
அது ஒரு வைகாலம்..
விளைந்த பொன்னி அரிசியில்
வடித்த சுடச்சோறில்
வீட்டில் உருக்கிய பசு நெய்யுடன்
பருப்பை குழைத்து
சிறு வயதினில் உனைக்காட்டி
ஊட்டிடுவாள் நிதமும்
கூடவே உரைத்திடுவாள்
பாட்டி வடை சுட்ட கதைதனையும்
அன்னை..
அன்றிலிருந்து ஆனாய்
என்னுடன் கதைக் கேட்டு
விளையாடும் தோழியாய்!!
அது ஒரு இனிய மேககாலம்..
நண்பர்கள் கூட்டமுடன்
லொடலொட என்று பேசி
கலகல என
கிண்கிணியாய் சிரித்து
நொண்டி ஆட்டம் ஆட..
சட்டென்று
சிலுசிலு காற்று வீச..
கீசுகீசு என குருவிகள் கத்த..
சடசட சாரல் மழை தூவ..
படபட என இமைகள் கொட்ட..
தொபதொப என நனையாமலிருக்க..
திபுதிபு என நாங்கள் ஓடி..
புசுபுசு வென்று மூச்சு வாங்க..
வாசல் திண்ணையில்
வாகாக சாய்ந்து கொண்டு
அமர்ந்தோம்!
அன்னாந்து வானத்தை பார்த்தால்
முக்காடு இல்லாமல்
முழுதும் நனைந்து
நிர்மலமான முகத்துடன்
பளபள ஒளி வீசி..
தகதக மின்னி..
தளதள அழகுடன்..
வீற்றிருப்பாள் என் தோழி
சந்திரமதி என்னுடன் கதைகேட்க
அதனால்..
நான் அம்மா என கத்த..
மொறுமொறு தோசை
அம்மா சுட சுட..
சுடசுட தோசையை
கமகம சாம்பாருடன்
பலபல கதைகள் பாட்டி
சொல்லசொல்ல கேட்டுக்கொண்டு
கடகட வென
சாப்பிட்டோம்!
அது இன்னும் ஒரு சாயங்காலம்..
அந்தி மாலை அடிக்கடி நடக்கும்
மின்வெட்டு..
அதுவும் அன்று பெளர்ணமி..
அடுத்த நாள் விடுமுறை என்றால்
இரெட்டிப்பு சந்தோசம்..
முழுமதி என் தோழி
உன் எழிலை காண
ஓடோடி வந்து முற்றத்தில்
எட்டி பார்க்க எடுப்பான தோற்றத்தில்
ஓய்யாரமாய் உயரத்தில்
பளீர் சிரிப்புடன் பளப்பளவென்று
பாங்காக நீல வண்ண
வான் கடலில்
வெண்மேக அலையினிடையே
நங்கூரமிட்டு நாங்கள் கும்மாளம்
போடுவதை பார்க்க காத்திருந்தாய்!!
அப்பாவும் அண்ணாவும்
கயிற்று கட்டிலை
வாசலில் எடுத்து போட
அக்காள்கள் பாய்களை
முற்றத்தில் விரித்து விட
தம்பி பையன் அக்கம்
பக்கத்து வீட்டில்
மளமள என நிலாச்சோறு
சேதி சொல்ல
அண்ணன் தம்பி
அக்காள் தங்கையுடன்
அடுத்த வீட்டு வாண்டுகளும்
எதிர் வீட்டு பொடிசுகளும் இணைய
அனைத்து சொந்த பந்தங்களும்
குதூகலத்துடன் கூட..
இரண்டு வீடு தள்ளி இருக்கும்
பெரியம்மா கொண்டு வந்த
கைமுறுக்கு கடலை உருண்டையுடன்
அமர்களமாய் தொடங்கியது
சீட்டுக் கச்சேரி..
இந்த அமர்களத்தில் நான் இருக்க
என் தோழி நிலா பெண்னை மறக்க..
அவளோ காற்றை தூதுவிட்டு..
சிலுசிலு காற்று வீசி..
உடல் சிலிர்த்து..
கழுத்து சிலுப்பி..
தலைதூக்கி
நான் அவளைப் பார்க்க
அவள் செல்லச் சண்டையிட்டு
வெண்மேக அலையில்
ஒளிந்து மறைந்து
கண்ணாம்பூச்சி ஆடினாள்
என்னுடன்!
அம்மா அடுக்கடுக்காக
சுடச்சுட கேழ்வரகு
அடை சுட்டு அவியலுடன்
அதிரசமும்..
அடுத்த வீட்டு அத்தை
அவித்த காஞ்சிபுர இட்லி
அரைத்த புதினா சட்னியையும்..
எதிர் வீட்டு சித்தி
எலுமிச்சைப் பிழிந்து
தாளித்த இடியாப்பம்
தேங்காய் பாலுடன்
வகை வகையான உணவுகளை
கொண்டுவர குடும்பமாய்
அமர்ந்து கதம்பமாய் கலந்து
வாயக் கொள்ளாமல்
பலகாரங்களை உண்ண
பாட்டியோ எங்கள் லட்சுமி
கொடுத்த பாலைக்
கெட்டி தயிராக்கி சோறுடன்
பருப்பு துவையலையும்
உருட்டி உருட்டி கைகளில்
தர தர அதை வாங்கி
லபக்கு லபக்கென்று விழுங்கிடுவோம்
பொடிசுலிருந்து பெரிசுவரை..
சுண்டக் காய்ச்சிய பசும் பாலை
சூடாக அருந்திவிட்டு
அடுத்து பாட்டுக் கச்சேரி
களைகட்ட தொடங்க..
நான் பாடினேன்..
“இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே..”
கொண்டாட்டம் முடிந்தது
விடியற்காலம்..
அதுவே வாழ்வின் வசந்த காலம்..
அது ஒரு பொற்காலம்..
மீண்டும் வருமா அக்காலம்..
மீண்டும் வர முயற்ச்சிப்பேன் இக்காலம்..
இல்லையேல் அடுத்த தலைமுறைக்கு
ஆகிடும் கற்காலம்..
நெஞ்சில் பசுமையாக இருக்கும் நெடுங்காலம்..
நினைவில் நிலைத்து நிற்கும் இறுதிக்காலம்..
அது ஒரு அழகிய நிலாக்காலம்!!
-பிரியா பாஸ்கரன் 🌙 🌝 🙏🏾