என்னவளே… என்னவென்று நான் சொல்ல…!

நிலவு
மங்கியது
உன் ஒளிர் வீசும்
முகத்தழகில்..

மலர்
மனம் வெதும்பி
மாண்டது
உன் மென்மையில்..

மான்
மிரண்டு ஓடியது
உன் துள்ளு
நடையில்..

மயில்
மதிமயங்கி போனது
உன் கார்கூந்தல்
அழகில்..

கானக் குயில்
பாட மறந்தது
உன் குரல்
இசையில்..

பைங்கிளி
பேசா கிள்ளையானது
உன் கொஞ்சும்
மொழியில்..

மீன்
சொக்கித் தூண்டிலில்
சிக்கியது
உன் கண்ணழகில்..

கொவ்வை
கோபம் கொண்டு
வெதும்பியது
உன் இதழ்ழகில்..

தேனீ
தோற்றுப்
போனது
உன் சுறுசுறுப்பில்..

மருதாணி
சிவப்பிழந்தது
உன் கன்னச்
சிவப்பழகில்..

முத்து
சிப்பிக்குள்
ஓடி ஒளிந்தது
உன் சிரிப்பழகில்..

வானவில்
வண்ணத்தைக்
கடன் கேட்டது
உன் ஆடையழகில்..

கடல் அலைகள்
ஓடோடி வந்து
முத்தமிட்டது
உன் பாதமழகில்..

வண்ணத்துப் பூச்சி
படபடத்து
பொறாமை கொண்டது
உன் வடிவழகில்..

அத்தனை அழகும்
மொத்தமாய் உன்னில்
கொட்டிக் கிடக்க
கிஞ்சித்தும்
சிந்தனையில்
செருக்கில்லா
பேரெழியலாய் நீயிருக்க..

மென்னகைப் புரியும் என்
மங்கை உன்னிடம்
இச்சையுடன் என்னிறுதிவரை
சரண்ணடைந்ததை
என்னவென்று நான் சொல்ல..? –
அன்புடன்… உன்னவன்…!

-பிரியா பாஸ்கரன்💕

கலைகள்!

வரைந்திட வரைந்திட
பேசும் வர்ணங்கள்
ஆக்கும் வரிசையாக
ஆயிரமாயிரம் வண்ணச்சித்திரம்

எழுதிட எழுதிட
அகத்தின் எண்ணத்தை
புறத்தில் எதிரொலிக்கும்
ஆயுதம் எழுதுகோல்

பாடிட பாடிட
உள்ளம் பரவசமாகி
கொள்ளும் பரமானந்தம்
கொட்டும் பாமழை

ஆடிட ஆடிட
பாதம் அழகிய
நாதம் அளித்திடும்
நடனம் அழகோவியம்

இசைத்திட இசைத்திட
துன்பம் இழந்து
இன்பம் இரட்டிப்பாகி
மனம் இனித்திடும்

நடித்திட நடித்திட
நடிப்பு நல்வரவாகி
பிடிப்பு நடிப்பாகி
ஏற்றம் நல்கிடும்

கற்றிட கற்றிட
மனம் களித்திட
ஆனந்தம் கண்டிட
கலைகள் கற்ப்போமாக!!

-பிரியாபாஸ்கரன் 🙏🏾

தோசை இட்லி பொங்கல் வெண்பா!!

சுடச்சுட கல்லில்தோ சைஅம்மா செய்து
சுடசுடசாம் பார்புதினா சட்னி – கடகடனு
தட்டில் அடுக்கிமிள காய்பொடி யைத்தர
சட்டென காலியாகும் தட்டு

பங்குநான் குஅரிசி யைசிறிது வெந்தயமும்
பங்குஒன் றுஉளுந்தும் ஊறவைத்து – பாங்காக
ஆட்டுக்கல் லில்லரைத்தும் ஊற்ற சுவையாக
வீட்டிலே இட்லி தயார்

பச்சை அரிசியை பாசிப் பருப்புடன்
பச்சை திராட்சை உலர்ந்ததை – இச்சையுடன்
வெண்ணெய் உருக்கிட பொங்கல் குழைத்தெடுத்து
உண்ண மயக்கம் வரும்

– பிரியா பாஸ்கரன் 😀

– பிரியா பாஸ்கரன் 😀

முதல் வெண்பா..!

மண்ணுக்கு தோழமை இந்த மழைச்சாரல்
விண்ணுக்கு தோழமை கொண்டல்இப் – பெண்ணவளின்
கற்ற குழுவினர் தோழமையில் வெண்கவி
கற்று கவிதைவடித் தேன்

– பிரியா பாஸ்கரன் 🙏🏾

அந்தாதிக் கவி..!

முதல் அந்தாதிக் கவிதை 😁

வாழ்கை மாறிடலாம்
வளங்கள் பெருகிடலாம்
வண்மை மட்டும் என்றும்
நிலையாய்
நின்றிடுமே காலத்தில்…

காலம் மாறிடலாம்
கருங்கூந்தல் வெளுத்திடலாம்
கண்ணாளனன்பு மட்டும் என்றும்
பேரிளமையாய்
பெருகிடுமே வாழ்வினில்..

வாழ்வு மாறிடலாம்
வலைதளம் கண்டிடலாம்
வாசிப்பு மட்டும் என்றும்
அறியாமையை
அகற்றிடுமே வாழ்கையில்..

வாழ்கை மாறிடலாம்
வயது கூடிடலாம்
தாய்மை மட்டும் என்றும்
பேரெழிலாய்
திகழ்திடுமே காலத்தில்..

காலம் மாறிடலாம்
சிலமொழிகள் மறைந்திடலாம்
தேந்தமிழ் மட்டும் என்றும்
வளமையாய்
வாழ்ந்திடுமே எக்காலமும்!!!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾

இயற்கை.. கவிதைகள்!

இயற்கை …
ஐக்கூ கவிதைகள்..!

ரோசாப்
பூவைப்
பாதுகாக்க
முள்ளை
ஆடையாக
அணிந்தது
செடி!

நிலவுக்கு
குளிர்மை தர
வெப்பம்
கொண்டது
சூரியன்!

நிலவின்
அழகைக்
காட்ட
இரவு
பூண்டது
இருள்!

இரவின்
இருளின்
நிறத்தை
உணர்த்த
வந்தது
அமாவாசை!

கடல்
நீரைத்
சீராட்டித்
தாலாட்ட
தூளியானது
அலை!

பொதிகையை
கொஞ்சி
குளிப்பாட்டும்
பீச்சூக்குழாயானது
கொண்டல்!

உருவமில்லா
உயிரோடு இருக்கும்
தன்னை
உடல் வருடி
உணர்த்திடும்
காற்று!

ஏற்கும்
கதாப்பாத்திரத்தில்
தன்னைப்
பொருத்தி
அதுவாகவே
ஆகிவிடும்
தண்ணீர்!

காதம்
வரையிலும்
தன் இருப்பை
தாமதிக்காமல்
உணத்திடும்
தாழம் பூ!

மெழுகுவத்திக்கு
உயிர் கொடுக்க
தன்னுயிர் ஈந்து
தான் கருகி மாயும்
தீக்குச்சி!

– பிரியா பாஸ்கரன் 🙏🏾

மெழுகுவத்தி..!

காதலர்களுக்கு
இளம் மாலைப்
பொழுதில்
குளிர் நிலவின்
தண்மையையுடன்
இளஞ்சூட்டை
தந்திடுவாய்!

பிறந்த நாள்
பொழுது
உனக்கு உயிர் தந்து
ஊதி அணைத்து
உயிர் எடுத்தாலும்
பிறரை
மகிழ்வித்திடுவாய்!

ஏழை முதல்
செல்வந்தரின்
பிறந்த நாள்
இறந்த நாள்
நினைவு நாளில்
தவறாமல்
வருகை தரும்
உறவினராவாய்!

குடிசை வீட்டு
குட்டி சுட்டிகளுக்கு
கல்வி கற்க
கொழுந்துவிட்டு எரிந்து
தோள் கொடுக்கும்
தோழனாவாய்!

இருக்கும்
இறுதி வரை
பிரகாசமாய்
சுடர் விட்டு
ஒளிர்வாய்!

இறக்கும்
தருவாயிலும்
இதழ் மலர்ந்து
புன்னகை
பூத்திடுவாய்!

தன்னலமற்று
தன்னையே
தீயில் எரித்து
தன்னார்வத்
தொண்டாற்றிடுவாய்!

காரிருளில்
கலக்கத்தை
காணாமல் போக்கி
இருட்டில்
இருப்போருக்கு
இருள் அகற்றி
காத்திடுவாய்!

இறந்தோர்க்கு
மெளனமாக
அழுது உருகி
கரைந்து
கண்ணீரஞ்சலி
செலுத்திடுவாய்!

உனக்கு
உயிர்கொடுத்து
உயிர்விட்ட
தீக்குச்சியை
நினைத்து
நெஞ்சத்திலிருந்து
உதிரம்
உதிர்த்து
உயிர் நீத்திடுவாய்!

இந்த நூற்றாண்டிலும்
மின்சாரம் இல்லா
இரவுகளில்
சுயநலமிக்க
மனிதர்கள்
கொள்ளி வைக்க
சத்தமின்றி
யுத்தமின்றி
மெளனமாக
எரிந்திடுவாய்!

உன் விளக்கில்
விழுந்து மரிக்கும்
விட்டில் பூச்சியை
சத்தமில்லாமல்
முத்தமிட்டு
அழுதிடுவாய்!

வண்ணங்கள் பல கொண்டு
வாசனைகள் பல நிறைந்து
காண மனம்
மகிழ்விக்கும் உன்னை
கன நேரத்தில்
உன் உடலுக்கு
நெருப்பு வைத்து
உரு குலைத்து
உயிர் போக்கும்
மனிதர்களை
மன்னிப்பாயா
மெழுகுவத்தியே….!!!

-பிரியா பாஸ்கரன் 🕯

ஓட்டம்..!

அழகான
காலை பொழுதில்
ஆற்றோரப் பாதையில்
அடி எடுத்து
ஆரம்பித்தேன்
நெடுநீள ஓட்டம்
நிறையப்
பயிற்சி செய்ததால்
விரைவாக ஓடி முடிக்கலாம்
என நினைத்தேன் கூடவே
எண்ணத்தில்
பின்வருவன உதித்தன..

அய்யோ
நிமிடத்தில் இத்தனை
காதம் ஓட எத்தனை
மணி நேரம் ஆகும்
இவர் நம்மை முந்தி
செல்கிறாரே
நம்மைவிட வயதில்
மூத்தோர் எளிதாக ஓட என
மனதில் கணக்கு போட
மனமிருகி
வலிபெருகி
கால் வலுவிழந்து
உடல்
கணக்க ஆரம்பித்தது
சில நிமிடங்களில்..

நில் கவனி ஓடு என
மனதில் பதித்து
சுற்று புறத்தில்
நடப்பதை
ரசித்துக்கொண்டு
அனுபவித்து ஓட
ஆரம்பித்தேன்..

ரசிப்பதற்கா பஞ்சம்

ஆற்றோரப் பாதையில்
அழகிய நிழல் தரும் மரங்கள்
அதில் ஒயிலாக உட்கார்ந்து
குயில் பாடும் பாட்டுகள்
ஒன்றோடொன்று
துரத்தி பிடித்து
விளையாடும் அணில்கள்

என் ஓட்டத்திற்கு
ஈடாக
தன் ஓட்டத்தை
வெகுவாக குறைத்து
குடும்பமாக
குதூகலத்துடன்
கூட ஓடின
துள்ளியோடும்
புள்ளி மான்கள்

மரங்களின் இடுக்கில்
கண்ணாமூச்சியாடும்
சூரிய ஒளியின்
ஆட்டம்

இளங்காலை
சூரியனின் சூட்டில்
பளபளத்து
சொலிசொலிக்கும்
ஆற்று நீர்

வளைந்து நெளிந்து
ஓடும் ஆற்று நீரின்
சங்கீதம்

சக ஓட்டக்காரர்கள்
ஓடும் சத்தத்தில் தான்
எத்தனை வகை?

டடக் டடக் என
குதிரையின் குலம்பொலியாய்
வேகமான ஓட்டம்

தட தடவென ஓடும்
தொடர் ரயில் வண்டியாய்
சீரான ஓட்டம்

புச்சு புச்சுவென
மூச்சு வாங்கி ஆங்காங்கே
நின்று ஓடும்
அரசு பேருந்து ஓட்டம்

சல சலவென பேசி
கூட்டாகச் சேர்ந்து
இடைவெளி விட்டு விட்டு
குழுவாக ஓட்டம்

ஓட்டத்தை இப்படி
சப்த அடிப்படையில்
வகைப் பிரிக்கலாம்

மிதிவண்டி
ஓட்டுபவர்களின்
டிரிங் டிரிங்
மணி ஒலி

பாதை ஓரத்தில்
வண்டி நிறுத்துமிடத்தில்
வாகனத்தின்
பாம் பாம் ஒலி

பாதையில்
பெற்றோருடன்
தளர் நடையிட்டு
வரும் மழலையின்
களுக் களுக் சிரிப்பொலி

உரிமையாளருடன்
நடைபாதையில்
நடந்து வரும்
நன்றி மறவாத
நாய்களின்
லொல் லொல் ஒலி

ஆங்காங்கே
தண்ணீர் பந்தல்
வைத்து ஓடுபவர்களுக்கு
தண்ணீர் தாகத்தை
தீர்க்கும் தன்னார்வத்
தொண்டர்களின் ஒலி

கைத்தட்டி
உற்சாகப்படுத்தி
ஆர்வமுடன்
கூக்குரலிட்டு
உன்னால் முடியும்
ஓடு ஓடு என
ஓடுபவர்களை
மகிழ்வித்து
மனசசோர்வு நீக்கும்
மக்களின்
ஆரவார ஒலி

முதுமையில்
துணையுடன்
துடிப்பாக
துள்ளு நடையிடும்
பெயோர்களின்
அட்டகசமான
ஆனந்த சிரிப்பொலி

அத்தனையும் ரசித்து
தொடர் ஓட்டம்
ஓடியதில் நினைத்ததை விட
விரைவாக
ஓட்டத்தை மன நிறைவுடன்
முடித்து எல்லையை
எட்டிவிட்டேன்..!

“ ஓடினாள்.. ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்..”
என்றால் வாழ்கை இனிக்குமா?

அதனால்
வாழ்க்கையும்
அதன் போக்கில்
எதிர் நோக்கி சுற்றி
இருப்பவர்களை
இருப்பவைகளை
அனுசரித்து
அனுபவித்து
அனுதினமும்
அகமகிழ்ந்து
நிகழ் காலத்தில்
நினைவை நிறுத்தி
ஓடினால்
என்றென்றும்
மகிழ்ச்சி
நிரந்தரம்!!

-பிரியா பாஸ்கரன் 🏃‍♀.

தூரிகை..!

ஓவியனின்
கற்பனைக்கு
உயிரூட்டி
உயிர்த்தெழச் செய்து
உருவகம் தந்து
உயிரோவியமாய்
உலவ வைத்தப்பின்
உவகை ஊற்றெடுத்து
ஆனந்தத்தால் ஓய்வெடுப்பாய்
பிரசவவத்தில்
சேயை ஈன்றெடுத்த
தாயைப் போல
பெருமிதத்துடன்
தான் தீட்டி முடித்த
படைப்பை பார்த்து..!

எல்லா வண்ணங்களுடன்
நட்புறவு கொண்டு உறவாடி எண்ணிலடங்கா
எழிலோவியங்களை
ஏட்டினிலே வரைந்திடுவாய்..

மாட மாளிகை அதில்
வண்ணப் பூஞ்சோலை
வானத்தில் வட்ட நிலா
ஆட ஊஞ்சல்
அதில் மலர் மஞ்சம்
ஆடிடுவாள் ஊஞ்சல்
கார்கூந்தல் காரிகை
அருகில் அவள்
கவி எழுத
மயில் பீலிகை என
கற்பனையில் நினைத்ததை
கன நேரத்தில்
வஞ்சனையில்லாமல்
வாரி இறைத்திடுவாய்..

உன் இதழ்கள்
உன் முத்தங்களை
பல வண்ணங்களில் சிந்தி
வெள்ளை காகிதத்தின்
வாழ்க்கையை
வண்ணமாக்கிவிடும்..

நீ வரலாற்று நிகழ்வுகளை
கண்முன் காட்சிகளாய்
கொண்டு நிறுத்திடும் பகிர்வு..

நீ கடவுள் நாத்திகன்
கற்றவன் கல்லாதவன்
இனம் மொழி
மதம் நாடு
உயிரற்றது உயிருள்ளது என
எந்த வித வேறுபாடின்றி
அகிலத்தில்
அனைத்தையும் வரையும்
அற்புத பிறவி..

எழுத்தாளருக்கு
எழுதுகோலின் முனை
‘கூர்’முனையானால்
ஒவியனுக்கு உன்
முனைகள்
‘உயிர்’முனைகள்..

வானவில் தோற்று
ஓடி மறைந்திடும் உன்
வண்ண சாலத்தில்..

நீ பேசாமல்
பேசும் சித்திரங்களை
உருவாக்கிடுவாய்
உன் கைவண்ணத்தில்..

நீ படைப்பாளரின்
எண்ண ஓட்டத்தை
பிரதிபலிக்கும் கண்ணாடி..

நீ இல்லாததை
இருப்பதாகவும்
இருப்பதை
இல்லாததாகவும்
இருப்பதை
வேரொன்றாகவும்
காட்டும்
மாயவித்தைக்காரன்..

நீ இரவு பகல்
ஓயாமல் உழைத்து
உறக்கம் துறந்து
உன்னத படைப்பை
உருவாக்கும்
உழைப்பாளி..

ஓவியனின்
தீராத தாகத்தை
தீட்டிவிட்டு
இளைப்பாறுவாய்
அவனுக்கு அடுத்த
தாகம் எடுக்கும் வரை..

நீ நிலவாக ஒளிரும்
அருவியாக கொட்டும்
ஆறாகப் பாயும்
மலையாக நிற்கும்
மானாக ஓடும்
மயிலாக ஆடும்
மழலையாக சிரிக்கும்
மங்கையாக புன்னகைக்கும்
மன்மதனாக மயக்கும்
தீயாகக் கொழுந்துவிட்டெரியும் என
பலவற்றைப்
படைக்கும் பிரம்மா..

நீ பொறுமையின் சிகரம்
நிதானத்தின் நிபுணன்
எழுச்சியின் பிறப்பிடம்
சிந்தனையின் சிகாமணி
காரியத்தின் கண்கள்..

காரிகை முதல்
கடவுள் வரை
நீ தீட்டிய சித்திரத்தை
உன் காலம் கடந்தாலும்
படைத்தவர் காலம்
சென்றாலும்
காலம் காலமாக அவரின்
படைப்புகளால் அவரை
வாழவைத்துவிடுகிறாய்..
அது நீயன்றி வேறு யாரு
தூரிகையே..!

-பிரியா பாஸ்கரன் 🎨 🌈

முதல் குறுவெண்பா!

வெண்பா எழுத ஆசை. தமிழ் ஆர்வலர்கள் குழுவில் உள்ள நண்பர் திரு. செந்தில் மற்றும் திரு. சிவா அவர்கள் ஊக்குவித்தால் இந்த குறுவெண்பா எழுத முடிந்தது. நன்றிகள் பல நண்பர்களே.

“நண்பர் கணேசன் இடுகையில் பின்னூட்ட

வெண்பா வடித்தேன் விரைந்து!”