
தூரிகைக் கொண்டு
காரிருளைப் போக்க
கதிரவன் துணையுடன்
வான்வெளியில்
வ(ரை)ந்த காரிகை நீ!
தங்கத்தை உருக்கி
ஆபரணமாக்கி பூட்டி
வானில் உலவ விட்டு
ஆர்பரிக்கும் அழகுடன்
மினுமினுக்கும்
தாரகை நீ!
வளர் பிறையில்
எடைக் கூடினாலும்
தேய் பிறையில்
எடைக் குறைந்தாலும்
எப்பொழுதும் எழிலுடனிருக்கும்
அழகி நீ!
அகிலத்தை ஒரு நாள்
ஆழ்ந்த கருமையில் அமிழ்த்தி
அடுத்த நாளில்
உன் பிறை முகத்தை
காட்டி மயக்கும்
மாயக்காரி நீ!
ஆகாய அந்தபுரத்தில்
நட்சத்திர தோழிகள்
அரண் அமைத்து
நலமுடன் புடை சூழ
வீற்றிருக்கும்
அரசி நீ!
நிதமும் மழலைக்கு
கதைச் சொல்லி
சோறு ஊட்ட
அன்னைக்கு உதவிய
விளையாட்டு
பொம்மை நீ!
கற்பனையே தெரியாத
காதலனை
காதல் கடிதம் எழுத
கற்று கொடுத்து
கவிஞன் ஆக்கிய
ஆசான் நீ!
மனதுக்கு மட்டுமே
அறிந்த ரகசியத்தை
மகிழ்வுடன்
பகிர்ந்து கொள்ள
துணை நாடும்
தோழி நீ!
நீல வண்ண
நீள வானத்தில்
வெண்மேகத்தில்
ஒளிந்து மறைந்து
கண்ணாம்பூச்சி ஆடும்
குழந்தை நீ!
கவிஞ்சனின்
கற்பனைக்கு கருவாகி
கவிதைகளில்
காவியங்களில்
உலா வரும்
கதாநாயகி நீ!
காசு வாங்காமல்
மின் வெட்டு
இல்லாமல்
குளுமை தந்து
ஒளி கொடுக்கும்
மின்சாரம் நீ!
எல்லையில்
நாட்டை காக்கும் தலைவனும்
வீட்டில் இருக்கும் தலைவியும்
ஒரே நேரத்தில்
ஒரு சேர பார்க்கும்
ஒரே சொந்தம் நீ!
இருள் பிரிந்தும்
பிரியாமல் இருக்கும்
அதிகாலை வேளையில்
மலர்ந்து மணம் பரப்பும்
மலர்கள் பார்க்கும்
முகம் நீ!
அந்தி மாலையில்
அழகு மலர்ச் சோலையில்
தன்னந்தனிமையில்
தம்பதிகளின்
தேன்நிலவில்
தனிமையை திருடிய
கள்வன் நீ!
சிவனின் சடைமுடியில்
சாபம் நீங்கி
சட்டமாக
அமர்திருக்கும்
எழில் மிகு
முடி முள் நீ!
“நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா;
மலை மீது ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா;
தமிழ் பள்ளி தேடி வா
தமிழ் படிக்கலாம் ஓடி வா;” என்று
மழலை மலர்களுக்கு
தமிழ் சொல்லி கொடுக்கும்
பாடம் நீ!!
-பிரியா பாஸ்கரன் 🌙 🙏🏾









