பொங்கலோ பொங்கல்…

வாசலில் வண்ணக் கோலங்கள் அழகு நிறைக்கட்டும்!

வாயிலில் மாவிலைத் தோரணம் மங்கலமாகத் தொங்கட்டும்!

வெட்டிய செங்கரும்பு தெவிட்டாது தேனாய் இனிக்கட்டும்!

தோட்டத்தில் விளைந்த மஞ்சள் வீடெங்கும் மணக்கட்டும்!

புதுப்பானையில் பச்சரிசிப் புதுவெல்லப் பொங்கல் பொங்கட்டும்!

புத்தாடை அணிந்து மனம் குதூகலம் கொள்ளட்டும்!

சூரியனுக்குப் படையலிட்டு தலை வணங்கி வழிபடட்டும்!

உழைத்தவனுக்குப் பேரின்பம் உள்ளத்தில் ஊற்றாக உருவாகட்டும்!

எருதுகளுக்கு உள்ளம் உவகையுடன் நன்றி உரைக்கட்டும்!

உறவுகளுக்குப் பொங்கும் இன்பம் அளவில்லாமல் பெருகட்டும்!

உலகமே பொங்கலோ பொங்கல் கொண்டாடி மகிழட்டும்!!

அனைவருக்கும் இனிய தைத்திருநாள்

வாழ்த்துகள் 💐🙏🏻

~பிரியமுடன் பிரியா 💕

தடையேது?

மண்ணில் விதையிட்டு

காய்கறி வளர்த்து

கல்விக்கு வித்திட்டேன்!

சாலையில் கடையிட்டு

சுயதொழில் கற்று

சுயம்பாக வளர்ந்தேன்!

கூறுபோட்டு விற்று

கூட்டல் கணக்குடன்

பல்பணி கற்றேன்!

தடைகள் அகற்றி

தன்னம்பிக்கை கொண்டு

சான்றோன் ஆவேன்!

குறள் வெண்பா

மாலையில் காய்கறி விற்றாலும் நான்கற்று

சாலையில்; சான்றோனா வேன்…

~ பிரியா பாஸ்கரன் 🙏🏻

நிறம் மாறலாம் நிறம் மாறுமா?

மனிதரில்..

மாநிறம் சிலர்

கார்முகில் சிலர்

செந்நிறம் சிலர்

மஞ்சள் சிலர்

சிலர் உயரம்

சிலர் குள்ளம்

சிலர் மெலிவு

சிலர் பருமன்

சிலர் செல்வர்

சிலர் ஏதிலார்

சிலர் எப்போதும் மகிழ்வர்

சிலர் கவலையால் துவள்வர்

சிலர் கல்லாமல் கற்றவர்

சிலர் கற்றும் கல்லாதவர்

சிலர் சொற்புத்தி

சிலர் சுயபுத்தி

சிலர் வெண்புத்தி

வேற்றுமையில்

ஒற்றுமை கண்டால்

என்றென்றும் ஊற்றெடுக்கும்

உளமார்ந்த உள்ளன்பு..

அன்பைப் பெருக்கி ஆனந்த

இன்பத்தில் திளைத்து

நீண்ட ஆயுள் வளர்க்க

வேண்டிய மக்கள்..

அடித்துக் கொள்ள

ஆயிரம் காரணம்..

அன்றாடம் ஊடகங்கள்

அடுக்கடுக்காக

பட்டியலிடும்..

அரசியல் தூண்டும்

வீண்மதவெறி கலவரம்

சாதிக் கட்சித்

தலைவன் தன்னலத்திற்குத்

தூண்டும் வேண்டா

ஆர்ப்பாட்டம் அதற்கு

அப்பாவி பலிகடா

ஊர்மக்கள்

அரசியல் கட்சித்

தலைவர் கைது

அதிகார வர்க்கத்தின்

அட்டூழியம்..

அரசுப் பேருந்து

அடித்து நொறுக்கப்பட்டு

அழுகுரல் எங்கெங்கும்

அவலநிலையில்

ஊர்மக்கள்..

அண்ணன் தம்பிக்குள்

சொத்துத் தகராறு

அறுந்தது தொப்புள் கொடி சொந்தம்..

இழந்தது இது நாள் வரை

கட்டி காப்பாற்றிய மானம்..

அழுக்காற்றினால்

சுற்றமுடன் அடிதடி

ஆயுசுக்கும் தீராப்பகை

அடுத்த தலைமுறைக்கும்

அழிவைத் தரும் பகையைப்

போதிக்கும் மடமை..

வலியார் நில ஆக்கிரமிப்பு ஆசையால்

எளியாரிடம் வளர்க்கும் வலுச்சண்டை..

எதிர்த்து நின்ற எளியாரை ஒடுக்க

வலியார் காசுக்கு

அமர்த்தும் அடியாட்கள்..

ஆண்டாண்டாக

அண்டை மாநிலங்களுள்

ஆற்று நீர் பங்கிட்டுப் பிணக்கு

அடிதடி கலவரத்தில்

அப்பாவி மக்கள் உயிரிழப்பு..

அடித்துக் கொண்டதால்

ஆவது என்னவோ?

அழுக்காற்றினால் உயர்ந்தார்

உண்டோ?

கொதித்துப் பிறரை

அடித்துக் கிழித்து

உடலிருந்து

உதிரும் சிவப்புக்

குருதி தனக்கும் உதிர

கண்டாலும் ஒன்றே

என கொண்டாலும்

மடமையால்

தொடரும் மூடர்கள்..

மனிதரின் நிறம் மாறலாம்

அறிவுத் திறம் மாறலாம்

உருவம் வேறாகலாம்

வழிபடும் இறைவன் வேறாகலாம்

ஏன் இறைவனையே மறுக்கலாம்

இனம் மொழி சாதி இன்னும் எத்தனை வேறானாலும்

அன்பால் ஒன்றுபட்ட

கள்ளமில்லா மக்கள் உள்ளத்தில்

ஏற்றிவிட்ட சினத்தால் நமக்குள்

ஒற்றுமையை மறந்து சண்டையிட்டு

உதிர்க்கும் உதிரம் வேறாகுமா? –

உணர்ந்தால்..

உதிரம் உதிர்ந்து

உறைவதை

தவிர்க்கலாம்

தடுக்கலாம்..

“நிறம் மாறும் நிறம் மாறாது”!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾

முத்தத்தின் மொழி…

விழியின் மணியால்

வியந்துயிட்ட முத்தம்

இரசிப்பு!

விரலின் நுனியால்

விரும்பியிட்ட முத்தம்

பெருமை!

நெற்றியின் நெற்றியால்

முட்டியிட்ட முத்தம்

அன்பு!

காற்றின் பலத்தால்

பறக்கவிட்ட முத்தம்

ஆசை!

கண்ணீரின் வரிகளால்

கவிதையிலிட்ட முத்தம்

பிரிவு!

கையின் இறுக்கத்தால்

அனைப்பிலிட்ட முத்தம்

பெருமிதம்!

மனதின் வலுவால்

உரிமையிலிட்ட முத்தம்

நட்பு!

பார்வையின் மெளனத்தால்

பறிமாறியிட்ட முத்தம்

காதல்!

பல்லுயிரின் போற்றலால்

வைத்திட்ட முத்தம்

கருணை!

உணர்வின் உயிரால்

உருகியிட்ட முத்தம்

தாய்மை!

முத்தத்தின் உச்சரிப்பால்

இதழிட்ட முத்தம்

மொழி!

இதழின் இசைவால்

இதழிலிட்ட முத்தம்

உயிர்!

~பிரியமுடன் பிரியா 💕

கலங்கரை விளக்கம்…

எண்ண அலைகளுக்கு

ஓய்வேது…

வண்ண கனவுகளுக்கு

தடையேது..

சின்ன ஆசைகளுக்கு

முடிவேது…

வாழ்வின் தேடலுக்கு

எல்லையேது…

தத்தளிக்கும்

அலைகளால் உருவாகிய

இலட்சிய

கனவுகளுக்கு உயிர்தந்து

மங்கையின்

ஆசைகளை நிறைவேற்றி

தேடல்களுக்கு முடிவாய்

இருக்கும்

என் கண்ணாளனே

நீயே

என் வாழ்வின்

கலங்கரை விளக்கம் …!

~பிரியமுடன் பிரியா 💕

வாழ்க்கை படகு…

திசை தெரியாமல்

பயணம் செய்யும்

வாழ்க்கை படகில்

வழிகாட்டியாய் நல்ல

வாழ்க்கைத் துணை அமைந்ததால்

சிறகு விரித்துச்

சிலிர்ப்பான காற்றைச் சுவாசித்து

சீராகப் போகிறது

இலக்கை தேடி…

~பிரியமுடன் பிரியா 💕

மரபுக் கவிதை:

அசைந்தாடிச் செல்லும் அலையிலும் மாறா

திசையிலே தோணி திடத்தில் – இசைந்து;

தடைகள் நிறைந்த தரணியில் வென்று

அடைவோம் நமது இலக்கு…

– பிரியமுடன் பிரியா 🚣‍♀️🚣‍♀️🚣‍♀️

மகாசக்தி…

கற்கால மங்கையும் கல்விச்சாலை சென்றனரே;

தற்கால காரிகை கல்லூரி – கற்றனரே;

தோன்றிய நாள்முதலாய் பெண்களின் கைவண்ணம்

ஆன்றிட்ட இக்கல்லே சான்று…

தாயாய் தமக்கையாய் தங்கையாய் அண்ணியாய்

சேயாக அன்னைக்கு; பேரனுக்கு – ஆயாவாய்

காலையில் வேலைக்குச் சென்று; வருவாளே

மாலையில் இக்காலப் பெண்…

ஆண்பெண் எவரானால் என்ன மனதாலும்

பண்பில் அனைவரும் ஒன்றேஇம் – மண்ணிலே

பெண்ணியம் பேச்சாக மட்டுமே இல்லாமல்

உண்மையில் பின்பற்று வோம்…

~ பிரியமுடன் பிரியா 🙏🏻

வரம் தந்த சாமி…

வாழ்க்க அழகாக

ஆச்சி உன்னால/செல்லமே பாரு

மெல்ல அசந்தாடி

ஓடும் அழகு தான் சோரு(ஜோரு)..

எந்தன் மகனே

நான் உன்ன நேசிக்குறேன்

முத்த மழயா யாசிக்கிறேன்….

என்னை அம்மானு

சொல்லவே உருகிவிட்டேன்

கொஞ்சும் மொழி

கேக்கதான் மயங்கிவிட்டேன்…

ஆடு குதி போட்டு ஆடு

என்னோட ராசா

ஏ ஏ ஏ

வாவா அடி வச்சி வாவா

என்னோட ராசா

கண்ணுல பாசம் கூடுதடா

வாழ்விலும் நேசம் வீசுதடா

நிம்மதி உன்னால் வந்ததடா

நெஞ்சமும் பாகாய் போனதடா

மார்பிலே உன்ன நான் சுமப்பேன்

தூங்கவே நித்தம் நான் படிப்பேன்

தூக்கியே உன்ன சுத்திடத்தான்

இன்பமும் நாளும் சேருதையா ….

பழியை சரி செய்ய

வரம் தந்த சாமிநீயே

தவமாய் இருந்தேனே

உன்ன கண்டு கொஞ்ச எண்ணி

அன்பு பெருகுதே ராசய்யா

உயிர் மூச்சு எல்லாம் நீதான் டா

வாழ்க்க அழகாக

ஆச்சி உன்னால பாரு

மெல்ல அசந்தாடி

ஓடும் அழகு தான் சோரு(ஜோரு)..

எந்தன் முத்தே

நீ எந்தன் பட்டுக்குட்டி

யாரும் பார்க்கா வைரக்கட்டி

இந்த குட்டி பயகிட்ட

அன்பு கொண்டு

வந்து வசமா அவங்கிட்ட

மாட்டிகிட்ட

~ பிரியமுடன் பிரியா 💕

மனம் உன்னிடம்…

யாமறியாமலே

யாது மானாய்

என்னுள்…

🌸

விழிகள்

வாசித்த மொழியில்

வாழ்ந்து விடுவேன்

யுகமுள்ள வரை…

🌸

விலகிச் சென்றாலும்

வீழ்த்தி விடுவாய்

நெருக்கிச் சென்றாலும்

நெஞ்சுருகச் செய்திடுவாய்

உன் அன்பெனும் கடலில்…

🌸

மை கொண்டு எழுதமர

மையல் கொண்ட மனமோ

மயங்கி வரைகிறது

மடல் உனக்கு…

🌸

மனதில் மலர்ந்து

மணம் பரப்பும் மலர்

என்றுமே வாடுவதில்லை

உன் காதலால்…

🌸

விழிகள் மோத

விழி தழைக்கின்றது

வழியில்லாமல்

நாணத்தில்..

🌸

மௌனமாய் இருந்தே

மனதில் நுழைந்து

மௌனத்தை கலைத்திட்டாய்…

🌸

விழுந்து விட்டேன்

எழத்தான் மனமில்லை

உன் விழியின் சிரிப்பில்…

🌸

காந்தமாய்

கவர்ந்திட்டாய்

கருவிழியால்

என் நெஞ்சத்தை…

🌸

தனிமை

கோபித்துக் கொண்டது

மனம் உன்னிடம்

மந்தி போல் தாவுவதால்..

🌸

கனவிலும்

மகிழ்கிறேன்

உன் பிம்பத்தைக்

காண்பதினால்..

🌸

சுயம் இழந்துவிட்டேன்..

என்னுள் நீயே

நிறைந்திருப்பதால்..

~பிரியமுடன் பிரியா 💕

அழகோ அழகு…

தேயாத நிலவும்

ஓயாத அலையும்

உருகாத பனியும்

புலப்படாத காற்றும்

புரியாத மொழியும்

தெரியாத கடவுளும்

தணியாத வேட்கையும்

பார்க்காத விழியும்

கலையாத கனவும்

கேட்காத கேள்வியும்

தோற்காத தோல்வியும்

பேசாத வார்த்தையும்

கபடில்லாத பொய்யும்

கற்காத அறிவும்

அலைபாயாத மனதும்

தொலையாத நிம்மதியும்

ஏறாத வயதும்

இறங்காத மரியாதையும்

சந்தேகமில்லாத உறவும்

பகட்டில்லாத அழகும்

பிரியாத நட்பும்

சொல்லாத காதலும்

அழகோ அழகு..!

~பிரியமுடன் பிரியா 💕