மெளனம் சொன்ன கதைகள்!

கழனி வரப்பில
கால் நடையாக நடக்கையிலே
கருத்த முடி காற்றிலாட
கிணறோரம் போவாரே

அப்ப கண்பார்க்க
அந்த நேரம்
கண்ணசைவில் நலமறிய
காற்றில பறந்தாளே

வெள்ளை வேட்டியிலே
வண்ணச் சட்டையுடன்
கம்பீரமாக மீசைமுறுக்க
கண்டுகண்கள் சொக்கிடுமே

திருவிழா காலத்திலே
தினந்தோறும் கோவிலுக்கு வர
தயங்கி தயங்கி பார்வையாலே
திரும்ப திரும்ப பார்ப்பாளே

கடிகாரம் கட்டிய
கையாலே ஆட்டியாட்டி
அனைவரையும் அன்புடன்
அடக்கிவைப்பாரே கம்பீரம்மாய்

போறப் போக்கில
புஞ்சிரிப்பு சிந்த
பார்த்த நொடியில
பூப்போல அகம் மலருமே

நீர் சொல்லாத வார்த்தையும்
நல்லாப் புரிந்ததென்று
நாணத்தில் அவள் சிவக்க
நிமிர்ந்த நடையோடு போவாரே

படபடன்னு வண்டியில நீர்வர
படபடன்னு பட்டாம்பூச்சியாய்
தடதடன்னு இதயம் துடித்து
தாவிக்குதிக்குமே உம்முகம்காண

வாசமல்லிப் பூவுடன்
வாடாமல்லித் தாவணியிலே
வாவெனழைக்க வாஞ்சையுடன்
வாசலுக்கு ஓடிவருவாளே

வார்தையாட மனந்துடித்தாலும்
வளர்ந்தவிதம் தடுக்க
காலம் மெல்ல பதிலளிக்குமென
கனவு கண்டு காத்திருந்தாளே

கல்வியில் கவனம் சென்றதில
கருத்துடன் படித்ததில
காலம் வெகுவாக ஓடினதில
கல்யாண வயதும் வந்ததுவே

காதலென்பதே மாயையென
கட்டுக்கோப்பாக வளர்ந்ததில
கட்டுப்பட்டு குடும்பத்துக்கு
கல்யாணமும் முடிவானதே

காதல் என்பதே மறந்ததோ?
காதல் என்பதே மாயமோ?
அது என்ன உணர்வா? உயிரா?
அன்றும் இன்றும் தெரியலையோ?

– பிரியா பாஸ்கரன் 💕

சுழற்சி!

உழவன்…

வெண் கோமணத்துடன்
நிலத்தை
எருதுப் பூட்டி
ஏர் உழுது
ஏற்றம் இரைத்து
பாத்திகட்டி
சேற்றிலே கால் வைத்து
சோறு தர

வியர்வைச் சிந்தி
விதையிட்டு நாற்றுவர
வரிசையாக நட்டுக்
களை நீக்கி கதிராக்கி
விளை நிலங்களில்
முப்போகம்
செழிக்கப் பயிரிட்டு

பசுமை நிறைந்த வயல்கள்
காற்றில் தலை அசைந்தாட
தும்பி ரீங்கரமிட
பட்டாம் பூச்சி படபடக்க
தவளை கூக்குரலிட
நாரையும் கொக்கும்
எழிலாக இதை நோட்டமிட
பல்லுயிர் பயன்பெற
இயற்கையை ஒட்டி
மண்வெட்டியுடன்
மண்வாசனைப்
போற்றி

உடல் வளுவாக
உள்ளம் உவகைபெருக
உழைத்து
ஊணுண்டு வளம்பெற
ஊர் சிறக்க
உறவுகள் மகிழ
உறக்கம் வருமே சுகமாக
உலகத்தில் இன்பம் பெருகுமே
உலகெங்கும் செழிக்குமே
உழவனே..
நீயின்றி அமையாது உலகமே!!!

நவீன தொழிலாளி…

காலை மாலை
இரவு பகல் வேறுபாடின்றி
ஊர் ஊராக பயணம் செய்து
எந்நேரமும்
குளிர்ச்சாதன அறையில்

வியர்வை சிந்தாமல்
விண்டோசில் நுழைந்து
விழித்து கணிப்பொறியில்
விழுந்து கண்சிமிட்டாமல்
விடிய விடிய வேலை செய்து

கையில் மெளசைப் பிடித்து
கார்பல் டன்னல் வந்து
கழுத்தில் வலியுடன்
கண்ணாடியும் அணிந்து
கழிப்பறைக்கும் போகமுடியாமல்

திட்டப் பணி நேரத்தில் முடிக்க
ஊண் உண்ண நேரமில்லாமல்
பசிக்கு பீட்சாவும் குடிக்க குளிர்பானமும்
பெட்டி பெட்டியாக வாங்கி
குழுவாக உண்டு

வேண்டாதவற்றை மக்களிடம்
விளம்பரம் செய்து
விரயமாக பணம் செலவழிக்க
வழிவகைச் செய்து
விற்க பலப்பல உத்திகள் கண்டு

கூட்டாக
கொடுத்த பணியைச்
சிரத்தையுடன்
சிறப்பாகச் செய்து
கைத்தட்டி மகிழ்ந்து
கார்ப்பரேட் நிர்வாகத்திடம்
கீரேட் ஜாப் பெற்று

கை நிறையச் சம்பளம் வாங்கி
இழந்தது என்னவோ
குடும்பத்துடன் குதூகலமும்
கண்டது என்னவோ
மனழுத்தமும்
கார்டீயாக் நோயுமே!!

வையகத்தில்
வளத்துடன் சுகமாக
வாழ்வாங்கு வாழ
வாழ்கையின் சுழற்சிக்கு
உழவை உறுதுணையாகக்
கொண்டு
உழுது உண்டு வாழ்வோமே
என ஏட்டில் மட்டும் உறைக்காமல்
உண்மையாக சிந்திப்போமாக!!

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.” – வள்ளுவன்.

-பிரியா பாஸ்கரன் 🙏

சிலேடை!!

இனிய வணக்கம்! என் முதல் சிலேடை வெண்பா 🙏

வெண்பட்டுச் சேலை அணிந்த அழகேயுன்

கண்காணும் ஆதவன் தோன்றிட – பண்புடன்

காலை வெகுநாணம் கொண்டு மறைந்ததும்

மாலைமீண்டும் வந்ததே னோ?

(நிலவு/நிலமகள்)

-பிரியா பாஸ்கரன் 🌙 👧 🙏

தனிமையில் இனிமை!

உணர்ந்து அகம்மகிழ்ந்து
உள்ளத்தில் உவகை பெருக்கெடுத்து
உணர்ச்சிகளின் எழுச்சிக்கு
உருவகம் தந்து உணர்தலென்ற
உன்னதமான உணர்வையூட்டி
உயிரை புதுப்பித்து

நன்றாக சிந்தித்து தெளிந்து
நம்மைப் பற்றி நாமறிய
நல்ல புரிதல் ஏற்பட
நயமான தொலை நோக்கு
பார்வை உதிக்க
பிடித்த புத்தகம் படிக்க
கைவேலையை அழகுடன் செய்ய

கற்பனைத் திறன் வளர்க்க
கனவுகள் பலக் காண
கண்ட கணவுகளை மெய்பிக்க
கண்கவர் ஓவியம் வரைய
கருத்தான கட்டுரை எழுத
கனியான கவிதை வடிக்க

காற்றில் கீதம் வாசிக்க
கானக்குயில் இராகம் பாட
காதலில் கசிந்துருக
கடமையை எண்ணிப்பார்க்க
காவியமான இதிகாசம் படைக்க

எனப் பற்பல
எண்ணிலடங்கா
எண்ணத்தைக்
கிடைப்பதற்க்கரிய
வாய்ப்பில் படைத்து

தனிமை கொடுமை
தனிமை சாபம்
தனிமை சோகம்
தனிமை வலி
தனிமை கவலை
என்பதை விடுத்து

எல்லையில்லா
சந்தோசத்தைத் தரும்
தனிமைக்கு ஏதப்பா
ஈடிணை என்று
நினைப்போமாக..!

தனிமையிலும் இனிமை
காண முடியுமே..!!

-பிரியா பாஸ்கரன் 🙏

எங்கு இருக்கிறது சுதந்திரம்?

கானகத்தை அழித்து
கட்டிடங்கள் கட்டிட
புள்ளி மான்கள்
துள்ளித்திரிந்து ஓடிட
வழியில்லை

விளைச்சல் நிலங்களை
கூறு போட்டு விற்றிட
விவசாயத்தை அழிக்கும்
வேலையை தடுப்பவர்
யாருமில்லை

ஆர்பரிக்கும்
கடலலையில் கால் நனைத்து
அலைகளின் ஆனந்தைக்
கால வரையற்று
கண்டுகளிக்கும்
பாதுகாப்பான
சூழலில்லை

தலைவனென்று
மேடையேறி
பொய்வாக்குறுதி
முழங்கும் போது
தலைத்தட்டிக் கேட்க
துணிவில்லை

பெண்ணியத்தை
தன்வீட்டில்
குழித்தோண்டி
புதைத்துவிட்டு
பெண்ணியம் பேசும்
பேச்சாளர்களை எதிர்க்க
எவருமில்லை

ஏகாந்தத்தில்
நிலவோடு தனித்திருக்க
ஏக்கம் கொண்டால்
எள்ளவும் என்
தென்னைமரம் இடம்
கொடுக்கவில்லை

வண்ணத்துப் பூச்சியாய் பல
வண்ணக் கனவுகளை
நீல வானின் மைக்கொண்டு
வெண்மேகக் காகிதத்தில்
தீட்ட வானிடம்
கேட்க அது மை
தரவில்லை

சிறகடித்துப்
பறந்து பந்தத்தைக்
காண சிறகுகளைக்
கடன் கேட்டேன்
சிட்டுக்குருவி
நம்பித் தரவில்லை

சொன்னது
மனிதனே மனிதனை
நம்பவில்லை
நான் எப்படி உனை
நம்புவதென்று

நினைத்துப் பார்த்தேன்
குறைந்தபட்சம்
எண்ணியதை எண்ணியப்படி
என்னிடமே
உள்ளதை உள்ளபடி
உறைத்திட
முடிவதில்லை

அதனால்…

“சுதந்திரம் எனது பிறப்புரிமை”
என்பதெல்லாம்
சும்மா வா?

-பிரியா பாஸ்கரன் 🙏

திருச்சிற்றம்பலம்!

இனிய காலை வணக்கம்!!
சைவசிந்தாந்த வகுப்பில் கற்ற சில கருத்துக்களை இங்கு பதிவு செய்யவென்னியே இந்தப் பதிவு. வணங்கும் கடவுள் அருகனே என்றாலும் ஈசனே என்றாலும் மனதில் நினைத்து இதைப் பகிருகிறேன். நன்றி 🙏

புலனத்தில் புதிதாக குழுவில்
சேர்ந்து
பதிவோடு பதிவாகப் பார்த்ததில் பிடித்து
மனதோடு மனதாக படித்து
ரசித்து
உறவோடு உறவாட உனை
நினைத்து
தவிப்போடு தவிப்பாக மனது
துடித்து
ரசிப்போடு ரசிப்பாக மிகவும்
நுகர்ந்து
சுகமான சுமையாக நெஞ்சில் நிறைந்திருப்பது
நீயின்றி வேரெவரோ சதா சிவனே(அருவுருவம்)!

“இல்லது தோன்றாது..
உள்ளது அழியாது!!”

-பிரியா பாஸ்கரன் 🙏

அருகனே!!

முதல் நிலைமண்டிலாசிரியப்பா:

அருகனே முழுமுதற்க்
கடவுளே முதல்வனே
முக்குடையானே நற்காட்சி
யருளிய நாயகனே
எண்குணத்தானே எவ்வுயிருக்கும்
தீங்கு நினைக்காதவனே
ஆதிபகவனே உன்பதம்
போற்றி பணிந்திடுகிறேன்!

இசை!

இசை…
அருவியின் இரைச்சல்
ஆற்றின் ஓட்டம்
நதியின் சங்கமம்
குளத்தில் கல்லெரிதல்

இசை…
இடியின் ஒலி
சாராலின் சலசலப்பு
தூறலின் துடிப்பு
மழையின் பொழிவு

இசை..
காற்றின் கீதம்
இலைகளின் அசைவு
கொடிகளின் நடனம்
மரங்களின் ஆட்டம்

இசை..
துடுப்பின் அசைவு
படகின் தாலாட்டு
அலையின் ஓசை
ஆழ்கடலின் அமைதி

இசை..
பசுவின் கத்தல்
கன்றின் ஊட்டுதல்
பால் கறத்தல்
காளையின் கணைப்பு

இசை..
பசுவின் மா..மா
ஆட்டின் மே..மே
முயலின் மும்..மும்
நாயின் லொல்..லொல்

இசை..
குயிலின் காணம்
கிளியின் மொழி
கோழியின் கூவல்
காகத்தின் கரைதல்

இசை..
வண்டுகளின் ரிங்காரம்
பட்டாம்பூச்சியின் படபடப்பு
சிட்டுக்குருவியின் சிறகடிப்பு
தேனீயின் சுறுசுறுப்பு

இசை..
பாதத்தின் தாளம்
கைத்தட்டலின் உற்சாகம்
ஊதலின் ராகம்
உதட்டின் குவிப்பு

இசை..
காரிகையின் கொலுசொலி
சலங்கையின் சத்தம்
சதிகளின் ஆட்டம்
நயனங்களின் நர்த்தனம்

இசை..
பிஞ்சுகளின் பிடிவாதம்
பாட்டியின் பாக்கிடித்தல்
அம்மியில் அரைத்தல்
உலக்கையின் குத்தல்

இசை..
அப்பாவின் கண்டிப்பு
அம்மாவின் தாலாட்டு
ஆசிரியரின் ஊக்கம்
தோழமையின் அறிவுரை

இசை..
மங்கையின் சிரிப்பு
மலர்களின் வாசம்
கண்ணாளனின் பார்வை
குழந்தையின் முத்தம்

இசை…
உணர்ச்சிகளின் எழுச்சி
உணர்வுகளின் வெளிப்பாடு
உள்ளத்தின் உவகை
உற்சாகத்தின் உறவிடம்

இசை..
ஆனந்தத்தின் பிறப்பிடம்
அமைதியின் நண்பன்
அழுகையின் ஆறுதல்
கொண்டாட்டத்தின் தோழன்

இசை..
கோபத்தில் மெளனம்
மெளனத்தின் மொழி
தனிமையின் துணை
கவலையின் போக்கிடம்

இசை..
பிறப்பின் அழுகை
மழலையின் பேச்சு
வாழ்கையின் போராட்டம்
இறப்பின் கண்ணீரஞ்சலி

இசை..
சங்கப் பாடல்
சங்கமத்தின் உச்சம்
தமிழின் இனிமை
தமிழின் வாசிப்பு

இசை..
மணியின் பேரோசை
பக்தியின் முதல்படி
சப்தத்தின் சக்தி
இறைவனடிச் சேர்தல்

இசையின்றி எதுவும்
இயங்குவது இல்லை
இயங்குவதில்
இசையில்லாமல்
இருப்பதில்லை
இயங்காததில்
இசையின்றி வேறில்லை
இசையின்றி வாழ்வு
இனிப்பதில்லை!!

“ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ!!” – மகாகவி பாரதியார்.

– பிரியா பாஸ்கரன் 🎶 🎼 🎵

மழையே… என் தேவதையே!

பேதையில்
தோளில்
கைப்போட்டு
கும்மாளமிட்டு
என்னுடன் ஆடி
உன்னிடம் நான் தரும்
கத்திக் கப்பலை
கருத்துடன்
கரைச் சேர்க்கும்
பால்யத் தோழியானாய்

பெதும்பையில்
என் முகத்தில்
முத்து முத்தாய்ப்
பட்டுத் தெறித்து
முதல் முத்தத்தின்
சுகத்தை
உணர்த்தினாய்

மங்கையில்
மனதில் எழும்
மகிழ்ச்சியான
மகிழ்வுகளைப்
புதுப்புதுச்
சிந்தனைகளைப்
பகிர்ந்து கொள்ளும்
இரகசியத் தோழியானாய்

மடந்தையில்
சாரலாக
மெய்த் தழுவி
மெய்ச் சிலிர்த்து
மெய் மறந்து
நாணம் கொள்ளச்
செய்த காதலனானாய்

அரிவையில்
புலம் பெயர்ந்த
பொழுது
தூறலாகத் தூவி
தலைக் கோதி
அன்பையும்
ஆறுதலையும் தரும்
அன்னையானாய்

தெரிவையில்
தேகம் தீண்டித்
தீராத இன்னல்களை
திடமான மனத்துடன்
எதிர்கொள்ளும்
தைரியத்தைத்
தந்து மனம் குளிர
வைக்கும் தெய்வமானாய்

பேரிளம் பெண்ணில்
பிள்ளைகளுடன்
உன்னைச் சரணடைந்து
உன் பொழிவில்
ஒன்றுகூடு உறவாடியதில்
உள்ளத்தில் உவகையை
ஊற்றெடுத்துப் பெருக்கும்
உற்ற உறவினரானாய்

எண்ணத்தில்
எழிலாக நிறைந்து
எக்காலத்திலும்
என்றென்றும்
என்னுடனே பயணம்
செய்து
உனைப்போன்று எனையும்
இளமையுடன் இருக்கச்
செய்யும் மழையே
நீயே என் தேவதையன்றி
வேரெவரோ?

“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.” – வள்ளுவர்

மு.வ :

வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

-பிரியா பாஸ்கரன் 🌧 🌧 🌧

அப்பாவின் கடிகாரம்..!

ஒவ்வொரு மணிநேரத்திலும்
கூகூ வென்றோ
டங் டங் கெனவோ
டாண் டாண் வென்றோ
அடிக்கும் கடிகாரத்தின் ஒலி
கேட்கும் போதெல்லாம் என்
அப்பாவின் அழகிய கைக்கடிகாரம்
நினைவில் வரும்

கக்கத்தில் மஞ்சள் பை
கையில் கடிகாரம் அவர்
எங்கு சென்றாலும்
உடன் செல்லும்
இவை இரண்டும்

நாகரீகத்தின் மேல் மோகம்
அதிகமாக இருந்ததால்
ஈர்க்கவில்லை மஞ்சள் பை
ஏனோ ஈர்த்தது
அப்பாவின் கருப்பு பட்டை
போட்ட கைக்கடிகாரம்

கேணிக்கு சென்றாலும்
கையில் கடிகாரம் இல்லாமல்
செல்லமாட்டார்..

ஏன் என்று கேட்டால்
நேரம் தவறாமை முக்கியம்
நாம் தவறினாலும் எந்த தடையும்
இன்றி தன் வேலையை
ஒழுங்காக கவனத்துடன் செய்யும்
கடிகாரத்தில் எவ்வளவோ
கற்கலாம் என்பார்

அப்போது புரியவில்லை
இப்போது புரிகிறது

சின்னமுள்ளும் பெரியமுள்ளும்
ஒன்றோடு ஒன்று தொட்டுச்
செல்லும் ஒவ்வொரு நிமிடமும்
உணர்த்துகிறது
புலம் பெயர்ந்த
இடத்தில் வாழ்வதால்
இழக்கும் உறவுகளின்
அருமையை..

சோம்பி சோர்வாக
தலை சாய்க்கும்
நேரத்தில்
உற்றுக் கேட்டால்
டிக் டிக் ஒலி
தலை தட்டிச் சொல்லும்
உன் சோம்பலுக்கு நான்
பலிகடா இல்லை
என்பதில்..

பிரசவ வலியில்
இரட்டை குழந்தையை
பிரவிக்க போராடிய நேரத்தில்
சுவரில் இருந்த இலக்க முறை
கடிகாரத்தின் சிவப்பு எண்கள்
என் பங்கை ஒழுங்காகச் செய்யச்
சொல்லி கண்சிமிட்டி கண்டித்த
கணத்தில்..

பிறர் நேரத்தில்
செய்த உதவியினால்
அடைந்த பயனையும்
பிறருக்கு நான் செய்வேண்டிய
கடமையின் முக்கியதுவத்தையும்
உணர்த்துவதில்..

வாழ்வின்
ஏற்ற தாழ்வுகளை அழகாக
கண்ணெதிரே காட்டும்
ஆறிலிருந்து பணிரெண்டு வரை
நிமிடத்திற்கு
ஒருமுறை மேலும் கீழும்
சுழலும் சுழற்றலில்..

வாழ்க்கையில் இன்னல்கள்
வரிசைக் கட்டி வரும்பொழுது
“இதுவும் கடந்து போகும்” என
நிற்காமல் ஓடும் நொடிகள்
நினையுறுத்துவதில்..

என பற்பல நிகழ்வுகள்..

இன்றும்
கடிகாரத்தின் மேலுள்ள
மோகத்தினால்
வண்ண வண்ணமாகக்
எத்தனை கடிகாரம் வாங்கினாலும்

என்றும் மனதிற்கு
மிகந்த மகிழ்ச்சியையும்
கற்ற படிப்பினையை மறவாமல்
நினைவில் நிறுத்தும்
அப்பாவின் கருப்பு பட்டைக் கைக்கடிகாரத்தின் மேல்
கொண்ட அளப்பறியாத காதலினால்
பொக்கிசமாகக் பெற்றுவிட்டேன்
அப்பாவின் கடிகாரத்தை!!

“பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.” – வள்ளுவர்

பாவாணர் உரை:

காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.

-பிரியா பாஸ்கரன் 🕰