அன்பின் இலக்கணம்…

நிறையை விழியில்

தேக்கி

குறையை மனதில்

ஆழ்த்தி நேசிப்பதே

அன்பின் இலக்கணம்…

விழியில்

வழியும் நீர்

பேசிடும் அன்பின்

மொழிதனை…

கண்ணிலிருந்து

மறைந்தாலும்

கருத்தில் நிறைந்திருப்பதே

அன்பு…

ஒரு துளி மழையளவு

போதும்.

கடலளவு வேண்டாம்

உப்பு நீரென்பதால்

அன்புக்கு..

எல்லாம் நலம்

என்று நீ சொல்வதில்

என் நலம்

அடங்கியுள்ளது…

அதீத கோபமும்

ஆழ்ந்த மௌனமும்

அன்பின்

வெளிப்பாடே..

ஓடிவரும் ஒவ்வொரு

அலைகளும் கரையைத்

தொட்டுவிடுவதில்லை…

இருப்பினும் அவை

முயற்சியைக் கைவிடுவதில்லை

அன்பும் அப்படிதான்…

சோகம் கூட

சுகமாகிவிடும்

அன்பு கொண்ட

நெஞ்சத்தின்

காத்திருப்பில்…

விழியின் மணி

விழையும் அன்பு

புரியாது

இமை மூடினால்…

அன்பின் ஏக்கம்

நெஞ்சில் நிறைய

விழியில் வழியும்…

~பிரியமுடன் பிரியா 💕

சலங்கையும் ஒலியும்…

சலங்கையும் ஒலியும்…

வாக்கும் அர்த்தமும் போல

சொல்லும் பொருளும் போல

சந்தமும் நயமும் போல

இராகமும் தாளமும் போல

இசையும் ஓசையும் போல

சலங்கையும் சதியும் போல

பானுவும் மதியும் போல

மலையும் அருவியும் போல

மரமும் மண்ணும் போல

கனியும் கிளையும் போல

மலரும் மணமும் போல

கடலும் அலையும் போல

மீனும் நீரும் போல

நிமிடமும் நொடியும் போல

விழியும் இமையும் போல

கண்ணும் காட்சியும் போல

சதையும் நகமும் போல

உடலும் உயிரும் போல

காற்றும் சுவாசமும் போல

மொழியும் உணர்வும் போல

மௌனமும் புரிதலும் போல

நிசமும் நிழலும் போல

கவிதையும் காதலும் போல

சிவனும் சக்தியும் போல

நீயும் நானும்…!

~ பிரியமுடன் பிரியா 💕

பக்தரின் வேண்டுகோள்….

கோயில் தரிசன நேரம்

காலை 6மணி முதல் 11மணி

மாலை 4மணி முதல் 8 மணி

அன்னை தயாராக இருந்தும்

அறங்காவலர் தயாராக இல்லை…

கடவுளே ஆனாலும்

மனிதரிடம் இருந்து

நகையைக் காக்க

பூட்ட வேண்டும் கருவறையை…

நினைத்த நேரத்தில்

நின்னை தரிசிக்க

நின்பதம் சேர

நின்னாலயம் வரச்

சிறப்புத் தரிசனம்

விரைவு தரிசனமென

நீண்ட பட்டியலிட்டு

காசு பார்க்க

நீ மட்டும் மௌன

விரதமிருப்பதேனோ?

~ பிரியமுடன் பிரியா 🙏🏻

கோபுர வாசலிலே…

புத்தாண்டு பிறக்க

புது நெல் அறுவடை சிறக்கப்

புத்துணர்ச்சி பொங்கப்

புதுப்பானையில் புத்தரியிட்டு

நெய் சேர்த்து வெல்லமிட்டு

பொங்கல் படையலிட்டு…

எம்குலம் தழைத்து

எம்மை புகழோடும்

உடல் நலனோடும்

உள்ளக் களிப்போடும்

உற்றார் உறவினரோடும்

சீறும் சிறப்போடும்

எம்மனைவரையும் காத்து…

வாழ வைக்கும்

எம்பெருமானே

உம்மை வணங்கி

உம் இணைகழல்

பணிகிறேன்

எம் தவறுகளைப்

பொருத்தருள்வாயாக..

~பிரியா பாஸ்கரன் 🙏🏻

களத்து மேட்டு கனவு…

களத்து மேட்டு கனவு..

மழ வந்தா

வெதைக்க நெல் இல்ல

நெல்லு இருந்தா

மழ வரல

இப்போ

மாசம் மும்மாரி பெய்ஞ்சதால

மச்சானே

மாரியம்மன வேண்டி

நஞ்ச நிலத்துல

நெல் மணியும்

மாடபுரம் இரட்டகுட்ட

கொல்லையில

மல்லாட்டயும் வெதச்சிடலாம்…

நல்லா வெளஞ்சா

தவுசு அண்ணங்கிட்ட

போன போகத்து

வெத நெல்லுக்கு

வாங்கின கடன

அடச்சிபுடலாம்…

தாலிய அடகுவைக்காம

புள்ளைக்கு காலேசு காச

வர பங்குனில கட்டிபுடலாம்…

வளந்த பொண்ண

காலா காலத்துல

கட்டிக் கொடுத்து

கர சேத்துப்புடலாம்…

ஆடி காத்து

ஓயாம அடிச்சி

ஐப்பசி மழ வுடாது

பேயரதுக்கு முன்ன

ஒழுவுற வூட்ட

ஓடு மாத்தி

குடியிருக்கக் குந்தகம் வரமா

மாத்திபுடலாம்…

சொக்கப்பனே

கலப்பப் புடிச்சு

ஏரு உழுவர மனசும்

களப் பறிச்சி

நாத்து நடும்

உசிரும் மகிழ

காணி பூமியெல்லாம்

பூவா பூக்கோணும்

உங்கிட்ட கேப்பதெல்லாம்

பேங்குல கடன வாங்காம

வெவசாயம் பண்ணோணும்.. …

முப்போகமும்

நல்லா வெளஞ்சி

நல்ல வெலைக்கு விக்க

நாதிவோணும்…

வெளஞ்ச நெல்லுக்கு

வெல நிர்ணயம் செய்ய

வெதச்சவனுக்கு வழிவோணும்…

பணமுதலைங்க ஏவிவிட்ட

தரகருங்க தர்கத்தால

தரகு வெலையில நெல்ல

விக்காம இருக்கவோணும்…

ஆத்தா இத

எல்லாம் மீறி

எந்நிலத்த

அழிச்சி கம்பெனி

கட்ட கேட்கும்

அசலூரு சீமான்

கிட்ட இருந்து

காப்பத்தவோணும்…

எங்குலசாமியே

உடம்புல பலத்தயும்

நெஞ்சுல உரத்தயும்

கையில உழப்பயும்

கண்ணுல நம்பிக்கையும்

நனப்புல உன்னையும்

வைச்சி வெதைக்கும்

இப்போகம் நிறவா வெளஞ்சி

களத்து மேட்டுல

சேத்துக் காசாக்கி கனவெலாம்

நனவாகக் கைகூடவோணும்…

~பிரியமுடன் பிரியா 💕

மன உண்டியல்…

மன உண்டியல்…

காணும் பொங்கலுக்குக்

காலையிலேயே எழுந்து

கிணற்று நீரை

கிடுகிடுவெனச் சேந்தி

கடகடவென காக்கா குளியல்

குளித்து விட்டு

கல் தோசை இட்லி சாம்பார் வடை

கூட நான்கு சேர்த்துக்

கட்டுக் கட்டிவிட்டு

கச்சிதமாகப் பொங்கலுக்கு வாங்கின

காஞ்சிபுரப் பட்டுப் பாவாடை சட்டையணிந்து

கருங்கூந்தலை இழுத்து இருக்கப் பின்னி

குஞ்சம் வைத்துக் கட்டி

கமகமக்கும் மல்லியுடன்

கனகாம்பரத்தைச் சடையில் வைத்து

கண்ணுக்கு மையிட்டு

கருத்தாக நெற்றியில் பொட்டிட்டு

கல் ஜிமிக்கி காதிலாட

கழுத்தில் காசுமாலை மினுமினுக்க

கைகளில் கண்ணாடி வளைவி குலுங்கக்

கண்ணாடியில் ஆயிரம் முறைக்கு மேலே

கணக்கில்லாமல் அப்படி இப்படியெனக்

கண்டு களித்து தயாராகிக்

காணும் பொங்கல் வசூலுக்குக்

கிளம்புவேன்

கடைக்குட்டி செல்ல தம்பியுடன்

காலில் விழுந்து ஆசி வாங்கினால்

காசு தருவார்கள் கேட்காமலே

கை நிறைய..

அன்னை தந்தையிடம்

ஆசி வாங்க அன்புடன் அழகாக

வாழ்த்தி உச்சி மோந்து மொத்தமாய்

நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு

அடுத்து தாத்தாவின் தாடையில்

நச்சென இச்சு வைத்துக்

கொஞ்சி மகிழ்ந்து குதூகலமாய்

ஆசி பெற பதினாறும் பெற்றுப்

பெரு வாழ்வு வாழ வாழ்த்தி

பச்சை நோட்டு கட்டிலிருந்து

கொத்தாய் கொடுக்க

கெத்தாகத் தம்பியிடம் காட்டிவிட்டு

அப்போதுதான் வேலைக்குச் செல்ல

ஆரம்பித்த அண்ணனின் காலில் டபக்கென விழுந்து

அவன் சட்டையிலிருப்பதை

அலக்காக ஆட்டய போட்டு

அன்பாகத் தலை முடி களைத்து விளையாட அவன்

அடிக்க துரத்தும் முன்

ஓட்டமாக ஓடுவோம்

அடுத்த வசூலுக்கு…

அடுத்த வீட்டு அம்சா பெரியம்மா

தலைவர் குமாரு பெரியப்பா

மச்சுவீட்டு இராசி பெரியம்மா

குண்டு பாட்டி செயலட்சுமி

சாந்தமான சாந்தா அத்தை

வெற்றிலை குதப்பும் பரதன் மாமா

பக்கத்து வீட்டுச் சின்ன தாத்தா

அப்பப்பா மூச்சு விட்டு ஆசுவாசப்பட

நேரமில்லாமல் ஊரையே

சுற்று சுற்றி ஐந்து ரூபாய் நாணயம்

முதல் ஐந்நூறு ரூபாய் நோட்டுவரை

வசூலித்து முடித்து இறுதியாகப் படையெடுப்போம்

பாட்டி வீட்டை நோக்கி…

பாட்டி கொள்ளை பிரியத்துடன்

கட்டியணைத்து முத்தமிட்டுக்

கட்டியிருக்கும் புத்தாடையைக்

கண்டு செல்லம் பட்டு இராசாத்தியென

கணக்கில்லா வார்த்தை கொண்டு

கன்னம் வழித்து ஆசையுடன் பேசி

ஊட்டும் பொங்கலை இச்சையுடன்

உண்டு மடியில் தலை சாய்க்க

நெற்றி தடவி தலை கோதி

கொஞ்சும் மொழிதனில் நெஞ்சம் உருக

முற்றத்தில் வீசும் காற்றினில் கண்கள் சொருக

உடல் தளர்ந்து உறக்கம் வரும் வேளையில்

தங்கக்கம்பி தம்பி கருத்தாகக் காசை எண்ணி இவ்வளவெனக் கூவிட

வந்த உறக்கம் பஞ்சாகப் பறக்க

அலறியடித்து பாட்டியின் பங்கைப்

பாங்குடன் வாங்க ஆசி பெறப்

பலவற்றைப் பாட்டாகப் பாடி

பாசமுடன் முந்தானையில் முடிந்த

காசை கணக்காகப் பங்கிட்டுத் தர

நானும் தொட்டுத் தொட்டு எண்ணி

ஆனந்தமாய் மகிழ்ந்து

மண் உண்டியலில் சேமிப்பாக சேர

அவையனைத்தும் இன்றும்

மன உண்டியலில் நிறைவாய் உள்ளது …!

~பிரியமுடன் பிரியா 💕

சக்தி கொடு..!

மனதில் இருக்கும் மலத்தை அழிக்க

இனம்கண்(டு) அவற்றின் இருளின் – தனத்தை

அனந்தனே நீயென் அகந்தை ஒழித்து

அனலிலிட சக்தி கொடு…

மலம் – ஆணவம், கன்மம், மாயை

தனம் – தன்மை

அனந்தன் – ஈசன்

~ பிரியா பாஸ்கரன் 🙏🏻

மஞ்சு விரட்டு…

கன்னி மனதினை காளை கவரவே

இன்னாரின் ஏறுதனை இஞ்சியாக – என்றுமே;

மார்தட்டி வேட்டி மடித்து திமிலடக்கி

ஆர்ப்பரிக்கும் மஞ்சு விரட்டு…

இஞ்சியாக – வீரமாக

– பிரியமுடன் பிரியா 💕

இனிய காணும் பொங்கல் வாழ்த்துகள் 🎋🎋🌾

மந்தை வெளி..

தங்கத்தில் வர்ணம் தடவிய கொம்புடன்

கிங்கிணி முத்து கழுத்தினில் – தொங்கி

அலங்கரிக்க; பாயுமே ஆர்ப்பரித்து காளை;

கலகலக்கும் மந்தை வெளி…

~பிரியமுடன் பிரியா 🐄 🎋🌾

இனிய மாட்டுப்பொங்கல்

வாழ்த்துகள் 🌾🎋…

மாடு போல் உழைக்கும் நமக்கு …

(படித்ததில் பிடித்தது…)

பொங்கல் பொங்கட்டும்…

இக்காலையில் சொந்தங்கள்

ஒன்று சேர்ந்து

பொங்கும் மனதுடன்

புத்தாடை அணிந்து

அச்சுவெல்லம் புத்தரிசி

பொங்கல் குழைத்து

அஞ்சு காய்கறி

வகையாகச் சமைத்து

அட்டகாசமாய் வாழை

இலையில் நிறைத்து

கண்களில் பேரானந்தம்

பொங்கி வழிந்து

தித்திக்கும் தெவிட்டாத

செங்கரும்பை இணைத்து

இந்த தைத்திருநாளில்

சூரியனுக்கு நன்றியுரைத்து

இப்படையலைத் தலைவணங்கி

முழுமனதுடன் படைத்து

எம்குலம் அறத்துடன்

தழைக்க வாழ்ந்து

மெய்ஞானம் யாவருக்கும்

ஓங்கி வளர்ந்து

ஏர் பிடித்து

உழவு சிறந்து

பல்லுயிர் பலவற்றை

போற்றி காத்து

இவ்வுலகில் இயற்கை

நன்றாகச் செழித்து

வாழ்வாங்கு வளமுடன்

வாழ்க்கை அமைந்து

உள்ளத்தில் உவகை

ஊற்றாகப் பெருத்து

கற்ற மரபை

வழிவழியாக காத்து

இன்பம் எங்கும்

பொங்கலாகப் பொங்கட்டும்…

பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்🌾🎋

~பிரியமுடன் பிரியா 🌾🎋