
இலைகள் உதிர்ந்து
மண்ணுக்கு உரமானது..
மரம் இறந்து
மண்ணடுப்புக்கு விறகானது…
பனித்துளி கரைந்து
மழையாகப் பொழிந்தது…
விதை வெடித்து
விருட்சத்திற்கு வித்திட்டது…
கல் சிதைந்து
அழகான சிற்பமானது…
தீக்குச்சி தன்னுயிர் ஈந்து
மெழுகுவத்திக்கு உயிரூட்டியது…
மானிடா நீ என்ன செய்வாய்?
கண்மூடிவிட்ட வண்ணம் கண்ட கண்மூடா விழித்திரை
கற்பனையில் வர்ணம் காணாதவர் காண..
இறந்தும் இறக்காமல் துடிக்கும்
இதயம் பிறர் வாழத் துடிக்க..
சீருடன் இயங்கும் நுரையீரல்
சிறப்புடன் மற்றவர் வாழ..
இழந்த இழையங்கள்
இயற்கையாகத் தானே மீளுருவாக்கும்
கல்லீரல் வேண்டியவருக்குக் கிடைக்க..
சிறுநீர் கழிக்கச் சிறுநீரகம்..
உணவுச் செரிக்கும் கணையம்..
இரையகக் குடற்பாதையின் குடல்..
சுருக்கம் நிறைந்த தசை..
உடலுறுப்பு பாதுகாக்கும் எலும்பு..
இவையனைத்தையும்..
மானிடா நீ இறந்து
தீயிக்கு எரிந்து சாம்பலாகும் முன்..
மண்ணில் புதைந்து மக்கும் முன்..
பாழுடம்போடு அழியாமல்
பாரினில் பற்பலர் பயன்பெற்று
மானிடம் தழைத்தோங்கிட
மரணவாசலில் பரிதவிப்பவருக்கு
மாண்டும் மறையாமல்
மீண்டும் மண்ணுலகில் வாழ
மறவாமல் இறக்கும் முன்
மகிழ்ந்து தன்னுடலை தானமாக ஈந்து
உடலை உயிர் பெறச்செய்திடுவாயா..?
“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.”
– திருமூலர்