விழுது உறவாகி…

விழுது உறவாகி
வேரூன்றித்
தாங்கியிருக்கும் வீடு…

அடுத்த சந்ததிக்கு
இயற்கைச் சொத்தாய்
விட்டுச்சென்ற விருட்சம்…

உதிர்ந்த சுண்ணாம்பும்
உடைந்த செங்கல்லும்
உரைக்கும் மடமையின்
உச்சம்தனை…

வாழ்ந்த வீடு
வரலாறாக்கப்பட்டது
புலம் பெயர்ந்த
மக்களால்..

வளைந்து கொடுக்காமல்
நிமிர்ந்து நிற்கும்
கம்பீரமாய் ஆலம்
நேற்று இன்று நாளை…

உயிரோவியமாய் இருந்தது
அன்று
கலைந்த ஓவியமாய்
இன்று…

கயிற்றுக் கட்டில்
கோழி சேவல் கூறும்
எஞ்சியிருக்கும் கலாச்சாரம்…

ஒவ்வொரு முறையும்
கடந்து செல்கிறோம்
திண்ணை சொல்லும்
கதையை மறந்து…

வேர்களைத் தேடிச்
செல்லும் சந்ததிக்கு
தலைமுறைதத்துவமாய்
ஆணிவேராய்
இருக்கு ஆலம்…

தலைமுறைதத்துவமாய் – வழிவழியாய்

~பிரியா பாஸ்கரன்

யாதுமாய் விருட்சம்…

கூவென கூவும்
குருவிக்குக் கூடு
காகாவெனக் கரையும்
காகத்திற்குக் கிளை
கதிரவன் வெயிலுக்கு
இளைப்பாரும் நிழற்குடை
ஏகாந்த இரவிற்கு
அழகிய இனிமை
கானம் பாடும்
காற்றுக்கு நடனம்
மழைநீரை ஆவியாக்கப்
பளிச்சிடும் மேகம்
விளையாடும் மழலைக்கு
விழுதாக ஊஞ்சல்
பொம்மை ஒளிக்க
இரகசிய மறைவிடம்
திண்ணை வம்புப்பேசும்
தாத்தாவிற்குத் மெதுவாய்
தலையாட்டும் தோழன்
பாக்குஇடிக்கும் பாட்டிக்கு
ஊங்கொட்டும் உறவு
வியர்வை சிந்தி
உழைக்கும் அம்மாவிற்கு
முந்தானைத் தலைப்பு
மனம்பாரம் கொட்டும்
தந்தைக்கு மருந்து
ஊர்நாடி செல்லும்
புலம் பெயர்ந்தவருக்கு
மடிதாங்கும் அன்னை
யார்விட்டுச் சென்றாலும்
வேர்விட்டு வீற்றிருக்கும்
யாதுமாய் விருட்சம்..!

~பிரியா பாஸ்கரன், வெம்பாக்கம்

தடம்…

துணையென வந்த திரண்டலை எங்கே
இணையெனக் கேட்டது என்கால் – அணைத்து;
தனியாய் பதித்தேன் தடத்தை அவனின்
இனிமை நினைவுகள் கோர்த்து…

~பிரியா பாஸ்கரன், வெம்பாக்கம்

முற்றத்தின் இராகம்…

வானத்தின் சிரிப்பு
பூமியில் சிதறியது…

உலரும் குடைச்சுற்றி
நீரவரையும் ஓவியம்…

முற்றத்தில் அண்டாக்கள்
சாளரத்தின் இராகம்…

வாசலின் ஓடையில்
கப்பல்களின் ஊர்வலம்…

விட்டத்தின் குடை
விரிந்தது சுதந்திரமாய்…

ஒவ்வொரு துளியிலும்
உயிர்தொடும் உணர்வு…

~பிரியமுடன் பிரியா 💕

சுழியம்…

மனதைக் களைந்தேன்
ஆணவம் புலப்பட்டது
ஆணவம் களைந்தேன்
அகம்பாவம் புலப்பட்டது
அகம்பாவத்தைக் களைந்தேன்
உண்மைப் புலப்பட்டது
உண்மையைக் களைந்தேன்
நான் புலப்பட்டது
நானை களைந்தேன்
மாயை புலப்பட்டது
மாயையைக் களைந்தேன்
சுழியம் புலப்பட்டது

~பிரியமுடன் பிரியா

நண்பேண்டா

நண்பேண்டா…!

உன் தட்டு என் தட்டு
உன் உணவு என் உணவு
உன் உடை என் உடை
உன் உறவு என் உறவு
உன் நண்பன் என் நண்பன்
உன் வெற்றி என் வெற்றி
உன் பலம் என் பலம்
உன் வலி என் வலி
உன் சிரிப்பு என் சிரிப்பு
உன் தடம் என் தடம்
உன் மௌனம் என் தவிப்பு
உன் தோல்வி என் துன்பம்
உன் இருள் என் வெளிச்சம்
உன் தனிமை என் துணை
உன் ஊக்கம் என் ஆக்கம்
உன் விருப்பம் என் கடமை
உன் புகழ் என் கனவு
உன் ஆனந்தம் என் பேரானந்தம்
உன் உயிர் என் சுவாசம்
உன் நினைவு என் சுகம்..!!

~பிரியா 💕

வேர்போல நட்பு…

வேர்போலே நட்பு…

சந்தேகப் பட்டுவிட்டுச் சண்டையிட்டு உள்ளத்தில்
குந்தகம் தோன்றக் குழிபறித்து – கொந்தளிக்கச்
சந்தோடம் இல்லாமல் சங்கடம் தந்தாலே
சிந்தித்துக் கொள்ளுக நட்பு…


பிரிந்தே இருக்கப் பிரியாது இருப்போம்
பிரியமாய் உள்ளத்தில் பேசி – அரிதாக
பார்த்தே உணர்வில் பழகியதே ஆழமாய்
வேர்போலே ஊன்றியதே நட்பு…

~ பிரியா 💕

புல்லின் முகத்தில்…

புல்லின் முகத்தில்…

புல்லின் முகத்தில்
அழகுப் பொட்டு…

பார்ப்பதைப் படம்
பிடிக்கும் புகைப்படக்காரர்…

விட்டுப்பிரிந்து செல்லும்வரை
ஒட்டி உறவாடுமுறவு…

ஒருநொடியாவது சூரியனை
அடக்கும் தன்னுள்..

இலையைத் தூளியாக்கிக்
கொள்ளும் மழலை…

நிலா தெளித்த
பன்னீர் துளி…

~பிரியமுடன் பிரியா 💕

வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்…

விழுந்த எச்சத்தில் எழுந்தேன் விருட்சமாய்
விரிந்த விருட்சத்தில் துளிர்த்தேன் இலைகளாய்
இலையின் துளை வழியில் மேகத்திற்கு நீர் திவலையாய்
தழைத்த கிளையில் நிழல் தரும் குடையாய்
இருந்தேன், பின் ஏனடா எனை வெட்டுகிறாய்?

கனிந்த பழத்தினில் சுவை தரும் உணவாய்
வெளியிட்ட காற்றில் உன் உயிர் சுவாசிக்கும் சுவாசமாய்
ஊன்றிய விழுதினில் உன் சந்ததி ஆடிடும் ஊஞ்சலாய்
இருந்தேன், பின் ஏனடா என் உயிரைப் பறிக்கத் துடிக்கிறாய்..?

மலர்ந்த அன்பில் தம் பெயர்களைப் பதிக்கும் நினைவுச் சின்னமாய்
பாடும் பறவையில் எனைத் தேடி வந்து கூடும் சரணாலயமாய்
மலர்ந்த மலரில் மகிழ்வுடன் இறைவனுக்குச் சூடிடும் மாலையாய்
ஆண்டவன் குடியிருப்பதில் உனக்கான ஆலயமாய்
இருந்தேன், பின் ஏனடா எனை வீழ்த்த நினைக்கிறாய்..?

உதிர்ந்த மலரில் பூமித்தாய்க்கு அர்ப்பணிப்பாய்
விழுந்த இலையில் சருகாகி பயிருக்கு உரமாய்
முறிந்த கிளையில் அடுப்புக்கு விறகாய்
இருந்தேன், பின் ஏனடா எனை அழிக்க அலைகிறாய்?

மனிதம் மறந்த மானிடா மரந்தானென்று வெட்டினாயோ?
உனைக் காக்க நின்ற எனைச் சாய்க்க நினைத்தாயோ?
வேரோடு வீழ்த்தினாயே வீழ்வேனென்று நினைத்தாயோ?
வீழ்ந்தாலும் விதையாய் விழுந்து விருட்சமாய் வளர்ந்து
மகிழ்வாய் தொண்டு செய்வேன் உன் நலனுக்காய்..!

யாவரும் ஒன்றே…

யாவரும் ஒன்றே

சுவாசம் வேறானாலும்
சுவாசிக்கும் காற்று ஒன்றுதான்
கண்கள் இரண்டானாலும்
பார்வை ஒன்றுதான்
நிறம் வேறானாலும்
குருதியின் நிறம் ஒன்றுதான்
நாம் வேறானாலும் நாம் அனுபவிக்கும் இயற்கை ஒன்றுதான்

அப்படியிருக்க
அன்பு மறந்ததேன்?
ஆங்காரம் கொண்டதேன்?
இரக்கம் மறந்ததேன்?
ஈனமாய் நடந்ததேன்?
உயிரை மதிக்காததேன்?
ஊருவிட்டுவந்ததை மறந்ததேன்?
ஏற்றத்தாழ்வு பார்ப்பதேன்?
ஏறிமிதித்து வாழ்வதேன்?
ஐம்புலன் அடக்காததேன்?
ஒற்றுமை மறந்ததேன்?
ஓமுடிவு செய்வதேன்?
ஔவியம் பழகியதேன்?

மனிதம் மறந்த மானிடா
மண்ணுக்கு பாரமாய் வாழும்
நீ என்ன செய்வதாய் உத்தேசம்…?
காழ்புணர்வு மறந்து
கலவரம் மறந்து
இனம் மொழி மறந்து
நல்லுறவிற்கு வித்திடும் விதையாகி
விருட்சமாய் வளர வேண்டுகிறேன்
அவன் தாள் பணிந்து..!

ஓமுடிவு – அழிவு

-பத்மபிரியா பாஸ்கரன்