பழைய ஊர்…

பழைய ஊர்…

சொந்தங்களால் நிறைந்த வீடுகள்
நகரை நாடிச் சென்ற
மாந்தர்களால்
அநாதையாக்கப்பட்டு
வெறிச்சோடிக்கிடக்கின்றன

மூன்று போகம் செழித்து
விளைந்த நிலங்கள்
பயிரிடப்படாமல்
மலடாகக் கிடக்கின்றன

காளை மாடுகளையும்
கறவை மாடுகளையும்
குளிப்பாட்டி அழகு பார்த்த ஏரி
வானம் உரசிப் பறக்கும்
முன்பு மீன் தின்னும்
பறவைகளை மட்டுமே
தினம் பார்க்கிறது

என்றோ விழுந்த வாளியும்
சின்ன வாண்டுகள் எறிந்த
சில நாணயங்களும்
குடிநீர் கிணற்றில்
தூர்வாரப்படாமல்
கிடக்கின்றன

பக்தன் இல்லாதக் கோவிலில்
வெறுமைக்குக்
காட்சியளித்து
கொண்டிருக்கிறார் கடவுள்

பெயர் தெரியாத
வலசை வந்த பறவையொன்று
பழைய ஊரின் பழைய மரத்தில்
முட்டையிட்டுக்
குஞ்சு பொரித்து
அந்தப் பழைய ஊரைப்
புதிய ஊராகத் தத்தெடுத்துக்கொள்கிறது

~பிரியா பாஸ்கரன், வெம்பாக்கம்

சொம்பு விடு தூது…

பறந்து பறந்து வந்தாலும்
பத்திரமாய் விழாமல்
நிற்பேன்…

எத்தனை அடிக் கொடுத்தாலும்
தாங்கும் சொம்பு…

கோபமான உனதழகை
பார்க்காமல்
குறுக்கே வந்ததேனோ
இந்த குடம்…

வல்லவளுக்குச்
சொம்பும் ஆயுதம்…

புலியை முறத்தால்
விரட்டினாள் அன்று
என்னைத் தவலையால்
மிரட்டினாள் இன்று…

கலம் பறந்தது
காலிப் பயலை
விரட்ட..

~பிரியமுடன் பிரியா

கலை பயின்றான்…

சிறிதான பாத்திரத்தைச் சிக்கெனப் பெண்ணோ
எறியப்; புருசன் இவனோ – அறிந்ததும்
பட்டெனவே சாய்ந்து பயின்றான் கலை;கலம்
சொட்டையும் ஆனதே இன்று…

~பிரியமுடன் பிரியா

மழை விட்ட பிறகும்…

அவன் வரிகள்…

கண்ணாடி தொட்டியில்
நான் வளர்க்கும் மீன்கள்
என் மீது கோபம் கொண்டன.
ஏன் அந்த இரண்டு மீன்கள் மட்டும்
இந்த தொட்டிலில் இல்லை
என்று உன் கண்களைப் பார்த்து.

நீ பறித்த ரோசாவைப் பார்த்து
தோட்டத்தில் உள்ள
மற்ற ரோசாக்கள் புலம்புகின்றன…
நீ ஏன் ஒற்றை ரோசவை மட்டும்
சூட்டிக் கொள்கிறாய் என்று.

அவள் வரிகள்…

ஆழமான நேசம் மட்டுமல்ல
அதை உன்னிடம் காட்டாமல்
மறைக்கும்
அதி ஆழமான மௌனத்தையும்
நீதான் கற்றுத் தந்தாய்.

மழை விட்ட பிறகும்
புல்வெளியில் ஓட்டியிருக்கும்
மழைத்துளிகளைப் போல
என் அலைபேசி வைத்திருக்கிறது
நீ அழைத்த அழைப்பை.

~பிரியமுடன் பிரியா 💕

முடிவில்லா பயணம்…

அந்திசாயும் மாலையும் அழகாய் குளிர்ந்திட
முகிலோ பொதிகையோடு முட்டி விளையாட
பசேலென மரங்கள் பட்டாடை விரித்திட
பளீரென தூவானம் பன்னீராய்த் தெளித்திட
சலவைக் கல்லாய் சாலை மின்னிட
முடிவில்லா பயணம் முழுதாய் சென்றிட
ஆனந்தம் கொண்டது ஆசை மனதே..!

~பிரியமுடன் பிரியா 💕

நிலைமண்டில ஆசிரியப்பாவில் அமைந்த பாடல்.

அன்பைத் தேடி…

அன்பைத் தேடி…

நெருக்கமானவர்களுக்கு
அன்பைத் தவிர
வேறொன்றையும்
பரிசாகத் தந்ததில்லை
ஆனாலும்
நிராகரிப்பு மட்டுமே
திரும்பக் கிடைக்கிறது

நிராகரிப்பின் வலி
மனதில் ஏறிக்கொண்டேயிருக்க
வற்றாத சீவநதியாகின்றன
கண்கள்

மழை நின்ற நள்ளிரவில்
இரைதேடும் பூனைக்குட்டிபோல்
எனக்கான அன்பை
மனம் தேடியலைகிறது

காலைச்சுற்றும் நாய்க்குட்டியாய்
திரும்பத் திரும்ப
எண்ணங்கள் அவர்களைச் சுற்றியே
பயணம் செய்கிறது
அன்பு எப்பொழுதாவது
அங்கீகரிக்கப்படும் என்ற நினைப்புடன்.

பிரியா பாஸ்கரன், வெம்பாக்கம்

மகிழ்ச்சி எது…

எதிலும் மகிழ்ச்சி
காண்பவர்கள்
பெண்கள்…

பெற்றவர்களுக்கு மழலையாய் என்றும்
இருப்பதில் மகிழ்ச்சி

படிப்பதில் வல்லவராய் இருப்பதில் மகிழ்ச்சி

நட்புடன் இன்பமாய் ஆடி பாடுவதில் மகிழ்ச்சி

அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்பதனை உடைத்து பட்டம் பெற்று பதவி வகித்ததில் மகிழ்ச்சி

இருமனம் இணைந்த திருமணத்தில் இணையருடன் வாழ்வாங்கு வாழ்தலில் மகிழ்ச்சி

புலம் பெயர்ந்து மறுதாய் வீடான மாமியார் வீட்டிற்குச் சென்றதில் மகிழ்ச்சி

பிள்ளைகளையும் கணவனையும்
இரு கண்களாய் போற்றி இன்பத்தில் திளைப்பதில் பெரும் மகிழ்ச்சி

தன்னம்பிக்கையுடன்
தளராது செய்யும்
தொழிலில் முனைந்து
முன் செல்வதில் மகிழ்ச்சி

கடல் கடந்து வந்து
வாய்த்த வாழ்வில்
இன்னல் பல கடந்து
வாழ்வதில் மகிழ்ச்சி

அடாது மழை பெய்தாலும்
விடாது பணி பெய்தாலும்
பொங்கல் தீபாவளி
கொண்டாடுவதில் மகிழ்ச்சி

பயின்ற கலாச்சாரத்தைப்
பண்பாட்டை அடுத்த
தலைமுறைக்கு
எடுத்துச் செல்வதில் மகிழ்ச்சி

தேவையானதை வாங்கி
தேவையற்றவையும்
சில நேரம் வாங்கி
சுய அலசலில் ஈடுபடுவது மகிழ்ச்சி

மகிழ்ச்சி என்றால் என்ன கேள்விக்குக்
கணவனிடம் இதைத்தான் நான் எழுதினேன் எனச் சொல்லும் முன்னே
நீ இப்படி தான் எழுதியிருப்பாய் என அவர் சொல்லக் கேட்கும் தருணம் மகிழ்ச்சி

பிடித்த உறவிடம் செல்லச் சண்டையிடுவதில் மகிழ்ச்சி

உறவுகளைப் பொக்கிசமாய் கட்டிக் காப்பதில் பெறும் பெரும் மகிழ்ச்சி

எதைச் செய்தாலும்
திருதச் செய்வதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி

சுதந்திரமாக எண்ணத்தைப் பகிர்வதில் மகிழ்ச்சி

எந்தப் பணியாயினும்
அருகன் இட்ட கட்டளையாய்
செவ்வனே செய்வதில்
பெரும் மகிழ்ச்சி..!

மகிழ்ச்சி உள்ளத்திலிருந்து வருகிறது. தீதும் நன்றும் பிறர் தர வரா
என்பதைக் கடைப்பிடிக்க
முயல்வது மகிழ்ச்சி..!

இறுதியில் எல்லாம் அவன் செயல் என விட்டுவிடுவதில் பேரானந்த மகிழ்ச்சி..!

~பிரியமுடன் பிரியா 🙏🏻

ஏகாந்த இரவு…

ஏகாந்த இரவு..
வெண்ணிலவை வளைத்தே
தன்நிலவை அழைத்து
வரவை எதிர்பார்த்தே
தனிமைக்கு இனிமைசேர்க்கக்
காத்திருக்கும் கலைமான்..!

எட்ட இயலாத
வட்ட நிலவே உன்னை
சட்டத்தில்
படம்பிடித்தேன்..!

வாராயோ வெண்ணிலாவே
போவோமா ஊர்வலம்…

– பிரியா 💕

கரும்பினும் தித்தித்த…

கருவில் உருவான காவியம் நீயே
கரும்பினும் தித்தித்த கண்ணே – உருமேனி;
பிஞ்சான கால்கள் பதிக்கத் தடம்;காயம்
நெஞ்சிலே ஆறி விடும்…

பன்னீர் குழைத்த பசும்பொன் மலராக
என்னவன் அச்சில் எடுத்தவனே; – சன்ன
சிலையில் அதிதேனும் சிந்தும் இதழில்
கலைநயம் கண்டேனே நான்…

மழலைமொழி பேசும் மரகத கண்ணும்;
குழகு சிரிப்பில் குறும்பு – தழுவி
ஒழுகியதே எச்சிலும்; ஒற்றினானே முத்தம்;
மெழுகாய் உருகினேன் நான்…

உருமேனி – இறைவன்
சன்ன – மெல்லிய
குழகு – அழகு

~பிரியமுடன் பிரியா 💕

அலைநீர்…

மலரும் நினைவில் மனமும் உழல
அலறும் கடலில் அடிக்கும் – அலைநீரே;
அக்கரைப் பச்சையாய் அன்று நினைக்கவே
இக்கரை என்ன நிறம்?

~பிரியா