https://www.nakkheeran.in/360-news/illakiyam/poems-about-farmers-priya-baskaranவிவசாயிகளுக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவிஞர்கள் சிற்பி, இந்திரன், யவனிகா ஶ்ரீராம், யுகபாரதி, ஆதவன் தீட்சண்யா, சோலைமாயவன் மற்றும் பல மூத்த, பிரபலமான கவிஞர்கள் எழுதிய கவிதைகளுடன் எனது கவிதையும் புக் டே இணைய இதழ் ஆசிரியர் *திரு. நா. வே. அருள்* அவர்களால் தொகுக்கப்பட்ட *கலப்பை புரட்சி* என்ற நூலை *பாரதி புத்தகாலயம்* வெளியிட்டு இருக்கிறது.
அதற்கு நான் எழுதிய நூல் விமர்சனம் *நக்கீரன் இணைய இதழில்* வெளி வந்துள்ளது. இங்கே உங்கள் பார்வைக்காய்.

பறவையின் சிறகசைவென
கட்டுண்டிருக்கிறது சட்டங்களுக்கிடையில்
உறவுகளுக்கான எனது நேசம்

கோடாரிக் காம்பின் கூர்முனையாய்ச்
சொற்கள் பதம்பார்க்க
நொறுங்கி உடைகிறது மனது

வெளியேறுகிறது நேசத்தின் உயிர்
துளி துளியாய்
அவர்கள் சொற்களில் சிதறி

அள்ள நினைப்பது சாத்தியமா
பாதரச கடலில் கரைந்த சொற்களை

பழுதடைந்த கண்ணாடியைப்
பிசின் கொண்டு சரிசெய்தாலும்
வெட்ட வெளிச்சமாய் விரிசல்

நிற்க,
ஆறாத வடுக்களைச்
சுமக்கும் நெஞ்சத்திற்கு
ஆயுளுக்குமான
நிபந்தனையற்ற நேசத்தின் விதி

~ப்ரியா பாஸ்கரன்

வியக்கிறேன்
அகன்ற பிரபஞ்சத்தில்
எதிர்கொள்ளும் பேரிடர்களை

முளைக்காத சிறகுகளால்
பறக்கிறேன்

சாலைக்குக் கொணர்கிறேன்
எல்லையில்லாத வானை

எதிர்நீச்சலாகிறேன்
அலையில்லாத கடலில்

வளைந்தோடும் பாதையில்
நடையாகிறேன்

இப்பொழுது
“சும்மா இரு” அதட்டுகிறாள் ஔவை

முட்டி மோதி
போர்வையினுள் முடங்குகிறேன்
பேருறக்கம்

அந்நொடியில்
அண்டப் பெருவெளியிலிருந்து
ஒரு துளி ஆற்றல்
இறங்குகிறது என்னுள்
பெருமழையென

~ ப்ரியா பாஸ்கரன்

நீண்ட வெக்கைக்குப்பின் சிறிது காற்றில்
தன்னை உலர்த்திக் கொண்டிருந்தது
இன்றைய நாள்

அடவுகளைப் பயின்று
துளித்த வியர்வைத் தணிக்கச்
சன்னலில் திரை விலக்கி
ஆசுவாசப்பட எத்தனிக்கிறாள் மகள்

உரத்த குரலில் அடுத்து சண்டைப் பயிற்சிக்கு ஆயத்தமாகி
முண்டியடித்து உடைமாற்றி
நான்காவது ஆட்டத்தைப்
பூமி அதிர அதிர ஆடுகிறாள்

பிறகு
கணக்கு பாடத்தை முடிக்கலாம் சடுதியிலென அழைக்க
எந்திரமாய் நிற்கிறாள்

முனகலுடன் ஆரம்பமாயிற்று
கூட்டல் பெருக்கல் குறியீடுகள் சதங்கையின்றி ஆடத்தொடங்குகின்றன

ஒரு பக்கம் முடித்து மறுபக்கம் செய்து
நிமிரும் முன்னர்
ஆங்கிலம் அறிவியலென
மீளக் குவிகின்றன சுமைகள்

சில மணி நேரக் கடும் பயிற்சிக்குப் பின்னர்
களைத்துச் சோர்ந்து
கதவுக்கு வெளியே எட்டிப் பார்க்கிறாள்

மாலை முழுதும் விளையாட்டு என வழக்கப்படுத்திக் கொள்
பாப்பா என்று
காற்றில் மிதந்த வந்த பாடலில்
வெக்கை இருளெனக்
கவ்வத் தொடங்கியது

~ ப்ரியா பாஸ்கரன்

இரண்டு குழந்தைகள்
ஒரே பொம்மை வேண்டுமெனச்
சண்டையிடுகின்றன
அவ்வளாகத்தில்
ஒருவருக்கொருவர் பிடித்திழுக்க
கைகள் பிரிந்து போய்
கீழே விழுந்து காலடியில்
மிதி பட்டு அழுக்காகிறது
பணிப்பெண்ணொருத்தி ஓடிவந்து
அப்பொம்மையை மென்மையாய்
எடுத்தணைத்து
மென்குரலில் வலிக்கிறதா உனக்கென்று
உரையாடியபடியே
பொம்மையின் பழுதுப் பகுதிகளை
தையலிட்டு
அழுக்கைக் களைகிறாள்
கவனித்த குழந்தைகள்
மெதுவாய் தடவியபடி
ஒத்தடமிட்டு மருந்திடுகின்றன
அப்பொம்மைக்கு

~ ப்ரியா பாஸ்கரன்