
இந்தியப் பயணமும்…
மலரும் நினைவுகளும்..!
பறந்து சொந்த மண்ணுக்குச் செல்ல
பயணச் சீட்டு வாங்கியவுடன்
பல திட்டங்களை வகுத்து
படபடத்துப் பறபறக்கும் மனது
பல காதங்களைத் தாண்டி
பட்டாம் பூச்சியாய்..
நாட்களை எண்ணிஎண்ணி
நாளும் பொழுதும் ஓடாதாவென
நாட்காட்டியை நாள்தோறும்
பார்த்தாலும்
நாள் ஒன்றுக்கு இருபத்தி
நான்கு மணி நேரம் ஆகவேண்டுமென
நன்கு தெரிந்தாலும் நப்பாசையில்
நாழிகைகளை எண்ணிடும் என் மனது..
வீட்டிலிருந்து புறப்பட்டு
விமானம் நிலையமடைந்து
வரிசையில் நின்று பாதுகாப்பு சோதனை
முடிந்து விமானத்திற்கு
வாயிலில் காத்திருக்கும் வேளையில்
அடுத்த நிமிடம் ஊரை
அடைந்துவிட மாட்டோமாவென
மனம் மிதமிதக்கும் காற்றில்..
விமானத்தின் சன்னல் ஓரத்தில்
உட்கார்ந்து கொண்டு இருக்க
விமானம் தரையிரங்க
நம் மண்ணைக் காண போகும்
சில நொடிகளுக்குள்
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
உணர்ச்சிப் பொங்க
ஒரு பந்து உருளும்
கண்களில் கண்ணீர்த் துளிகள்
திரண்டு நிற்கும்
காத்திருக்கும் சொந்தங்களை
காண..
ஆயிரம் வார்தைகள்
சொல்லா சுகத்தை
ஒரு இறுகிய அணைப்பு
சொல்லிவிடும் தெரிவித்துவிடும்
சொந்தங்களுக்கு..
விமான நிலையத்திலிருந்து
வீடு செல்லும் வரை
வீட்டுச் செல்ல பிராணி முதல்
ஊர் சொந்த பந்தங்களின்
நலன் விசாரிப்பை பேசிச் செல்ல
சில மணி நேரப் பயணம் கூட
சில நொடிகளாகிவிடும்..
வீடு போகும் வழியில்..
நான் படித்த அரசினர்
பள்ளிளைக் கடக்க
தோழிமாறுடன் காக்கா கடி கடித்து
உண்ட மிட்டாய்..
சந்தையைக் கடக்க..
கண்ணாடி வளைவிகளை வாங்கி
கைநிறைய அடுக்கி
கலகலவென ஓசையெழுப்பி
கடைத் தெருவில் ஆங்காங்கே
தொங்கும் கண்ணாடியில்
அப்படி இப்படி திரும்ப திரும்ப பார்த்தது..
என் தோழன் கணபதியின்
கோவிலைக் கடக்க..
அவனுடன் பல நேரங்களில்
சண்டையிட்டுச் சமாதானம் ஆகியது
நினைவு வர கோயில் உள் செல்ல
“என் அம்மாவோ குளிக்காம கூட
கோயிலுக்கு போகும் பொண்ணு
நீ மட்டும் தான்னு சொன்னா..
என் நண்பண்ணு சொல்லுவ”
என்ற புலம்பலுடன் வீடு செல்லுவாள்..
பிறகு பொடி நடையாக
அங்கிருந்து வீட்டுக்கு நடைப்போட
வழியில் வாஞ்சையுடன் பாப்பா குட்டியம்மா வாத்தியார் பொண்ணு
ஏங்கண்ணு எப்ப வந்த
எப்படியிருக்க எனும்
பிரியாவுக்கு பிரிய நலவிசாரிப்புக்கள்..
நூலகத்தை கடக்க..
மதிய உணவுக்குப் பின்
மாலை ஓய்வு நேரத்தில்
“சத்தம் போடாதே” என்ற
பலகையின் பக்கத்தில்
குரட்டையுடன் தூக்கும்
நூலகர் மாமாவின் நினைவு..
தபால் நிலையத்தை கடக்க..
ஆங்கில படிவத்தைப் பார்த்து அலறி கைகள் வேலை நிறுத்தம் செய்ய
தபால்காரத் தாத்தா
ஆங்கிலத்தின் மீதிருந்த
பயத்தைப் போக்கியது..
எங்கள் வீதியில் நுழைந்தவுடன்
ஒவ்வொரு சொந்தமாகிய பந்தங்களும்
ஆடு மாடுகளும் வீடும் மரமும்
கிணறும் தண்ணீர் குழாயும் ஏன்
கல்லும் மண்ணும்கூட
பல கதைகள் கதைக்கும்..
பாதை மாறாமல் வீடு செல்ல அப்பாவோ
என்னம்மா எல்லாம் முடிந்ததா என கேட்க அம்மாவோ எங்க இன்னும்
களத்து மேடு கழனி காடு
கிணற்று குளியல்
மாரியம்மன் கோவில்
மாங்காய் தோப்பு
புளியம் பழம் புளிப்பு
கடைத்தெரு கடலை உருண்டை
கனகாம்பரத்துடன் பிடித்த முல்லைப்பூ
முழம் முழமாய் சூடி
கடைவீதியில் தெருக்களில்
கண்ட அனைத்தையும் வாங்கி
மாலையில் மகாவீரர் தரிசனம்
மணிக்கணக்கா தோழிகளுடன் அரட்டை அப்புறம் தான்
தேர் நிலைக்கு வரும் என
நீண்ட பட்டியலிட..
அம்மாவை அணைத்து அவளின்
மஞ்சளுடன் கலந்து வரும்
வேர்வையின் வாசத்தை நுகர்ந்து
முத்தமிட்டு ஓடுவேன்
பின் வாசலின் கிணற்றடியை நோக்கி
சிறு பிள்ளையாய்..
திரும்ப அமெரிக்கா வரும்
நாளில் அடுத்து சொந்த ஊருக்கு
செல்லும் வரை தாங்க வேண்டிய இனிமையான நினைவுகளை
மூட்டை மூட்டையாகக் கட்டி
சேமித்து வைத்து மனதில் ஒரு பாரம் குடியேறி சுகமான சுமையாகக் கணக்க
மீண்டும் சன்னல் ஓர விமானப் பயணம்…!!
“ஹே தந்தன தந்தன தந்தா
சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுகீடா ஆகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா ……..ஆ ……..ஆ …..ஆ….”!!!!
-பிரியா பாஸ்கரன் 🙏🏾