நாணத்தின் மறு வகை..!

தலைவி மரம்:

பகலவன் விரைந்தெழுந்து வருகிறான்

மதியின் முகம் காண அவள்

நாணம் கொண்டு ஓடி ஒளியும் முன்..

அந்த அழகைக் காண கண் கோடி வேண்டுமல்லவா..!

தலைவன் மரம்:

இரவு பகல்

வெயில் மழை

வெப்பம் தண்மை

இடி மின்னல் என

என்நேரமும் எனைப் பிரியாமல்

என்னருகில் துணையாக

நீ நிமிர்ந்து நிற்கும் அழகைக் காண

எத்தனை கண்கள் வேண்டும்..!

தலைவி மரம் :

காற்றில் அசைந்து நாணம் கொண்டது…

மதியும் பகலவனும்:

மதியும் கற்றது நாணத்தின்

மறு வகையை மரத்திடம்..

நின்று தன்னவனின் முகம் பார்த்து

நலம் விசாரித்து விடைப் பெற்றது

நாள்தோறும்..!

-பிரியா பாஸ்கரன் 💕

நூல் கொடை..!

ஃபார்மிங்டன் நூலகத்தில் தமிழ் புத்தகம் நூல் கொடை நடைப்பெற்றது 11/2/19 அன்று. அதற்கு நன்றி தெரிவித்து எழுதிய சில வரிகள்…

புது வேகத்தால்

புதுக்கணிப்பு

புறப்பட்டு

புது உத்திப் பிறந்து

புத்துணர்ச்சி

உருவாக்கும்

“புத்தகம்”

புதுஅகம் (Farmington நூலகம்)

புகுந்து புதுவொளிப் பாய்ச்சி

இன்பவெள்ளம் பெருக்கட்டும்!

நம்மை வாழ்வாங்கு வாழவைக்கட்டும்!!

=========================

“ யாம் பெற்ற

இன்பம் பெருக

இவ்வையகம்”

என்பதற்க்கிணங்க

தங்கள்

இன்ப வெள்ளத்தை

“கொடை” கொடுத்த

தேந்தமிழ் “புத்தகம்”

கொடையாளர்களுக்கு

பலக்கோடி நன்றிகள்!!

========================

பத்து பகிர்ந்து

பகுத்தறிவு வளர்க்கும்

பல “நறுந்தமிழ்” நூல்களைப்

படிக்க தருவித்து

பலப்பேர்

பயனடைய வழிவகுத்தப்

பல நல்லுள்ளங்களுக்கு

பற்பல நன்றிகள்!!

“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு.”

-பிரியா பாஸ்கரன் 🙏

கடமை கடைப்பிடி!

மழையில்

தன்னை நனைத்து

நின்னைக் காக்கும்

தன்னலமற்றது

குடை!

வாழ்க்கையில்

வறியவருக்கு ஈந்தால்

நின்பெயரை நிலைத்து

நிற்கச் செய்திடும்

கொடை!

நிலத்தில்

நீரைப் பகுத்து

நிறைத்திடும்

விளைச்சல்

மடை!

நாட்டின்

அரணாயிருந்து

அச்சம் போக்கி

அரவணைப்பது

படை!

இராணுவவீரன்

நம்முயிர் காக்க

தன்னுயிர் ஈந்து

தீயரையழிக்கும்

தடை (காவல்)!

நாம் சுதந்திரமாக

இருக்க நாட்டை

தடை காக்கும் குடையாக..

ஏறுநடையுடன் ஏதடை(பகைமை) எதிர்த்து..

பீடு நடையிட்டு படையெடுத்து

சூழ்ச்சியால்

எதிரிகளிடம் அடைபட்டு..

நடை உடை இழந்து..

கடையில்(முடிவில்) அகாலத்தில்

விழுப்புண் பட்டு வீறெய்தும்

வீரர்களுக்கு..

தொடையிட்டு(பூமாலை) அஞ்சலி செய்து..

இடை(துன்பம்) படும் அவர்கள்

குடும்பத்தார்க்கு

மடை திறந்த வெள்ளம் போல்

தடையில்லாமல்

நம்மால் இயன்றதை

கொடை கொடுத்து

கடைமை செய்வோம்

இனி வரும்

சுதந்திர தினங்களில்!!

-பிரியா பாஸ்கரன் 🇮🇳 🙏🏾

இந்த கவிதை மிச்சிகன் கதம்பம் நாளிதழில் வெளி வந்தது.

ஆலோவீன் மிட்டாய் வர்த்தகம்!!

விருப்பமான உடை அலங்காரத்தில்
விடாது மழை பொழிந்தாலும்
விறுவிறு நடையிட்டு
வீட்டுக் கதவைத் தட்டி
விருப்பமான மிட்டாய்களைக்
வண்ணக் வாளியில் வாங்கிக் கொண்டு
வாயிலும் மென்றுக்கொண்டு
வாண்டுகள் செல்லும் அழகே அழகு..
வீட்டுக் சென்று
வண்ணக் காகித மிட்டாய்களை
வரிசையாக வகைப் பிரித்து
விருப்பத்துடன் தோழமையுடன் பங்கிட்டு
வேண்டுமளவு உண்ணும் சுவையின் சுகமும்
அழகோ அழகு!!

-பிரியா பாஸ்கரன் 🍭 🍬

காதல்.. கவித்துளிகள்..!

காதல்…துளிகள்..!

இரவின் உறக்கம்
இரையானது
உன் நினைவுக்கு..!

‘ம்ம்ம்ம்’ கொட்டியே..
தலையாட்டி
பொம்மையானேன்
உன் காதல் வார்த்தையில்..

உனை நினைத்து
எனை நனைத்தேன்
காதல் மழையில்..

அலைபேசிக்கு
சுவாசம் திணறுகிறது
நம் கை பிடிக்குள்
கொஞ்சம்
இடைவெளி விடுவோம்
பிழைத்துக்கொள்ளட்டும்..

கனவிலும் நீ
கண்ணெதிரிலும் நீ
கவிதையிலும் நீயே
கதாநாயகன்!

நான் காற்றை
நேசித்து சுவாசிக்கிறேன்..
நீ விடும் காற்றை
நான் சுவாசிப்பதால்..!

உன் குரல் கேட்டாலே
என் மனமோ
சிறகில்லாமல்
சிறகடித்துப் பறக்கிறது
சிட்டுக்குருவியாய்
காதல் வானில்..!

என் நினைவகப்
படங்கருவியில்
நீயே நிறைந்திருக்கிறாய்
நிழல் படமாய்..!

கொஞ்சல்
கெஞ்சல்
கொடுக்கல்
வாங்கல்
கிண்டல்
அழகோ அழகு
காதலில்!!

முடிவில்லாப் பயணம்
முற்றுப் பெறாமல்
நான் தொடரவேண்டும்…
உன் கண்விழிப் பார்த்து
கைக் கோர்த்து
காலமெல்லாம்…!

-பிரியா பாஸ்கரன் 💕

இயல்வது கரவேல்..!

அன்னை இயல்வது அன்பு
ஆசான் இயல்வது நல்லெதிர்காலம்
இசைக்குரற்கருவி(குயில்) இயல்வது கானம்
ஈகை இயல்வது பேரானந்தம்
உறவுகள் இயல்வது பலம்
ஊக்கம் இயல்வது நற்படைப்பு
எண்ணம் இயல்வது நற்செயல்
ஏற்றம் இயல்வது புகழ்
ஐமுகன் இயல்வது அருள்
ஒழுக்கம் இயல்வது நற்பண்பு
ஓர்மை இயல்வது நேர்மை
ஒளவை இயல்வது நீதி

கல்வி இயல்வது அறிவு
ங இயல்வது அரவணைப்பு
சான்றோர் இயல்வது கல்வி
ஞானம் இயல்வது பக்தி
அடக்கம் இயல்வது உயர்வு
இணக்கம் இயல்வது பெருமகிழ்ச்சி
தந்தை இயல்வது நற்பண்பு
நட்பு இயல்வது நம்பிக்கை
பண்பு இயல்வது நல்லொழுக்கம்
மன்னிப்பு இயல்வது மனமைதி
இயற்கை இயல்வது வளமை
இரவி இயல்வது ஒளி
தோல்வி இயல்வது அனுபவம்
வனம் இயல்வது எழில்
ழகரம் இயல்வது உற்சாகம்
நூல்கள் இயல்வது அறிஞன்
அறம் இயல்வது நல்வாழ்கை
மனம் இயல்வது ஆற்றல்

இஃதே இயல்வது கரவேல்
என்றே கொள்க…
இல்லலில் இருப்போர் வாழ்வுச் சிறக்க
இன்பம் அவர் வாழ்வில் பெருக
இல்லாருக்கு இயன்றதைச் செய்க
இன்புற்று வாழ்வாங்கு வாழ்க!

-பிரியா பாஸ்கரன் 🙏

ஆறுவது சினம்..!

அமைதி கிட்டி ஆற்றல் பெருகும்!

இடும்பு அழிந்து ஈரவன் சிறக்கும்!

உள்ளம் உவகை ஊங்கெனப் பெருகும்!

எண்ணம் சிறந்து ஏற்றம் வரும்!

ஒற்றுமை பெருகி ஓங்கும் வாழ்வும்!

ஒளவியம் ஒழியும் அஃதே …

ஆறுவது சினம் என்றே கொள்க!!

-பிரியா பாஸ்கரன் 🙏

அடி என்னவளே…!

நான் கொஞ்சினால்

நீ மிஞ்சிகிறாய்..

நான் மிஞ்சினால்

நீ கெஞ்சுகிறாய்..

நான் கெஞ்சினால்

நீ விஞ்சுகிறாய்..

நான் விஞ்சினால்

நீ கொஞ்சுகிறாய்..

கெஞ்சிக் கொஞ்சி

தஞ்சமாக நெஞ்சினில்

சரணடைந்து

நின் பெயரை என் இதயம்

ஓயாமல் உச்சரிப்பதைக்

கேட்டுக் கேட்டு

பொத்திப் பொத்தி

போத்திப் போத்தி

நம் புவனம் படைத்து

அதில்

காதல் குழந்தையானாய்

– உன்னவன்!!

– பிரியா பாஸ்கரன் 💕

அழகு… அணிலாரே..!

அழகு…அணிலாரே!!

கீச்..கீச் சத்தத்துடன்

சின்னவாய் நொடிக்கு

சிலமுறைத் திறந்து

சின்னக் குண்டு

கண் விழி மலர்ந்து

காண்போரை

கவர்ந்திழுக்கும்

அணிலாரே…

ஓய்வென்று பார்த்ததில்லை

ஒரு நொடியும் உன்னை

ஒயிலாக ஓடி

ஓய்யாரமாய் நின்று

ஒத்தகைக்கு ஒத்தையாய்

ஓட்டப் பந்தயம் என்னுடன்

ஓட வருகிறாயாவென

சவால் விடும் அழகை

நான் என்னவென்றுச்

சொல்ல..

ஒன்றோடொன்று

துரத்தி பிடித்து

விளையாடும் அணில்கள்

சரசரவென மரத்தில் ஏறி

சரசமாடி சதிபோட்டு

நயனங்கள் நர்த்தனமாடும்

நளினத்தை நான்

என்வென்றுச் சொல்ல..

விதைகளைக் கொறித்து

பழங்களைக் கொத்திக்

இருப்பதை பகிர்ந்து

மிஞ்சியதைக் கொஞ்சிக்

குடும்பத்துடன் உண்ணும்

குதூகல அழகை

நான் என்வென்றுச் சொல்ல..

நாள்தோறும்

அன்பாக நான்

வைக்கும் சோறுதனை

பாங்காக சாப்பிட்ட

தவறாமல் வரும் உன்

நேரம் தவறாமையும்

நான் ஒரு நாள்

சோறு வைக்க

மறந்தாலும் என் நலம்

அறிய அங்கிங்கும்

செல்லாமல் நீ

காத்திருக்கும் அன்பின்

அழகை நான்

என்னவென்றுச் சொல்ல?

மற்ற அணிகளின்

பிள்ளையைத் தத்தெடுத்து

தம் பிள்ளைப்போல்

தன் பாலூட்டி வளர்க்கும்

பரிவின் பாங்கை

என்னவென்றுச் சொல்ல?

வானரங்களின்

போபத்தை பொருட்படுத்தாமல்

பாலம் கட்ட உதவி

பாசத்துடன்

இராமனின் விரல்

தடம் பட்டு

முக்கோடுகளோடு

முகமலரச் சிரித்து

கண்ணுருட்டி விழித்து

கைகோர்த்து உட்கார்ந்து

சுதந்திரமாக திரிந்து

எட்டி எட்டிப் பார்த்து

எடுப்பாக தலை நிமிர்ந்து

என்னையா பார்க்கிறாய்?

எனக் கேட்கும் உன் அழகை

நான் அசையாமல் பார்த்து

இரசிப்பதை என்னவென்று

நான் சொல்ல…!!

-பிரியா பாஸ்கரன் 🐿

தீபாவளித்திருநாள் வாழ்த்துக்கள்!

தீபாவளி வாழ்த்துக்கள்!!

அன்பும் ஆற்றலும் நிறைந்தும்

இன்பமாக ஈகைச் செய்தும்

உவகை ஊங்கெனப் பெருத்தும்

எண்ணத்தில் ஏற்றமும்

ஒழுக்கத்தில் ஓங்கியும்

ஒளவியம் நீங்கியும்

அஃதே வாழ்வில் சிறந்தும்

கல்லாமை ஒழித்து

ங போல அரவணைத்து

சிந்தனை வளர்ந்து

ஞயம்பட உரைத்து

கட்டம் ஒழிந்து

இணக்கம் அறிந்து

தீயவை துலைந்து

நேசம் வளர்த்து

பண்பில் உயர்ந்து

மகிழ்ச்சியில் திளைத்து

இயல்பில் சிறந்து

ஆரோக்கியம் நிலைத்து

நல்லவை சேர்ந்து

வளங்கள் பெருத்து

வாழ்வினில் சிறந்து

உள்ளங்கள் நிறைந்து

அறன் வளர்த்து

ஆனந்தமாக வாழ்க வாழ்கவே!!

“உயிர் மெய்யாய்”

உறவுகள் கூடி

நண்பர்கள் சேர்ந்து

பந்தங்கள் மகிழ்ந்து

உள்ளதைப் பகிர்ந்து

இனிப்புகள் உண்டு

மத்தாப்பாகச் சிரித்து

இன்பங்கள் பெருகி

பேரானந்தம் பொங்கட்டும்!!

இனிய

தீபவாளித்திருநாள்

நல்வாழ்த்துக்கள்!!

வாழ்க வளமுடன் 🙏

-பிரியா பாஸ்கரன் 💥💥💥