்

~பிரியமுடன் பிரியா 🙏🏻

எனது தமிழ் மொழி….

எனது தமிழ் மொழி…

க் காலத்திலும் என்னைச் சீராட்டித் தாலாட்டி வளர்த்த மொழி!
ங் கள் காதில் இன்பத் தேன் பாய்ச்சும் இனிய மொழி!
ச் சமில்லை அச்சமில்லை என என்பாட்டன் பாரதி சொல்லித் தந்த மொழி!
ஞ் ஞானம் அகற்றும் அரும்பெரும் நூல்கள் தந்த மொழி!
ட் டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என கற்றும் கொடுத்த மொழி!
ண் ணத்தில் நிறைந்து எண்ணமெல்லாம் ஒளிரச் செய்த மொழி!
த் திசையும் பரவிப் புகழ் மணக்கும் எங்கள் அருமை மொழி!
ந் நாட்டிலும் தமிழன் என சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என அறிவுறுத்தும் மொழி!
ப் பொழுதும் அணைத்து ஆறுதல் தரும் மொழி!
ம் பன் வீட்டுத் தறியும் கவி பாடி காவியம் படைத்த மொழி!
தா ய் கொஞ்சி குலவி கற்றுத் தந்த தன்னிகரில்லாத மொழி!
பா ர் போற்றும் பழமையான சிறந்த மொழி!
ல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி!
வ் வுலகம் போற்றும் பொதுமறையாம் திருக்குறள் தந்த மொழி!
வா ழ் வைச் செம்மைப் படுத்தும் மொழி!
ள் ளத்தில் உவகை ஊற்றாய் பிறக்கக் காரணமான மொழி!
ற் றம் தவிர்த்து வேறெதனையும் தராத மொழி!
ன் தாய்மொழி தமிழ் மொழி பல்லாண்டு வாழிய வாழியவே..!

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” –பாரதியார்.

உலக தாய் மொழி தின வாழ்த்துக்கள் 💐💐💐

~பிரியமுடன் பிரியா 💕

அரசியல் துளிப்பாக்கள்…

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

விற்பனை அமோகமாக நடக்கிறது

தேர்தல் சீட்டு கேட்கும் வேட்பாளர்கள்..!

🌸

வெங்கலப் பாத்திரக்கடை

உள்ளே நுழைந்த யானை

அரசியல் பேரவைக் கூட்டம்..!(அ)

குழாயடியில் சண்டை..!

🌸

பணம் படைத்தவன்

ஏலத்தில் எடுத்தான்

ஓட்டுப் போடும் குடிமகனை..!

🌸

அரசியல்வாதியின் கருப்புப் பணம்

வெள்ளைப் பணமானது

கோவில் உண்டியலில்..!!!!

🌸

உரிமை விற்பனை

அரசு அனுமதியோடு

கள்ள ஓட்டு..!!!

🌸

வெள்ளை வேட்டிச் சட்டை

வியாபாரம் அமோகமாக நடந்தது

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது..!

~பிரியமுடன் பிரியா 💕

நட்பிற்கு உண்டோ…

ஆழ்மனதின் இரகசியங்கள்

அறிந்த ஒரே மனம் உற்ற தோழி…

🌸

பாலியல் கொடுமை

பாரினில் ஒழிக்க

பேணுவோம்

ஆண் பெண் நட்பு…

🌸

தவறு செய்தால்

தண்டிக்கும்…

அழுதால்

அணைக்கும்…

வெற்றி பெற்றால்

ஆர்ப்பரிக்கும்…

🌸

இரத்த சொந்தமில்லாமல்

உருவான உறவு…

🌸

தேடிப்பார்த்தாலும் கிடைக்காத

உன்னத உறவு…

🌸

மச்சி ஓய்

ஏண்டா மாப்ள

அடுத்த வருடமும்

வரோண்டா….

மலை ஏறறோம்டா…

நச்சுனு படம்

எடுக்கறோம்டா…

🌸

மனப்பெட்டியில் பூட்டிய பொக்கிசங்களாய்

வெட்டி அரட்டைகள்…

🌸

தோழமையின் தோளில்

தோல்விகள் கூட வெற்றிகளாகிடும்…

🌸

நட்பிற்கும் உண்டோ

சாதியும் மதமும்…

🌸

உளி செதுக்குவது

சிற்பம்…

நட்பு செதுக்குவது

நம்மை…

~பிரியமுடன் பிரியா 🤗

சுகமான சுமை…

கல்லூரி கடைசி யாண்டில் இருக்க

காலத்திற்கும் நினைவில் நிற்க

உற்ற தோழமைகள் சேர்ந்து

இனிமையான பயணம்

செய்ய ஆசைப்பட

ஏட்டுக்குபோட்டி ஏழுமலை ஏற்காடென

பனைமரம் பால்ராசு பொள்ளாச்சியெனக்

குறும்பு சுமதி குற்றாலமென

உல்லாச உமர் ஊட்டியென

இச்சையுடன் இசக்கிமுத்து இடுக்கியென

ரஜினி முருகன் சிவா சில்லென்ற ஊருக்கென

நானோ எங்கானாலும் சுகமேயென

ஆளாளுக்கு ஓர் இடம் சொல்ல

ஏகமனதாக அனைவரும்

எழில் கொஞ்சும் இடுக்கிக்கு

எங்களின் கால் தடத்தைப் பதிக்க

இசைந்து முடிவெடுத்து

வாரவிடுமுறையில்

கதிரவன் உதிக்கும் முன்னே

மலையரசியின் செல்ல மகள்

கேரளத்திற்கு இரயிலில் பயணமாக

சன்னல் ஓர இருக்கைக்குச் செல்ல

சண்டையிட

பாட்டும் ஆட்டமும் களைக்கட்ட

கூவி விற்கும் குண்டு போண்டா

இஞ்சி மணக்கும் தேநீர் சூடா

தகரப் பெட்டி கைமுறுக்கு ஆசையோட

வாங்கி வாயில் அசைபோட

தினத்தந்தியில் சுற்றிய சுண்டலுக்கு

ஆளாய் பறந்திட

தோழமையிடம் தட்டிப் பறித்துச் சுவைத்திட

சக பயணிகளில் சிலர் பார்த்து இரசித்திட

சிலர் திட்டி தீர்த்திட

சிலர் தண்ணீர் தெளித்து விட்டிட

விரைவில் இரயில் இடுக்கிக்கு

வந்திட

இறங்கி மலைத் தேடிச் சென்றிட

மலை நாட்டில் மலையேறிட

மனத்திடத்துடன் தயாராகிட

மனம் மகிழ்ந்திட

நண்பர்கள் சூழ்ந்திட

சூரியன் இதமாகச் சுட

பசுமை கண்களை நிறைத்திட

பறவைகள் கானம் இசைத்திட

காற்று சிகையைக் கலைத்திட

கற்பாறை நெஞ்சை நிமிர்த்தி வரவேற்றிட

வழியெங்கும் பூங்கள் பூத்துக் குலுங்கிட

மூலிகைகள் நாசியில் நுழைந்திட

வண்டுகள் ரிங்காரமிட

மெதுவாக மலைமீது ஏறிட

கற்கள் காலைக் குத்திட

கால்தடுக்கி விழப் பார்த்திட

தோழமைகள் தோள் கொடுத்துத் தாங்கிட

பதறி நலம் விசாரித்திட

பாசம் மேன்மேலும் பெருகிட

ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருந்திட

நட்புக் கரங்கள் இணைந்திட

போவோர் வருவோரை வேடிக்கை பார்த்திட

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிட

வேர்வை முதுகை நனைத்திட

கேலி பேசி சிரித்திட

மாமலையும் கடுகாகிட

மேகம் கைகளில் எட்டி பிடித்திட

உச்சி அடைந்திட

ஊர் முழுதும் கண்கொள்ளாக் காட்சியாகிட

உரக்கப் பெயர்களை முழங்கிட

மலையெங்கும் எதிரொலித்திட

கால்கள் சதி போட்டுக் கூத்தாட

உலகத்தையே வென்ற ஆனந்தம்

தோன்றிட

நட்பின் சுகத்தை மலையில் செதுக்கிட

ஒன்றாகக் கூடி நின்று மனதில்

படம் பிடித்திட

சுகமான நினைவுகள் நெஞ்சில்

பதிந்திட

சுகமான சுமமையானது…

~பிரியமுடன் பிரியா 💕

கணக்கு பிழை…

கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டவில்லை
கையில் அட்டையில்லாததால்…

🌸

காசை கக்கும் இயந்திரம்
கக்கிய இரசிதில்
கணக்கு பிழையோ..?!
“Zero Balance”…

🌸

தாமரையால்
தனலட்சுமியும்
செல்லாத காசானாள்…

🌸

வறுமையானவருக்கும்
வளமையானவருக்கும்
ஒரே அட்சயப்பாத்திரம்…

🌸

காவிக் கறை
காகிதக் கறையிலிருந்து
கடை சுவரைக் காப்பாற்றக்
காட்சி கொடுத்தால்
கச இலக்குமி…

~பிரியமுடன் பிரியா 💴 💵 💰

நீயும் கடவுள்…

நீயும் கடவுள்…

கல்வெட்டில் பெயர் பதிக்க
கருப்பு நோட்டுகளை
வெள்ளையாக்க
ஊர் தனக்காரர் பெயரைத் தக்க வைக்க
ஊழல்களில் ஈட்டிய வருமானத்தில் சிறுபங்கைக் காணிக்கையாக்க
வாங்கின இலஞ்சத்திற்குப்
பரிகாரமாகப் பங்கு வைக்க
விளம்பரம் தேட விலைமதிப்புள்ள
நகைகளைக் கோவிலுக்குக்
கொடை கொடுக்க
இருப்போர்…

கருவறையில் இருக்கும் அம்மனுக்கு
நகைபோட்டு அழகு பார்ப்பதைவிட
பளபள பளிக்கு தரை பதிப்பதைவிட
உண்டியலில் சில்லறையிட்டு நிரப்புவதைவிட
சிறப்புக் கட்டணம் செலுத்தித் தரிசிப்பதைவிட
கட்டுகட்டாகப் பணத்தைக் கடவுள்
பெயரைச் சொல்லி முடக்குவதைவிட

இல்லாதவனுக்கு அடுத்த வேளை உண்ணக் கவளம் சோறு கிடைக்க
வேலையில்லாத பட்டதாரி ஊரை ஒழிக்க
பிச்சைக்காரர் இல்லாத தெருவை உருவாக்க
இளம் சிறார்களுக்குக் கல்வி அளிக்க
ஆதரவற்ற முதியோர் நிலை சிறக்க
ஆன்மீகத்தை அரசியலாக்கி
பொருள் ஈட்டுவதைத் தடுக்க
எத்தனையோ கனவுகள் நனவாக்க
பயன்படுத்தினால்
உலகளவில் நம் நாடு வளர்ந்த நாடாகியிருக்கும் இன்றோ
நீயும் கடவுளாய் ஆகியிருப்பாய்
என்றோ..

~பிரியமுடன் பிரியா 🙏🏻

வாழ்க்கை கடன்…

தானியங்கி வங்கி இயந்திரத்தில்

அட்டை தீட்டி

கடவு எண் தட்டி

காசை எடுக்கப்பார்க்கக்

காசு வரவில்லை

காந்தி கணக்காக இருக்கும்

வங்கிக் கணக்கில்..

இலக்குமியிடம் கேட்கிறான்

உன் கசானாவும்(கஜானா) காலியா?

🌸

ஏம்பா…அந்த

ATM க்கு இலக்குமி

கடாட்சம் இருக்கிறதாம்

மக்களிடம் சலசலப்பு…

ATM ஐ

அபகரிக்கக் கட்சி பிரமுகரின்

இரகசிய கூட்டம் அன்றிரவில்…

🌸

மரம் மட்டுமிருந்தால்

தானியங்கி வங்கி இயந்திரத்திற்குப்

பொட்டு வைத்து பூசை போட்டு…

அமைதியாக அமர்ந்திருக்கும்

ஆன்மாவிற்குப் போட்டியாகியிருப்பார்கள்

காசு பண்ணும் ஆசாமிகள்…

🌸

அரசாங்கம் நியமிக்காத

இலவச இரவு காவலர்

தானியங்கி வங்கி இயந்திரத்திற்கு…

எங்கேனும் திருட்டு நடக்க

முதலில் காவலர் பிடிக்க

வரும் அப்பாவி மனிதர்…

🌸

கருவறையில் வீற்றிருக்கும்

அம்மனாலும்

கடைச் சுவரில் வீற்றிருக்கும்

தனலட்சுமியானாலும்

நிம்மதி நாடி வந்து போகும்

பக்தர்களுக்கு அருள் அளிக்கத்

தவறுவதில்லை..

🌸

சுதந்திரம் அடைந்த

பிறகும் சுதந்திரமாக

ஆங்கிலத்தை உலவவிடும்

தமிழர்கள்… ATM வாயிலாக…

🌸

“எச்சில் துப்பாதீர்”

படித்தான் எச்சில் துப்பினான்..

“இலக்குமி திருவுருவம்”

பார்த்தான் எச்சில் துப்பியவன்

கன்னத்தில் போட்டுக் கொண்டான்…

~பிரியமுடன் பிரியா 💕

காதலில் நாமாகி…

நிலவாக ஒளி வீச வா
இல்லை வேண்டாம்
பௌர்ணமிக்குப் பிறகு
அமாவாசை வந்துவிடும்…

பகலாக நிரப்பிட வா
இல்லை வேண்டாம்
இரவின் ஏகாந்தத்தை
இழக்க வேண்டும்…

நதியாக ஆராதிக்க வா
இல்லை வேண்டாம்
கடலில் கலந்து
உப்பு நீராகிவிடும்…

சுவசமாக என்னுள் நிறைய வா
இல்லை வேண்டாம்
உள்ளிழுக்கும் மூச்சுக்
காற்று வெளியேறிவிடும்…

மலராக வாசம் வீச வா
இல்லை வேண்டாம்
மலர்ந்து சில
மணிநேரங்களில் வாடிவிடும்…

தென்றலாகத் தீண்டிட வா
இல்லை வேண்டாம்
கரங்களில் கட்டிவைக்க
முடியாமல் சென்றுவிடும்…

மழையாக நனைக்க வா
இல்லை வேண்டாம்
மண் சொந்தம்
கொண்டாட வந்துவிடும்…

மயிலாக ஆட வா
இல்லை வேண்டாம்
தோகை ஆங்காங்கே
கீழே உதிர்ந்துவிடும்…

அலையாக தீண்டிட வா
இல்லை வேண்டாம்
அவைகள் வந்து
திரும்பி போகும்…

கவிதையாக மகிழ்விக்க வா
இல்லை வேண்டாம்
நான் மட்டுமே உன் வரிகளை
வாசிக்க வேண்டும்…

ஆகையால் நீ
நீயாகவே வா
நாமாகி வாழலாம்
காதலில்…

~பிரியமுடன் பிரியா 💕