அப்பாவின் சின்னஞ் சிறு கிளியே..!

அப்பாவின் சின்னஞ் சிறு கிளியே..!

என் அன்பு மகளே…

அதிரும் அலறலோடு
அழகு மலராய்
அன்புக்கு சான்றாய் உன்
அன்னையின் மறு உருவாய்
அகிலத்தைப் பார்க்க
அவதரித்தாய் ஆசை மகளே!

கொஞ்சி கொஞ்சி உன்
கொஞ்சுநடையில்
என் உள்ளத்தை
கொள்ளை கொண்டு
அள்ளிச் சென்றாய்
செல்ல மகளே!

சிந்தும் சிரிப்பில்
சில்லறை காசுகளும்
சிரித்து பேசும் மொழியில்
தேன்பலா சுவையும்
மலர்ந்த முகத்தில்
கோடி நிலவின் ஒளியும்
காண கிடைக்க பெற்றேன்
கனி அமுதே!

கால் கொலுசு ஒலிக்க
படிகட்டுகள் அதிர
கால் தரையில் படாது
பட்டாம் பூச்சியாய் பறந்து
ஓடி வந்து தாவி அனைத்து
கழுத்தில் தொங்கி
கன்னத்தில் இச் என நச்சென்று முத்தமிட்டு “அப்பாஆஆ” என்றழைத்ததில்
சொர்க்கம் கைவசப்பட்டது என்
அன்பு மகளே!

இரட்டை சடைப் பின்னல்
மணக்கும் மல்லிகைச் சரம்
மான்விழிக்கு கண் மை
கலகலக்கும் கண்ணாடி வளைவி
முத்துச் சதங்கை கொலுசு
முகத்தில் முத்தான சிரிப்பு
பட்டுப் பாவாடை சட்டையுடன்
பவனி வருகையில்
மனம் ஆனந்தக் கூத்தாடியது என்
பாச மகளே!

என் அன்பு மகளே..

கோபம் இருக்கும் இடம்
தெரியாமல் ஓடி போனது
உன் செவ்விதழ் புன்சிரிப்பில்!

வானவில் வந்து விட்டது
நம் வீட்டிற்கு உன்
வண்ண ஆடை தோற்றத்தில்!

மயில் தோகை
விரித்தாடியது
உன் கார்கூந்தலழகில்!

முல்லை பூ தோற்றது
உன் சிரிப்பழகில்!

நிலவு ஒளியிழந்தது
உன் முகப்பொலிவில்!

என் அன்பு மகளே!

நீ ஆற்றலைப்
பெருக்கும் சக்தி!

நீ பாசத்தைக்
கொட்டும் அருவி!

நீ நேசத்தை
உருவாக்கும் ஊற்று!

நீ அன்பை
பொழியும் அன்னை!

நீ குலம்
போற்றும் தெய்வம்!

நீ வளர்ந்து ஆளாகி
என் மகளாய் இருந்து
உன் கணவனுக்கு
மனைவியாய் ஆனாலும்
நீ எனக்கு என்றும்
பாரதி சொன்ன
“சின்னஞ் சிறு கிளியே –
கண்ணம்மா” அன்றோ!

நீயே
ஏழேழு பிறப்பிலும்
என் மகளாக
பிறந்திடவேண்டுமென
எல்லாம் வல்ல அருகனை
பதம் போற்றி
வேண்டுகிறேன் –
அன்புடன் அப்பா!!!

சின்னஞ் சிறு கிளியே..
ஆசிரியர் : மகாகவி பாரதியார்.
சின்னஞ் சிறு கிளியே – கண்ணம்மா !
செல்வ களஞ்சியமே !
என்னைக் கலி தீர்த்தே – உலகில்
ஏற்றம் புரிய வந்தாய் !

பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா !
பேசும்பொற் சித்திரமே !
அள்ளி யணைத்திடவே – என் முன்னே
ஆடி வருந் தேனே !

ஓடி வருகையிலே – கண்ணம்மா !
உள்ளங் குளிரு தடீ !
அடித்திரிதல் கண்டால் – உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ !

உச்சி தனை முகந்தால் – கருவம்
ஓங்கி வளரு தடீ !
மெச்சி யுனை யூரார் – புகழ்ந்தால்
மேனி சிலர்க்குதடீ !

கண்ணத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ !
உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா !
உன்மத்த மகுதடீ !

சற்றுன் முகஞ் சிவந்தால் – மனது
சஞ்சல மாகு தடீ !
நெற்றி சுருங்கக் கண்டால் – எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ !

உன்கண்ணில் நீர்வழிந்தால் – எந்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ !
எங்கண்ணிற் பாவையன்றோ ? – கண்ணம்மா !
என்னுயிர் நின்ன தன்றோ ?

சொல்லும் மழலையிலே – கண்ணம்மா
துன்பங்கள் திர்த்திடு வாய்
முல்லைச் சிரிப்பாலே – எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய் ,

இன்ப கதைகளெல்லாம் – உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே – உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ?

மார்பில் அணிவதற்கே – உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே – உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ ?

– பிரியா பாஸ்கரன் 💕

தானம்..!

கோபம் விட்டொழித்தலின்
அப்பியாதானம்(துவக்கம்)
அதனால் தானாக வரும் நிதானம்!

இயற்கையை ரசிக்க நமக்கு ‘கண்’ தானம்
நாம் இறந்தும் கண் இழந்தோர் ரசிக்க
செய்வோம் கண்தானம்!

உயிர்வாழ்வுக்கு ‘காற்று’ தானம்
அக்காற்றை இழுத்துவிட உதவும் தசை உதரவிதானம்!

செவிக்கு ‘இசை’ தானம்
மழலைச் சொல்லே இசைபெருந்தானம்!
(இசை பிறக்குமிடம்)!

மண் செழிப்புக்கு ‘மழை’ தானம்
அது வருவதற்கு மக்கள் செய்வது விதானம்!

பெற்றோர் பிள்ளைக்களிக்கும் ‘கல்வி’ தானம்
சான்றோன் என பெயரெடுத்து பிள்ளை பெற்றோருக்கு அர்பணித்தல் கடைப்படுதானம்(கைமாறு)!

கடவுள் நமக்களித்த வரப்பிரதானம்(கொடை)
நம் பந்தானம்(உறவுகள்)!

அரசியல்வாதிக்கு மக்கள் கொடுக்கும் ‘ஓட்டு’ தானம்
பதிலுக்கு அவன் கொடுப்பது நொண்டிச்சமாதானம்!

பசு நமக்கு தரும் ‘பால்’ தானம்
ஒன்பது கொடை வகையில் ஒன்று கோதானம்!

தக்கார்க்கு செய்யும் உத்தமதானம்
அதில் வலக்கை செய்வது இடக்கைக்கு தெரியாததே அமாதானம்(அடக்கம்)!

நிலைத்தானத்திற்கு(கோயில்) செய்யுமுன் செய்யும் தானம்
இல்லோர்க்கு கொடுப்பதே பிரதானம்(முதன்மை)!

விழாக்காலத்தில் கொடுப்பது தசதானம்
அதனால் உண்டாகும் சூதானம்(சேமம்)!

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்!
அத்தானத்தினால் சிறந்து விளங்கும் சந்தானம்(சந்ததி)!

மனதின் அவிதானம்(ஒழுக்கமின்மை)
தீய செயல்களுக்கு நிருபாதானம்(முதற்காரணமின்மை)!

மனதை ஒருமுகப்படுத்துவதற்கு
‘யோகம்’ தானம்
அதை செய்தால் கிட்டும் சித்தசமாதானம்(மன அமைதி)!

வறுமையில் உழல்வருக்கு செய்வது அதிதானம்(பெருங்குடை)
அதுவே கடவுளுக்கு செய்யும் உபப்பிரதானம்(காணிக்கை)!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾

நடை!!

படை வீரர்கள்அக்காலத்தில்
நடைகலை(யானை) படைக் கொண்டு பெரியதடைகளை தகர்த்து
நடைமனையில்(உடல்) விழுப்புண் அடைந்து தெறித்துநடைபோடுவது
பீடு நடை!

இராணுவ வீரர்கள் இக்காலத்தில்
பீரங்கி கொண்டு
ஏதடை வெல்ல வீரநடையிட்டு
பகைவர்களை வென்று
தெறிநடைபோடுவது ஏறுநடை!

மழலை குதலைப் பேச்சுடன்
கொஞ்சி கொஞ்சி
கொஞ்சுநடையிட்டு
பொக்கை வாய்ச் சிரிப்புடன்
நடைபோடுவது தளர்நடை!

திருநடைமாளிகையில் (கோயிற்பிராகாரம்) உற்சவர்
நடைப்பந்தலில்(பூப்பந்தல்) நடைப்பெருவாயிலாக(வாசல்)
நடைத்தேரில் வீதி உலா வர
வீடுதோறும் நடக்கும் கற்பூர ஆரத்தி நடைக்குநடை!

கவிதை அணிகளின்றி வசனநடையிட்டு எழுத்துநடையில்(எளிய இனிய நடை)
மொழிநடையாக மக்களுக்கு
புரியும் நடையில் எழுதுவது உரைநடை!

மேடையில் மெல்லிய இடையாள்
கண் கவர் ஆடை அணிந்து
அலங்கார அணிவகுப்பில்
ஒய்யாரமாய் நடைபோடுவது
சிங்காரநடை!

தோழிகள் கேணியிலுள்ள நடைகிணற்றில் நடைபாவிலிருந்து(படிக்கட்டு)
தொப்பென்று குதித்து நீச்சலடித்து மகிழ நடைபயில்வது(நளினமாக நடத்தல்)
ஒய்யாரநடை!

நல்ல விளைச்சல் நிறைய
ஆண்டவனை வணங்கி
நன்நாளில் நன்செய் நிலத்தில்
நடையன்(எருது) பூட்டி ஏர் உழுது
நல்ல தானியங்களை விதைப்பது
உழவரின் பழநடை(வழக்கம்)!

தங்குநடையில்லா நடைபரிதல் சென்று
தினந்தோறும் கோவில் நடை(வாசல்) அடைந்து
திருகாப்பு(கதவு) திறக்க காத்திருந்து பார்ப்பது நடை(நித்தியபூசை)!

நடைவெள்ளத்தில் மலரும்
வண்ணமலர்த் தோட்டத்தில்
இளம்தென்றலில் மனம்
துள்ளுநடையிட்டு புதுநடையில் கவி வடிப்பது கதைநடையான கவிநடை!

ஆழ்ந்த ஞானத்துடன் பாடல் செல்லும் போக்கின் எதிரிலிருந்து
தாளம் ஒலித்த படி உறுத்தாமல்
இனிமையான இசை அமைப்பது
எதிர் நடை!

ஒழுங்கான அமைப்பில்
எழுதுவதற்கான நெறிமுறை “நடை”
செய்யுள்நடை உரைநடை என
இரு பெரும் நடை கொண்டது
“தமிழ் நடை”!!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾

இதுசொர்க்கம் எனக்கு!

மழைத்தூறல்
மண்வாசனை
ஊதல் காற்று
ஒரே குடை
அதன் கீழ்
உன் கையணைப்பில் நான்

இது சொர்க்கம் எனக்கு

மாலை நேரம்
மழை வெளியே
குடிக்க சூடான தேநீர்
சுவைக்க சுடச்சுட வடை
சன்னல் ஓரம்
சாய்வான நாற்காலி
அதில் நீயும் நானும்

இது சொர்க்கம் எனக்கு

பெரிய வாசல்
கொட்டும் மழை
உன்னுடன் நனைந்து
மழையில் ஆட்டம்

இது சொர்க்கம் எனக்கு

எங்கும் பச்சைப்பசேல்
வானம் தொடும் மரங்கள்
நடுவில் ஒற்றையடி பாதை
மிதமான காற்று
மிதிவண்டி நீ ஓட்ட
முன் கம்பியில் நான்
என் தலை உன் மார்பில்

இது சொர்க்கம் எனக்கு

என்னை ரொம்பப் பிடிக்கும்
ஒற்றைத் தலைவலி
கண் கலங்கும்
கண்ணீர் பெருகும்
கடினமான நொடிகள்
உன் விரல்கள் ஒத்தடம்
என் கண்களில் நீர் மறையும்
வலி மறந்து கண்ணுறங்கும்

இது சொர்க்கம் எனக்கு

அந்தி மாலை நேரம்
சில்லென்ற காற்று
ஆங்காங்கே மின் கம்பங்கள்
அதில் குருவிகள்
கீச் கீச் சத்தம்
வாய்க்கால் தண்ணீர்
சல சல ஓசை
காற்றில் நீ எழுப்பும் சீழ்க்கை ஒலி
அதற்கு என் கால் போடும் சதி
சலக்கு சலக்கு ஓசை
வரப்பில் நீ வாய்காலில் நான்
கைப்பிடித்து இணையாக ஊர்வலம்

இது சொர்க்கம் எனக்கு

ஆற்றோரப் பாதை
நீரின் ஓசை
தாழம்பூ வாசம்
குயில் பாடும்
மயில் ஆடும்
அங்கு அழகிய
அம்மன் கோயில்
அதற்கு உன்னோடு
பொடி நடை

இது சொர்க்கம் எனக்கு

ஏகாந்த இரவு
பெளர்ணமி நிலவு
நிலவின் தண்மை
தென்றல் காற்று
முற்றத்தில் கயிற்றுக் கட்டில்
வண்டுகளின் ரீங்காரம்
நிலாச்சோறு
தலைச் சாய்க்க தோள்பட்டை
உன் கை வளைவில் நான்

இது சொர்க்கம் எனக்கு

வண்ண மலர்ச்சோலை
மணக்கும் மல்லிகை
மலர்ந்த ரோசா
பசுமையான புல்
அழகான நீருற்று
பெரிய ஆலமரம்
ஆட ஊஞ்சல்
அதில் நான்
அருகில் என் தலைச் சாய்க
உன் மடி

இது சொர்க்கம் எனக்கு

குற்றால அருவி
குளிர்ச் சாரல்
படகு சவாரி
அருவியின் இசை
மூலிகைக் குளியல்
நீ தலைச்சிலுப்பி
தெறிக்கும் துளிகள்
அடிக்கும் சாரல்
உன் தலை துடைக்க
என் முந்தானை

இது சொர்க்கம் எனக்கு

கொடி வீடு
எழிலான தோட்டம்
முல்லை பந்தல்
பிரம்பு நாற்காலி
காற்றின் கீதம்
அழகான மெளனம்
உன் பார்வை
என் உயிர் தீண்டும்
வேற என்ன வேண்டும்
எனக்கு?

-பிரியா பாஸ்கரன் 💕

கிளி சோசியம்..!

சிவப்பு கூர் மூக்கு
சின்ன சின்ன கண்கள்
சிறிய இளஞ்சிவப்பு கழுத்து வளையம்
சில்லென்று காற்றில்
சிறகடித்துப் பறக்கும் பறவையை
சிறகொடித்து கூண்டிலடைத்து
சில்லறைக் காசு பார்க்க
சாலை ஓரங்களில்
சோசியம் பார்க்கலையோ சோசியமென
கூவிக்கூவியழைக்க..

சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும்
சிறப்பாக வாழ்க்கை அமையுமென
செருப்பு அணியாமல்
சம்மணமிட்டு அமர
சொல்லுங்கள் உங்கள் பெயரை எனக்கேட்டு
சின்னஞ்சிறு கிளியை
சிறு நெல்மணிகள் உண்ணக் கொடுத்து
சிறு சத்ததுடன் உடுக்கை ஒலியெழுப்பி
சீட்டு எடுக்கச் கிளி சோசியர் சொல்ல
சீட்டுக் கட்டையே பார்த்துக் கொண்டு
சிறு பயத்துடன் அமர்ந்திருக்கும்
சிற்றறிவு மனிதரை என்னவென்று
சொல்வது?

பெயரை கேட்டு அதற்க்கேற்ற கடவுள்
படத்தை காட்டி கிளியை சீட்டு
படம் எடுக்க பயிச்சி அளிக்க
பார்த்துப் பார்த்து சீட்டு எடுத்து
போடும் வித்தையை
பாமரர் முதல் பணம் இருப்பவர் வரை
பய பக்தியுடன் கேட்போரை
என்னவென்று சொல்வது?

முக்காலத்தையும் சீட்டுக் கட்டிலறிய
முடியுமெனில் சோசியம் பார்ப்பவர்
முச்சந்தியின் தெருவோரங்களில்
முழுநேரமாக ஏனிந்த பணியை
பார்க்க வேண்டுமென
மண்டியிட்டு அமரும்
முன் சிந்தித்துப்பார்க்கலாம்..

கிளி சோசியம் சொல்லுபவர்
கூட செய்யும் தொழிலை மாற்றலாம்..
கூண்டுக் கிளிக் கூட இறக்கை வளர்ந்து
கூண்டை விட்டுப் பறக்கலாம்..

ஆனால்..
கூண்டுக்குக் எப்படி விடுதலைக்
கிடையாதோ பறவைகளிடமிருந்து..

மனிதர்கள் மடமையிலிருந்து
விடுதலை அடையும் வரை
மனிதர்கள் வாழ்க்கையும்
கூண்டாகவே இருக்குமன்றோ..!

“எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே – இன்னும்

எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே..”

“ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்..”!!!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾

‘ழ’ கரம்..! வேண்டுகோள்..!

எம்மொழியிலும் இல்லா
தனிச்சிறப்பு ‘ழ’ கரத்திற்க்கு
உள்ளது..

“பலம் நலுவி பாலில் விலுந்தது”
“தமில்”
“வாலைப்பலம்”

தவிர்த்து
தழிழ் என் தாய் மொழி
வாழைப்பழம் மஞ்சள் நிறம் என

‘ழ’ கரத்தை ‘ல’ கரமாக
உச்சரிக்காமல்
‘ழ’ கரமாக உச்சரிப்போமாக!

என்று சிறிய உறுதி மொழி எடுப்போம்

“தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா..”
என வீரமுழக்கமிட்ட..

நம் பாட்டன் பாரதியின்
நினைவு நாளில்..!!

வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾

மனக்கனவுகள்..!!

அரசியல்வாதி..
அடுத்தடுத்து எப்படி எவனை எங்கு
அடித்து பிடித்து மிதித்து ஏறுவது
அடுத்த பதவி எது
எத்தனை சாதி கட்சியுடன் கூட்டணியமைப்பது
எத்தனை இளிச்சவாயன் ஓட்டுகள்
தொகுதியில் உள்ளது
எவ்வளவு முதலீட்டு செய்து தேர்தலில்
எப்படி வெற்றி பெறுவது
எப்படி முதலீட்ட பணத்தை எடுப்பது
எந்தெந்த கட்சியுடன் அடுத்த தேர்தலில்
கூட்டணியமைத்து லாபத்தில் பங்கு பிரிப்பது
எப்படி தன் வாரிசுகளுக்கு சொத்து சேர்ப்பது என
அடுக்கடுக்காக கனவு காண்பது
அரசியல்வாதியின் மனக்கனவுகள்..!

வாழ்க்கையில்..
படித்துப் பட்டம் பெறுவது
படித்தவுடன் நல்ல வேலைக் கிடைப்பது
பணம் நிறைய சம்பாதிப்பது
பிடித்த உணவு உண்ணுவது
வண்ண உடைகள் உடுத்துவது
பட்டணத்தில் சொந்த வீடு கட்டுவது
பள பளவென நான்கு சக்கர ஊர்தி வாங்குவது
பிடித்த மெத்தப் படித்தவரை மணப்பது
பார்ப்போரிடம் அவரை பந்தவாக காட்டுவது
இது எல்லாம் நிறைவேறுமா என ஏங்குவது என நொடியில்
காணும் கனவுகளே
சராசரி மனிதனின் மனக்கனவுகள்..!

காதலில்..
கண்ணுக்கு அழகானவராக
இருப்பது
கண்டவுடன் மனதில் பதிந்து
வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க
செய்வது
இதயம் தட தடவென அடித்து
இவர் தான் எனக்கென்று பிறந்தது
காதல் சொன்னவுடன் சட்டென்று
சரி சொல்வது
இருவர் வீட்டிலும் இணைந்து
திருமணத்திற்க்கு சம்மதம் தருவது
பூங்காவிலிருந்து கடற்கரை வரை
ஒரு இடம் விடாமல் தடம் பதித்து
காற்றில் மிதப்பது
திருமணம் இனிதே அனைவரின் நல்லாசியுடன் நடைபெறுவது
என வண்ணங்களில் காணும் கனவுகளே
காதல் செய்பவர்களின் மனக்கனவுகள்..!

காணூம் கனவுகள் எல்லாம்
மனிதனுக்கு மனிதன்
மாறுபட்டாலும் மனம் மட்டும்
பல்லாயிரம் காதங்கள்
பயணப்பட்டு
காணூம் கனவுகளில்
சில நொடிகளிலேனும்
மனிதனை விரும்பியபடி
வாழ வைத்துவிடும்
மனக்கனவுகளுக்கு கதவுகள்
இல்லை அல்லவா..!!

-பிரியா பாஸ்கரன் 💕

சிரிப்பு!

பிரபஞ்சத்தில் அனைத்து உதடுகளுக்கும் தெரிந்த மொழி சிரிப்பு!

உதடு செய்யும் பணியில்
உன்னதப் பணி சிரிப்பு!

கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும்
கோடானகோடி மகிழ்ச்சி தரும்
“கொடை” சிரிப்பு!

சிரிப்பில் எத்தனையோ வகை
பகிர்கிறேன் இங்கு இதை..

உள்ளத்தைக் கொள்ளை கொண்டு
மனதைக் குதூகலமூட்டும்
குதலைச் சிரிப்பு..

சிந்தும் சிரிப்பில்
சில்லறைக் காசுகள் கொட்டும்
கல கல சிரிப்பு..

மயிலிறகாய் வருடி
புண்பட்ட மனதிற்கு
மருந்தாகும் புன்சிரிப்பு..

முகத்தை பொன் நகையாய் ஒளிர்விக்கும் ஒசையில்லா
புன்னைகைச் சிரிப்பு..

லொக்கென்று இரும்பி
புக்கென்று புறையேறும்
பக்கென்ற சிரிப்பு..

முள்ளிருந்தாலும்
ரோசா பூவாய் மலர்ந்து சிரிக்கும்
காதலின் ரோசப்பூ சிரிப்பு..

காண சுற்றி பல பேர் இருந்தாலும்
கணவனை கண்ட உடன்
கண்விழி மலர்ந்து செவ்விதழில்
பூக்கும் இளமுறுவல் மனைவின்
காதல் சிரிப்பு..

நாணம் கொண்டு கன்னம் சிவக்க
வைக்கும் கணவனின்
சில்மிசச் சிரிப்பு..

பிள்ளையின் வெற்றி கண்டு
மீசை முருக்கி இடிப்போல
உரக்கச் சப்தமிட்டு சிரிக்கும்
தந்தையின் பாராட்டுச் சிரிப்பு..

தினந்தோறும்
பரிவுடன் தலைக்கோதி
பாசமிகுதியில் நெற்றியில் இதழ் பதித்து
பாசமுடன் கன்னம் வழித்து சிரிக்கும்
அன்னையின் அன்புச் சிரிப்பு..

பேரப்பிள்ளைகள் செய்யும்
குறுப்புகளை கண்டு பொங்கும் பாட்டியின் பொக்கை வாய்ச் சிரிப்பு..

கண்கள் கண்ணீர் சுரந்தாலும்
கண்களுடன் உதடுகள் சேர்ந்து(பிரிந்து)
சிரிக்கும் ஆனந்தச் சிரிப்பு..

தோழர் தோழிகள்
அரட்டையுடன் ஆனந்தமாக சிரிக்கும்
கெக்க பிக்கச் சிரிப்பு..

சிந்தித்து தன் திறமைகளை
சிறப்பாக திரைப்படங்களில்
சிரித்தும் சிரிக்காமலும் நடித்து
நம்மை சிரிக்க வைக்கும்
நடிகர்களின் நகைச்சுவை சிரிப்பு..

அப்போ அப்போ அதிகாரிக்கு
சால்ரா தட்டி அர்த்தமில்லாமல் சிரிக்கும்
அசட்டுச் சிரிப்பு..

நாட்டை எதிரியிடமிருந்து
போரிட்டு வென்று சிரிக்கும்
வீரனின் வெற்றி சிரிப்பு..

சிறியோர் முதல் பெரியோர் வரை
சிரிப்போடு விருப்பமுடன் மனமகிழச்
செய்யும் பயிற்சி சிரிப்பு யோகம் சிரிப்பு..

காரிகையின் மனதைக்
களவாடிய மாயக் கண்ணனின் சிரிப்பு
கள்ளச் சிரிப்பு..

உதடுகள் குவியாமலும் ஒட்டாமலும்
இலக்கணத்தில் சிரிக்கும் சிரிப்பு
இதழ் அகல் வெண்பா சிரிப்பு..

மாபெரும் இதிகாசம்
மகாபாரதம் உருவாகக் காரணமான சிரிப்பு பாஞ்சாலி சிரிப்பு..

தமிழ்தாய் நமக்களித்த
பல நூல்களைக் கற்று
நம் அகம் அறிவு மலரும் சிரிப்பு
தமிழ் அன்னை நமக்கு ஈந்த
பேரானந்த சிரிப்பு..

அப்பப்பா சிரிப்பில் இன்னும் எத்தனையோ வகை இருக்கு..

கவியரசு கண்ணதாசனின்
“சிரித்து வாழ வேண்டும் பிறர்
சிரித்து வாழ்ந்திடாதே”..
என்பதை நினைவு கூர்ந்து..

பலச் சிரிப்புகளைச் சிரித்து..
சிலச் சிரிப்புகளான..

அகம்பாவத்தில் சிரிக்கும்
ஆணவச்சிரிப்பு..

எக்காளத்தில் சிரிக்கும்
ஏளனச்சிரிப்பு..

பிறர் குறைகளை நகைச்சுவையாக்கும்
நையாண்டி சிரிப்பு..

பாசங்கு செய்து பிறரை ஏய்த்து
சிரிக்கும் சாகசச்சிரிப்பு

சண்டைகளை உருவாக்கி சிரிக்கும்
வில்லங்கச் சிரிப்பு..

ஒயாமல் சிரிக்கும்
பைத்தியச் சிரிப்பு..

இவைகளைத் தவிர்த்து
கடவுள் நமக்களித்த
வரப்பிரசாதம் சிரிப்பு என உணர்ந்து..

இறுக்கமான இதயத்தின்
திறவுகோல் சிரிப்பு!

காசு கொடுத்து வாங்காமல் நம்மிடமே
கையிருப்பில் எப்போதும் இருக்கும்
“மருந்து” சிரிப்பு!

“வாய்விட்டுச் சிரித்தால்
நோய் விட்டுப் போகும்” – பொன்மொழி

“வாய்விட்டுச் சிரித்தால்
வாழுவோம் நீடுழி” – என்மொழி
என உரைத்து..

நாம் சிரித்து பிறரை
சிரிப்பில் மகிழ்வித்து
சிறப்புடன் நீடுழி
வாழ்ந்திடுவோமாக!!

-பிரியா பாஸ்கரன் 😃😬🙏🏾

இளமைத் தமிழில்…மை!

முதுமையில் தனிமை
தனிமையில் கடுமை
காலத்தின் கொடுமை
இளமையில் வறுமை
வறுமையில் நேர்மை
அதுவே பெருமை!

நிலவின் தண்மை
காற்றின் குளுமை
மலரின் மென்மை
யாருமில்லா தனிமை
தம்பதிகளின் வெம்மை
தேனிலவின் மகிமை!

இனமோ பெண்மை
இறந்தது ஆண்மை
அழகிய பதுமை
வயதோ பேரிளமை
வேண்டாமே வெண்மை
மறுமணமே மேன்மை!

மேகத்தின் கருமை
பொழியும் நீர்மை
வளரும் செழுமை
பயிர்களின் பசுமை
விளைவிக்கும் நன்மை
விவசாயிக்கு வளமை!

கல்வியின் துணைமை
தரும் தலைமை
உழைப்பில் தாளாண்மை(விடாமுயற்சி)
பின்பற்றும் வழுவாமை(நேர்மை)
செய்யும் கடமை
சேர்க்கும் வலிமை!

செல்வத்தில் எளிமை
அழித்தல் யான்மை(அகங்காரம்)
கொடையில் வண்மை
குணத்தில் நோன்மை
உள்ளத்தில் தூய்மை
அனைத்தும் மாட்சிமை(உயர்வு)!

ஊழலுக்கு உவமை
எங்கெங்கும் பொய்மை
தலைவிரித்தாடுது கொடுமை
அரசியலின் கயமை
அறிந்து மெய்ம்மை
ஓட்டிடுவது நம் உரிமை
செய்வோம் கடமை!

கண்ணுக்கு கண்மை
குரலில் இனிமை
பேச்சில் ஏசாமை
சொற்களில் வாய்மை
நடத்தையில் கோடாமை
அனைத்தும் அருமை!

அழகு ஆண்மை
அழகு பெண்மை
அழகு இளமை
அழகு வலிமை
அழகு பதுமை
அழகோ அழகு தாய்மை!

நிறத்தில் வெண்மை
மழலைக்கு பொம்மை
மங்கைக்கு ஒப்புமை
இரவுக்கு தோழமை
ஏகாந்ததிற்கு இனிமை
பெளர்ணமியில் முழுமை!

மனிதர்களில் தீண்டாமை
மனதின் கருமை
கொளுத்துவோம் மடமை
அழிப்போம் மோழைமை
ஒழிப்போம் பேதமை
போற்றுவோம் ஒற்றுமை!

மொழியில் தொன்மை
சொற்களின் இனிமை
அழகின் உடைமை
தனித்தமிழின் பெருமை
தமிழரின் உடமை
தருமே சர்வவல்லமை!!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾

மெளனம்..!

கனவில் கைகோர்த்த
காரிகையை நினைவில்
காதலுடன் கரம் பிடித்து
கணவனாகி காலமெல்லாம்
கண்ணான கண்மணியுடன் வாழ
கவிமடல் எழுதி
கண்ணோடு கண் பார்த்து
அவன் அவளிடம் கொடுக்க
அவள் நின்றாள் மெளனமாய் -அவனுக்கு
மெளனம் உயிர் கொல்வதாய்..!

இருகுடும்பங்கள் கூடி
இருமனம் கலந்து
திருமணம் நடந்து
தன்னந்தனிமையில் தேன் நிலவில்
கண்ணாளன் கண்ணாட்டியின்
கண்னோடு கண் கலந்து
இல்லறம் நல்லறமாக சிறக்க
கண்களால் சம்மதம் கேட்க
கன்னங்கள் செம்மையுற
நாணம் மேலிட
செவ்விதழில் சிறுநகையுடன்
தலைதாழ்த்தி நின்றாள்
நங்கை மெளனமாய் – அவள்
மெளனம் சங்கேத மொழியாய்..!

மதியிழந்து செய்த
மாபெரும் தவறினால்
மற்றவர் மனமுடைந்து
மறுக தவறிழைத்தவர்
மனம் பதறி
மன்னிப்பு கேட்க
மற்றவர் நின்றார் மெளனமாய் – அவர்
மெளனம் பெரிய தண்டணையாய்..!

நகமும் சதையுமாய்
நட்புடன் நல்லுறவாயிருந்த
நண்பர்கள் தங்களுக்குள்
நாவடக்கம் மறந்து
நழுவிய சொற்களில் பிணக்கு ஏற்பட
நட்பு நலிந்து அவர்கள் பிரிந்து
தனித்து மனம் வெதும்பி
நின்றார்கள் மெளனமாய் – அவர்கள்
மெளனம் மனதின் வலிகளாய்..!

நம் மனதை ஒருநிலைப்படுத்தி
நம் உடலை சடமாக பாவித்து
நம்மில் இருக்கும் சக்தியை
நாம் துல்லியமாக அறிந்து
நம் உள்ளுணர்வை கூர்மையாக்கி
நம்மை விழிப்புணர்வாளராக்கும்
நாமிருந்தால் மெளனமாய் – அங்கு
மெளனம் சிறந்த விரதமாய்..!

அகிம்சையின் ஆயுதமாய்..
சினத்தின் மருந்தாய்..
எண்ணங்களின் எதிர்ப்பாய்..
சந்தோசத்தின் சம்மதமாய்..
பிரச்சனையின் தீர்வாய்..
இழப்பின் இரங்கலாய்..
சிந்தனையின் சீற்றமாய்..
கலகத்தின் ஒழிப்பாய்..
தியானத்தின் வாயிற்படியாய்..
அருகனின் போதனையாய்..
இருப்பது மெளனமே ஆகுமே!!

வள்ளுவனின்
‘யாகாவாராயினும் நா காக்க’
பின்பற்றி..
பழமொழி
‘நுணலும் தன் வாயால் கெடும்’
உணர்ந்து..
மெளனம்
என்ற பிரபஞ்ச மொழியை
தக்க காலத்தில் உபயோகித்து
“மெளனமே உன்னிடம் அந்த மெளனம் தானே அழகு” என சங்கமம் ஆகுவோமாக!!

-பிரியா பாஸ்கரன் 🙏🏾