திசை தெரியாமல்…

🌺🌺🌺🌺🌺🌺🌺

திசை தெரியாமல்….

🌺🌺🌺🌺🌺🌺🌺

மானே மயிலே மட்டுமே

அன்பின் அழைப்பென

யார் சொன்னது?

டாய் மர மண்டை

மக்கு மாங்கா கூட

அன்பின் அழைப்பே..

🌺🌺🌺🌺🌺🌺🌺

“ம்ம்ம்…ல்” கூட

மனம் கூத்தாடும்

மௌனம் கூட

மௌனமாய் கொல்லும்..

🌺🌺🌺🌺🌺🌺🌺

விழி பேசும்

மொழியில்

மௌனம் கூட

சாட்சியாகும்…

🌺🌺🌺🌺🌺🌺🌺

அலைபேசி

அழைத்துச் சொல்லும்

அன்பின் மொழி கேட்க

ஆவலாக இருப்பதாக..

🌺🌺🌺🌺🌺🌺🌺

ஒற்றை புருவத் தூக்கலில்

மனம் பறக்கிறது

திசை தெரியாமல்..

🌺🌺🌺🌺🌺🌺🌺

உள்ளத்தில் இருப்பதை

உரைத்திடும்

உறங்காத கண்கள்..!

🌺🌺🌺🌺🌺🌺🌺

பேசாத வார்த்தை

பேசிடும்

அகத்தின் மொழியை..

🌺🌺🌺🌺🌺🌺🌺

விழியில் எழுதினேன்

உன் பெயரை

பேனா முள் குத்துமென..

🌺🌺🌺🌺🌺🌺🌺

விழிகள் சுவாசித்து

இதயம் மலரும்

உன் ஒற்றை குறுஞ்செய்தியில்..

🌺🌺🌺🌺🌺🌺🌺

– பிரியா பாஸ்கரன் ❤️

பசுமையோடு பயணம்..!

Posted 12/13/19 UA MK

🌸🌸🌸🌸🌸🌸🌸

பசுமையோடு பயணம்..!

🌸🌸🌸🌸🌸🌸🌸

பறக்கும் தும்பி

பாடும் பறவை

பச்சை வயல்கள்

பறக்கிறது மனது

பயணம் நிற்கிறது

பூவானத் தூவலில்..

🌸 🌸🌸🌸🌸🌸

நிறுத்துங்க நிறுத்துங்க

வரவேற்கும்

வரப்பின் மழையில்

நனையலாம்..

🌸🌸🌸🌸🌸🌸

கடும் வெயிலில்

கருனை மழை

பொழியும் தெளிப்பானை

🌸🌸🌸🌸🌸🌸

முத்தாய் தெறித்து

முகத்தினை மறைத்திடும்

கை நனைத்திட

மெய் சிலிர்த்திடும்

தூவல் மழை

🌸🌸🌸🌸🌸🌸

நச்சென

நீ(ர்) தொடச்

சட்டெனச்

சிரித்தது

நெல் மணிகள்..

🌸🌸🌸🌸🌸🌸

வயல்கள்

வாடாமல் இருக்க

வேளையில் வரும்

வருணன்…

🌸🌸🌸🌸🌸🌸

விட்டு விட்டுத்

தொட்டுத் தொட்டு

மகிழ்ந்தது

பச்சை பட்டாடையை..!

🌸🌸🌸🌸🌸🌸

அழகைக் காட்டும்

கண்ணாடிக்கு

அணிகலமாக

அழகு முத்துகள்..!

🌸🌸🌸🌸🌸🌸

வர்ணம் இல்லாமல்

வாரி இறைத்து

வரைந்தது ஊர்தியில்

வண்ண ஓவியம்..

🌸🌸🌸🌸🌸🌸

அப்ப்பாஆ….இன்னும்

ஒரு வாரத்துக்கு

வண்டி கண்ணாடி

பளபளக்கும்…😜

🌸🌸🌸🌸🌸🌸

ஒரு வெண்பா..

வண்டியில் வந்த பயணத்தில் நீர்ப்பட்டு

கண்ணாடி கொண்டது பொட்டுகள் – பெண்மையும்

கொண்டாடி பார்க்க கதவை திறக்கவும்

திண்டாடி போகும் மனம்!

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

– பிரியா பாஸ்கரன் 🌸🌸🌸

சும்மாடு..!

சுழலும் பூமிதனில்

சுகமாய் நீயிருக்க

சுடர் படிப்பு என்றறிந்து

சிறப்போடு கற்றுத் தேர்ந்து

சான்றோனாகிச் சாதித்து

சுழலும் நாற்காலியில்

சொகுசாக வேலை பார்த்து

சகலமும் வாழ்வில் கிடைத்து

சொந்த பந்தங்களை மதித்துச்

சார்ந்து வாழ்வமைந்து

சிரித்து நீ மகிழச்

சுட்டெரிக்கும் வெய்யிலில்

சுற்றித் திரிந்து

சுமக்கும் சும்மாடு கூட

சுகமான சுகம்!

– பிரியா பாஸ்கரன் ❤️

வண்ணம் கொண்டதோ?

வண்ண மலரோ மதுவுடன் திண்ணமாக

வண்டை யழைக்கவும் அவ்வண்டும் – அண்ணத்தில்

வண்ணமாகத் தேனருந்தி தேனோடு வண்ணத்தை

கொண்டு பறந்துசென்ற தோ?

– பிரியா பாஸ்கரன் 🐝🐝🐝

பாரதி ஒரு சித்தன்..!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

பாரதி ஒரு சித்தன்..!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

ஔவை வழி பற்றி

“புதிய ஆத்திச்சூடி”

படைத்து

அறத்தைப் போற்றிய அறக்கவி!

வீறுகொண்டு

“அச்சமில்லை, அச்சமில்லை, அச்சம் என்பதில்லையே”

முழங்கி சக்தி கொடுத்த

விடுதலைக் கவி!

கவிநயத்துடன்

“பாஞ்சாலி சபதம்” எழுதி

“பாஞ்சாலி” பாரத தேவி

உருவகப்படுத்தி

காவியம் படைத்த நாடகக்கவி!

இன்னிசையாக

“சின்னஞ்சிறு கிளியே, கண்ணம்மா செல்வக் களஞ்சியமே!”

இசைமழைப் பொழிந்த

இசைக்கவி!

சிறாருக்கு

“ ஓடி விளையாடு பாப்பா”

பாடி நற்பண்புகள்

போதித்த குழந்தைக்கவி!

மதலைக்கு

“ தமிழ்த்திரு நாடுதனைப் பெற்ற தாயென்று கும்மியடி பாப்பா” என

பாடி மகிழ்ந்து

நாட்டுப் பற்றை ஊட்டிய தேசக்கவி!

எழுச்சிமிக்க

“ஆகா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி” என

ரஷ்யப் புரட்சிப்

பாராட்டிய புரட்சிக்கவி!

தேனாக

“செந்தமிழ் நாடெனும் போதிலே – இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே!” என

வலிமைமிக்க வரிகள்

வடித்த சுதந்திரக்கவி!

நெஞ்சுருக

“உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என

நெகிழ்ந்து

நல்கிய உணர்ச்சிக்கவி!

தாய் தமிழன்னைக்கு

“ யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!” நெஞ்சம் நிமிர்த்தி

பெருமை போற்றும் தமிழ்க்கவி!

வசனத்தில்

“ சக்தி எல்லை யற்றது, முடிவற்றது, கூட்டுவது, கலப்பது..” என

சரளமாகச் சக்தியை

விளக்கிய விஞ்சானக்கவி!

அன்புடன்

“பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும்..” என

காதல் இரசம் சொட்டக்

கவி வரைந்த காதல்கவி!

வியக்கத்தகு

“விண்டுரைக்க அறிய அரியதாய், விரிந்த வா வெளியென நின்றனை..” என

பிரமாண்ட தோற்றம்

படைத்த பிரபஞ்சக்கவி!

பெண்ணடிமை ஒழிக்க

“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்” என

வெகுண்டு

பொங்கியெழும் புதுமைக்கவி!

மனதை ஒருமுகப்படுத்தி

“எனக்கு வேண்டும் வரங்களை

இசைபேன் கேளாய் கணபதி” என

ஆனைமுகத்தன் அருள்

வேண்டிச் சரணடைய

வழிகாட்டிய பக்திக்கவி!

தீர்க்கதரிசியாய்

“ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என

பாடி களித்து வருங்காலம்தனை

மெய்ஞானம் கொண்டு

மொழிந்த மாபெரும் மகாகவி!!!

என் பாட்டனாருக்கு

இனிய பிறந்த

நாள் வாழ்த்துகள் 🌺🌺🌺

– பிரியா பாஸ்கரன் 🙏🏻

கார்த்திகை தீபம்..!

கார்த்திகை தீபம்!!

வாசலில் அழகு மாக்கோலம் நிறைக்கட்டும்!

கோலத்தில் அழல் விளக்கு சுடர்விட்டு ஒளிரட்டும்!

விளக்கேற்றி வழிபட எண்ணற்ற நன்மைகள் விளையட்டும்!

குழந்தை மாவிலிச் சுற்றி மகிழட்டும்!

பெரியோர் குழந்தையை தட்டாமாலை சுற்றிக் களிக்கட்டும்!

அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியைப் பரப்பட்டும்!

சொக்கப்பானைக்கு அக்கினியிட்டு சோதி வடிவாக வழிபடட்டும்!

தீப ஒளியில் மங்களம் வாசம் செய்யட்டும்!

ஊரெங்கும் ”வேலின் நோக்கிய விளக்க நிலையும்” மிளிரட்டும்!

அனைவருக்கும் அருணாச்சலர் அருள் கிட்டட்டும்!

தீப திரு நாள் வாழ்த்துகள்!!

– பிரியா பாஸ்கரன் 🙏🏻

இது என்ன மயக்கம்..!

வண்ண மலரில் வருகின்ற வாசனையில்

வண்டும் மெதுவாக வந்தமர – திண்ணமாக

வண்ணமான பூச்சியும் வாயில் மதுவருந்தி

வண்ணமதில் கூடலான தோ?

வண்ணமதில் – அழகில்; கூடல் – மயக்கம்.

– பிரியா பாஸ்கரன் 🌺

கொலுசொலி..!

💗💗💗💗💗💗💗💗

கொலுசொலி..!

💗💗💗💗💗💗💗💗

கருவில் உதித்து

காலத்தில் வளர்ந்து

தாவி அணைத்து

தாடையில்

நச்சென இச்சென்று

முத்தம் பதிக்க

துயிலெழுந்து

ஓடி வருவாயெனக்

கனவு கண்டு

காதம் காலம் காத்திருந்தேன்..

காலம் கனிந்து

பிறந்து வளர்ந்தாய்..

ஒரு காலைப்பொழுதில்

என் கனவு நினைவாகும்

நாள் இதுதானென

உணர்ந்தேன்…

தடதடவென படியில்

தாவி வரக்

கிண்கிணியாய்

கொஞ்சும் மொழி பேசும்

சல் சல்

கொலுசொலியில்

உயிர் மூச்சும்

உறைந்தது பேரானந்தத்தில்

ஒரு நொடி…

என் செல்வ மகளே..!

– பிரியா பாஸ்கரன் 💗

கொலுசு..!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கொலுசு..!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

பாவையின் மனதினை

பட்டெனக் காட்டிடும்

கண்ணாடி..!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

பேசாத மொழியும்

பேசிடும்

பேச்சாளன்..!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

களவாணித் தனத்தைக்

காட்டிக் கொடுக்கும்

காவலன்…!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

சாதாரண நடையையும்

சிங்கார நடையாக்கிடும்

சலங்கையின் சிலுங்கலில்..

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

குழந்தையின்

கிலுகிலுப்பை..!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

சிந்தும் சிலுங்கலில்

சித்தம் கலங்கிடும்..!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

ஏழு சுரங்களையும்

இசைத்திடும்

இசைக்கருவி..!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கொஞ்சும் மொழி

பேசும் கிள்ளை..!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கண்ணாளனையும்

கவிஞனாக்கிடும்

மெத்தையில்

பேசும் உன் மொழி.!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

காதலனைக்

கவி படைக்க வைத்திடும்

தான் கதைக்கும் மொழியால்..

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

மனசு சிக்கிக்

கொண்டது

உன்னில் மாட்டிய

புடவை போல..

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

அதிராத பாதத்தை

அணைத்து

முத்தமிடும் காதலன்..!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

ஒற்றை முத்தும்

ஓசை எழுப்பி

ஓய்வில்லாமல்

ஒய்யார சதி போட்டிடும்

ஓய்வாய் அவள் உறங்குகையில்..

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

ஓயாமல்

பாடும் காண(ல்) குயில்..!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

ஒற்றை முத்து

உதிர்ந்தால்..

எடுக்கவா? கோர்க்கவா?

என கேட்க வைப்பாய் என்னவனை.!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

– பிரியா பாஸ்கரன் 🌺

மாறாத இயல்பு..!

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

மாறாத இயல்பு..!

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

விண்ணில் முகிலுள் பிறந்து

மண்ணில் விழும் மழையாய்..

மண்ணில் விதை முட்டி முளைத்து

தன்னில் வளரும் விருட்சமாய்..

தன்னில் அமைதி நிறைந்து

கண்ணில் உறக்கம் வரும் இரவாய்..

கண்ணில் விழி மலர்ந்து

பெண்ணில் மனம் மலரும் உறவாய்..

பெண்ணில் கரு உதித்து

மண்ணில் பிறக்கும் மகவாய்..

மண்ணில் நான் புதையும் வரை இயல்பாய்

என்நெஞ்சம் தன்னில்

நிறைந்திருப்பாய் நட்பே!

– பிரியா பாஸ்கரன் ❤️