அறம் செய்ய விரும்பு!

அறம் செய்க

அன்றே செய்க

இல்லார்க்குச் செய்க

இன்பமாகச் செய்க

உணர்ந்துச் செய்க

உவகைப் பெருக

எண்ணத்தில் சிறக்க

என்றும் செய்க

ஒன்றே செய்க

ஒற்றுமைப் போற்றுக

அஃதே அறமே

அன்புடன் வாழ்வோமே!!

– பிரியா பாஸ்கரன் 🙏

கிராமத்து மங்கையின் காதல்!

ஏ மாமா சின்னசாமி
என்ன மாமா சொல்லிபுட்ட
ஆச புள்ள மனச மட்டும்
கயிராக திரிச்சுப்புட்ட

பேசப்பேச பறபறக்கும்
பேசாம பார்த்திருக்கும்
கேட்காதத கேட்டது போல்
நெஞ்சுக்குழி பரிதவிக்கும்

மாட்டிக்கிட்டு முழிக்கிறன்யா
காட்டிவிட்டு தவிக்கிறன்யா
ஓட்டமா ஓடிபோயி
உம்மனசில ஒழியிறன்யா

தூக்கத்தையும் கெடுதுப்புட்ட
ஏக்கத்தையும் வளர்த்துபுட்ட
பாக்காம எம்மனச
பறிச்சுவெச்சு தவிக்கவிட்ட

உசுர உருக்கறியே
ஓரமா சிரிக்கறியே
ஓயாம உன் நினவ
ஒரு நொடி நா மறக்கலயே

பாத்தா தீரலய்யா
பாக்க பாக்க வளருதய்யா
பாத்து பாத்து கண்ணு
ரெண்டும் பூப்பூவா பூத்ததையா

ஏழேழு சென்மத்துக்கும்
ஏஉசுரு ஒனக்குமட்டும்
காலம் உள்ள கால மட்டும் காத்திருப்பேன் வந்திடையா

பாத பாத்திருக்கேன்
பூவ போட்டுவச்சேன்
காத்தா பறந்து வந்து
கன்னாளம் கட்டிக்கய்யா!!

– பிரியா பாஸ்கரன் 💕

என்னவளின் துள்ளு நடை!

துள்ளும் நடையிட்டு
புள்ளிகள் கொண்ட
துள்ளும் பொற்ச்சித்திரம்
துள்ளாமல் மையல் கொண்டுச்
சிலையானதேனோ?

ஓ…
புரிந்தது
புள்ளிப்போட்ட சேலை பொன்மேனியைத்
தழுவி இருக்கும்
என்னவளின்
துள்ளு நடையை
பார்த்தாயோ?

ஏ….
ஓடிப்போ மானே
அவள் எனக்கு
மட்டுமே சொந்தமான
பெண்மான்-
கண்ணாளன்!

-பிரியா பாஸ்கரன் 🙏

கண்ணாளனின் முத்தம்!

கம்மா கரையில நின்னு
காத்திருந்த மச்சான் கண்ணு
கண்டுகிட்டா இந்த பொண்ணு
வெட்கப்பட்டு சாஞ்சு நின்னு

பாத்த மச்சான் பின்ன
ஏக்கம் கொண்டப் பொண்ண
நெருங்கி வந்து நின்னு
உருகி தந்தான் ஒன்னு

கண்ண மூடி பொண்ணு
பேச்சு மூச்சும் நின்னு
உருகி மருகி ஒன்னா
தொலைச்சு நின்னா பொண்ணு!

“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.- வள்ளுவன்”

-பிரியா பாஸ்கரன் 💕

கவித்துளிகள்…!

முதல் வாழ்த்து!!

=================

முதல் வாழ்த்து

என் கவிக்கு..

ஆர்வமாய் படிக்கிறேன்..

ஆயிரம் முறை..

அளப்பறியா ஆனந்தம்

ஆர்பரித்தது இதயத்தில்

அது நீ எழுதியதால்

தோழமையே!!

=================

எதுவும் சாத்தியமே!!

==================

அரை நொடியில்

அறிவியல் சொல்லும்

ஆறு அங்குலம் இதயத்தில்

அடக்கி விட்டேன்

ஆறு அடியான உன்னை!!

================

காதல்!

================

திரும்ப திரும்ப

கதைக்கச் சொல்வதும்

திரும்ப திரும்ப

காதலிக்கச் செய்வதும்

அன்பென்றெ கொள்க!

🌸

கழுதை என்றாய் நீ..

ஆம் உனை..

என் மனதில்

எப்போதும் சுமப்பதனால்

நான் கழுதை ஆகிவிட்டேனோ?

– பிரியா பாஸ்கரன் 🙏

என்னவளின் கார்க்கூந்தல்!!

கார்மேகம் காணவில்லை
தூவானம் தூவவில்லை

அழகான மாலையில்
அழகியச் சோலையில்

எழிலாகத் தோகைவிரித்து
ஒயிலாக நர்த்தனமாடியது
வண்ணமயில்..

ஓ.. நீயும்
என்னவளின்
கார்கூந்தலழகில்
மயங்கிவிட்டாயோ.. –
கண்ணாளன்!

_பிரியா பாஸ்கரன் 💕

நெஞ்சின் தவிப்பு..!

அழகே…

வெயிலாய் காய்ந்தால்
மழையாய் குளிர்வித்தாய்..

தனிமையாய் நடந்தால்
நிழலாய் தொடர்ந்தாய்..

உறக்கமாய் வந்தால்
கனவாய் மகிழ்வித்தாய்..

ரோசாவாய் பூத்தால்
முள்ளாய் பாதுகாத்தாய்..

விக்ரமாதித்தனாய் இருந்தால்
வேதளாமாய் இருந்தாய்..

பனித்துளியாய் பொழிந்ததனால்
வேகமாய் மறைந்தாயோ?

பனித்துளி ஆவியாகி
மழையாய் பொழிந்து
நெஞ்சத்தை நனைத்துவிடு
தவிப்பை தனித்துவிடு!!

– பிரியா பாஸ்கரன் 💞

வெட்கம்..!

மனதால் நினைத்து
நினைவால் அழைத்து
விழியால் வளைத்து
இதயம் புகுந்து
இமைகள் படத்து
கண்கள் தழைத்து
நாணத்தில் சிவந்து
உள்ளம் களித்து
உவகை பெருத்து
உடல் வியர்த்து
பேச்சு மறந்தது
தன்னவனின்
விழிமொழி தாளாமல்!!

அழகான.. ஆழமான நட்பு!!

புரிந்து அறியாமலும்
அறிந்து பார்க்காமலும்
பார்த்து பழகாமலும்
பழகி புரியாமலும்
புரிந்து தெளியாமலும்
தெளிந்து உணராமலும்
உணர்ந்து தயங்காமலும்
உருவாகிய அழகான
வாசமலர்..

புலனத்தில்
செய்திகள் போதவில்லை..
முகநூலில்
முகம் பார்க்க தெவிட்டவில்லை..
அலைபேசியில்
பேச நேரம் போதவில்லை..
தோல்வியில்
தோள் கொடுக்க மறக்கவில்லை..
இன்பத்தில்
வாழ்த்த தவறுவதில்லை..
தொலைவில்
இருந்தாலும் தொலையவில்லை..
உன் நினைவுகள்
கலைந்து போவதுமில்லை..
உனை நினைத்து
களைத்து போவதுமில்லை..

வளரட்டும் செழிப்பாக
செழிக்கட்டும் பசுமையாக
ஓடட்டும் நதியாக
மலரட்டும் உறவாக
நிலைத்திருக்கட்டும் உறுதியாக
வாழ்வாங்கு வாழட்டும் இன்பமாக!!

“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.” – வள்ளுவன்!

-பிரியா பாஸ்கரன் 💕

காதல் கவிதைகள்!

இன்று கவிஞர் கண்ணதாசனின் நினைவு நாளை ஒட்டி
சில காதல் கவிதைகள்…

கண்ணே கலைமானே
கண்ணதாசனே
காதல் பாடல்கள் நீயின்றி இல்லை
காதலின்றி எவரும் இல்லை
அந்திப் பகல் அனைவரையும்
ஆனந்தத்தில் ஆழ்த்தி
அமைதியையும் தந்த உனை
ஆராதிக்கிறேன்
அன்புடன்…!

======================

இதயத்தின்
துடிப்பை
கைகளில்
உணரும் உணர்வு
காதல்!

======================

உள்ளம் உருகி
உயிர் கரைந்து
உடல் இருக்கும்
நிலை உணர்த்த
உன்னால் மட்டுமே
முடியும் காதலே!

======================

ஊண் மறந்து
உறக்கம் விடுத்து
உள்ளம் விழித்து
உவகை பெருத்து
உறவில் நிலைத்து
உன்னதம் அடைந்து
தான் என்பதை மறப்பதே
காதலோ?

======================

உன்னால்தான்
என் காதல் கவி
உருவாகி
உயிர்பெற்றது…அதனுடன்
உறவாடி
உயிர்புடன்
வைத்திரு இறுதிவரை!

======================

நீயே உணர்வாகி
நீயே அறமாகி
நீயே ஆசனாகி
நீயே தோழனாகி
நீயே நானாகி
நானே நீயாகும்
நம் நேசம்
நிலைத்து நின்று
நம் உறவை வளர்த்திடும்!!

======================

உனை நேசிக்க
உருவமில்லா
உருண்டை
உள்ளத்திற்கும்
தொண்டைக்கும்
வயிற்றிற்கும்
உருண்டு
உவகைத்தரும்
உணர்வே காதலோ?

======================

எறும்பு ஊற
கல் தேய்வது போல்
உன் வார்தையில்
நான் தேய்கிறேன்!!

======================

சீனியைச் சுற்றி எறும்புகள்
மொய்ப்பதுப் போல
உன்னைச் சுற்றியே
என் நினைவுகள்
மொய்க்கிறது!

======================

“காதலில் கசிந்துருகி”…

கண்டு கொண்டேன்!
களித்து மகிழ்ந்தேன்!
கானம் பாடினேன்!
காண துடித்தேன்!
காணாமல் தவித்தேன்!
கனவில் மகிழ்ந்தேன்!
கவிதை வடித்தேன்!
காகிதத்தில் மடலெழுதினேன்!
கைகூடவில்லை காதல்…

ஏனெனில்
“காதல்” கசிந்துருகி
கரைந்துவிட்டது
மெழுகுவத்தியாய்!

மெளனஞ்சலி
செலுத்துவோம்
மெழுகுக்கும்
காதலுக்கும்!!

======================

இரவெல்லாம் விழித்து
கனவெல்லாம் பகிர்ந்து
உறவெல்லாம் மலர்ந்து
உணர்வெல்லாம் உயிர்த்தது
என் உயிரே
உன் நேசத்தால்!

======================

– பிரியா பாஸ்கரன் 💕